பிரதமர் அலுவலகம்

புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிரதமர் ஸ்வநிதி திட்டப் பயனாளிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 14 MAR 2024 7:49PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான ஹர்தீப்சிங்பூரி அவர்களே, பகவத் காரத் அவர்களே, தில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவர்களே, இங்கு திரண்டிருக்கும் பிரமுகர்களே, நாட்டின் பல நூறு நகரங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தெருவோர வியாபாரிகள் நம்முடன் காணொலி வாயிலாக இணைந்திருப்பது தான் இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும் அவர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

இன்றைய பிரதமரின் ஸ்வநிதி  திருவிழா, நம்மைச் சுற்றி வாழும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இல்லாமல் நமது அன்றாட வாழ்க்கையை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. கொரோனா காலத்தில், தெருவோர வியாபாரிகளின் பலம் என்ன என்பதை அனைவரும் பார்த்துள்ளனர். இந்த விழாவில் சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் என சாலையோரங்களில் கடைவைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று, நாட்டின் ஒவ்வொரு மூலையுடனும் இணைக்கப்பட்டுள்ள நண்பர்கள், ஒரு லட்சம் பேரும் இந்த பிரதமரின் ஸ்வநிதியின் சிறப்புப் பலனைப் பெறுவார்கள். ஸ்வநிதி திட்டத்தின் கீழ் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணம் மாற்றப்பட்டுள்ளது. தில்லி மெட்ரோவின் லஜ்பத்நகர் முதல் சாகேத்ஜி பிளாக் மற்றும் இந்திரப் பிரஸ்தா முதல் இந்தர்லோக் மெட்ரோ திட்டங்கள்  வரையிலான விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது தில்லி மக்களுக்கு இரட்டைப்பரிசாகும். உங்கள் அனைவரையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

நம் நாடு முழுவதும் உள்ள நகரங்களில், தெருவோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிகளில் லட்சக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள். இன்று இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள். சுயமரியாதையுடன் கடினமாக உழைத்து குடும்பத்தை வளர்ப்பவர்கள் அவர்கள்.  அவர்களின் வண்டிகள், அவர்களின் கடைகள் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவர்களின் கனவுகள் சிறியவை அல்ல, அவர்களின் கனவுகள் பெரியவை. கடந்த காலங்களில், முந்தைய அரசுகள் இந்தச் சகாக்களை கவனித்துக் கொள்ளவில்லை. அவர்கள் அவமானங்களைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. நடைபாதையில் பொருட்களை விற்கப் பணம் தேவைப்பட்டது. எனவே அதிக வட்டிக்குப் பணம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திரும்பி வர சில நாட்கள் தாமதமானால், அல்லது சில மணி நேரம் தாமதமானால், அவமானத்துடன், வட்டியையும் அதிகமாகச் செலுத்த வேண்டும். மேலும் வங்கிகளில் கணக்குகள் இல்லை, வங்கிகளில் நுழைவு இல்லை, கடன் பெறுவது பற்றிய கேள்வி எழவில்லை. யாராவது கணக்கைத் திறக்க அணுகினாலும், அவர் பல்வேறு உத்தரவாதங்களை வழங்க வேண்டியிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், வங்கியில் இருந்து கடன் பெறுவதும் சாத்தியமற்றதாக இருந்தது. வங்கிக் கணக்கு வைத்திருந்தவர்களுக்கு வியாபாரப் பதிவு இல்லை. பல பிரச்சினைகளுக்கு மத்தியில், யாருக்கும் பெரிய கனவுகள் எதுவும் இல்லை, ஆனால் அவர் எப்படி முன்னேற முடியும்? நண்பர்களே, இதுபோன்ற பிரச்சனைகள் இருந்ததா, இல்லையா? முந்தைய அரசு உங்கள் பிரச்சினைகளைக் கேட்கவில்லை, அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை, பிரச்சினையைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உத்திரவாதம் எதுவும் இல்லாதவர்களின்,   உத்தரவாதத்தை மோடி ஏற்றுக்கொள்கிறார், நான் உங்கள் உத்தரவாதத்தை  ஏற்றுக் கொள்கிறேன் என்று மோடி கூறினார். பெரிய மனிதர்களின் நேர்மையின்மையையும், சிறிய மக்களின் நேர்மையையும் நான் கண்டிருக்கிறேன் என்பதை இன்று நான் பெருமிதத்துடன் கூறுகிறேன். பிரதமரின் ஸ்வநிதி திட்டம் என்பது மோடியின் அத்தகைய உத்தரவாதங்களில் ஒன்றாகும். இது இன்று இதுபோன்ற சிறிய வேலைகளைச் செய்யும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும். அவர்களுக்கு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடனும், மோடியின் உத்தரவாதத்தின் பேரில் கடனும் கிடைப்பதை மோடி உறுதி செய்துள்ளார். நீங்கள் முதல் முறையாக கடன் வாங்கும்போது, நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் பெறுகிறீர்கள். நீங்கள் அதைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், வங்கியே உங்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்குகிறது. இந்தப் பணத்தை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், வங்கிகளிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை உதவி உறுதி செய்யப்படுகிறது. இன்று நீங்கள் இங்கே பார்த்தீர்கள், சிலர் ரூ.50 ஆயிரம் தவணை பெற்றனர். பிரதமரின் ஸ்வநிதித் திட்டம் சிறு வணிகத்தை விரிவுபடுத்துவதில் நிறைய உதவியுள்ளது. இதுவரை, நாட்டின் 62 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் சுமார் 11,000 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை சிறியதல்ல, 11 ஆயிரம் கோடி ரூபாயை தங்கள் கைகளில் கொடுத்த மோடியை நம்புகின்றனர் தெருவோர வியாபாரிகள். அவர்கள் சரியான நேரத்தில் பணத்தைத் திருப்பித் தருகிறார்கள். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் பயனாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே,

கொரோனா காலத்தில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தை அரசு தொடங்கியபோது, எவ்வளவு பெரிய திட்டம் உருவாக்கப்படப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது. அப்போது சிலர் இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினர். ஆனால் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் அத்தகையவர்களுக்கு பதில் சொல்வதாக அமைந்தது. சுயநிதித் திட்டத்தால், தெருவோர வியாபாரிகளின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. கொள்முதல் மற்றும் விற்பனையை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதன் மூலம், வங்கிகளிடமிருந்து உதவி பெறுவது உங்கள் அனைவருக்கும் இப்போது எளிதாகிவிட்டது. இது மட்டுமல்லாமல், இந்த நண்பர்கள் சில நேரங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் ஒரு வருடத்தில் 1200 ரூபாய் வரை கேஷ்பேக் பெறுகிறார்கள். அதாவது, உங்களுக்கு ஒரு வகையான பரிசு கிடைக்கும்.

நண்பர்களே,

தெருவோர வியாபாரிகளில் வேலை செய்யும் உங்களைப் போன்ற லட்சக்கணக்கான குடும்பங்கள் நகரங்களில் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றன. உங்களில் பெரும்பாலோர் உங்கள் கிராமங்களிலிருந்து வந்து நகரங்களில் இந்த வேலையைச் செய்கிறீர்கள். பிரதமரின் ஸ்வநிதி திட்டம், வங்கிகளுடன் இணைப்பதற்கான திட்டம் மட்டுமல்ல. அதன் பயனாளிகள் அரசின் பிற திட்டங்களின் நேரடி பலன்களையும் பெறுகிறார்கள். உங்களைப் போன்ற அனைத்து நண்பர்களும் இலவச எரிவாயு இணைப்புக்கான வசதியைப் பெற்று வருகிறீர்கள். நகரங்களில் புதிய ரேஷன் கார்டுகளை உருவாக்குவது சக ஊழியர்களுக்கு எவ்வளவு பெரிய சவாலாக இருந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். உங்களின் இந்தப் பிரச்சனையை சமாளிக்க மோடி மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளார். எனவே, ஒரே நாடு, ஒரே வரி விதிப்பு, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இப்போது ரேஷன் கார்டு நாட்டின் பிற பகுதிகளிலும் கிடைக்கிறது.

நண்பர்களே,

பெரும்பாலான தெருவோர வியாபாரிகள் சேரிகளில் வசிக்கின்றனர். இதனால் மோடியும் கவலை அடைந்துள்ளார். நாட்டில் கட்டப்பட்ட 4 கோடிக்கும் அதிகமான வீடுகளில், சுமார் ஒரு கோடி வீடுகள் நகர்ப்புற ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏழை மக்கள் இதன் பெரும் பலன்களைப் பெற்று வருகின்றனர். இந்திய அரசும், தலைநகர் தில்லியில் சேரிகளை பக்கா வீடுகளாக மாற்றுவதற்கான ஒரு பெரிய பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. தில்லியில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன, 3,500-க்கும் மேற்பட்ட வீடுகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளை வரன்முறைப்படுத்தும் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், மத்திய அரசும் பிரதமரின் சூரி வீடு இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கூரையில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மத்திய அரசு முழு உதவியையும் வழங்கும். இதன் மூலம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். மீதமுள்ள மின்சாரமும் அரசுக்கு விற்கப்படும். இந்தத் திட்டத்திற்காக அரசு 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட உள்ளது.

நண்பர்களே,

தில்லியில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்தியில் ஆளும் பிஜேபி அரசு இரவு பகலாக உழைத்து வருகிறது. ஒருபுறம், நாங்கள் நகர்ப்புற ஏழைகளுக்கு உறுதியான வீடுகளைக் கட்டினோம், மறுபுறம், நடுத்தர வர்க்க குடும்பங்கள் வீடுகளைக் கட்ட உதவினோம். நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் நடுத்தரக் குடும்பங்களுக்கு வீடு கட்ட சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் நகரங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாடு பிரச்சினையைக் கையாள்வதில் நாங்கள் உண்மையிலேயே ஈடுபட்டுள்ளோம். இதற்காக, நாட்டின் ஏராளமான நகரங்களில் மெட்ரோ வசதிகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தில்லி மெட்ரோவின் தூரம் 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. தில்லி மெட்ரோ நெட்வொர்க் உலகின் சில நாடுகளில் உள்ளதைப் போல பெரியதாக மாறியுள்ளது. உண்மையில், தில்லி-என்.சி.ஆர், நமோ பாரத் போன்ற விரைவு ரயில் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. தில்லியில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க எங்கள் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தில்லியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளை மத்திய அரசு இயக்கி வருகிறது. தில்லியைச் சுற்றி நாங்கள் உருவாக்கியுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மற்றும் மாசுபாடு பிரச்சினையையும் குறைக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு, துவாரகா விரைவுச் சாலையும் திறந்து வைக்கப்பட்டது. இது தில்லியில் பெரும் மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கும்.

நண்பர்களே,

ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் விளையாட்டில் முன்னேற வேண்டும் என்பது மத்திய அரசின் தொடர் முயற்சியாகும். இதற்காக, கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். கேலோ இந்தியா திட்டம் மூலம், நாடு முழுவதிலும் உள்ள சாதாரணக் குடும்பங்களின் மகன்களும், மகள்களும் கூட முன்வருகிறார்கள். இன்று, அவர்களின் வீடுகளைச் சுற்றி நல்ல விளையாட்டு வசதிகள் உருவாக்கப்படுகின்றன, அவர்களின் பயிற்சிக்கு அரசு உதவுகிறது. எனவே, எனது ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த வீரர்களும் பிரகாசிக்க முடிகிறது.

நண்பர்களே,

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் மோடி ஈடுபட்டுள்ளார். மறுபுறம், மோடியை இரவும் பகலும் வசைபாடுவதாக தேர்தல் அறிக்கையுடன் தில்லியில் இந்தியக் கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. அவர்களின் சித்தாந்தம் என்ன? அவர்களின் சித்தாந்தம் தவறான நிர்வாகம், ஊழல் மற்றும் தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகும். ஊழலையும், திருப்திப்படுத்துதலையும் மக்களின் வேரிலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார சக்தியாக மாற்றுவதே மோடியின் சித்தாந்தம். மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்கிறார்கள். மோடியைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவரது குடும்பம்தான். அதனால்தான் இன்று ஒட்டுமொத்த நாடும் சொல்கிறது நான் மோடியின் குடும்பம்!

நண்பர்களே,

நாட்டின் சாமானிய மனிதனின் கனவுகளும், மோடியின் உறுதியும் இந்தக் கூட்டாண்மைக்கும், ஒளிமயமான எதிர்காலத்திற்கும் உத்தரவாதம் அளிக்கின்றன. தில்லி மக்களுக்கும், நாடு முழுவதும் உள்ள ஸ்வநிதி பயனாளிகளுக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். நன்றி.

***

(Release ID: 2014724)

ANU/PKV/AG/KRS



(Release ID: 2015349) Visitor Counter : 32