பிரதமர் அலுவலகம்

இந்திய குடிமைப் பாதுகாப்பு சட்டம், 2023, இந்திய நீதித்துறைச் சட்டம், 2023, இந்திய சாட்சிய சட்டம், 2023 ஆகியவை நிறைவேற்றப்பட்டிருப்பது நமது வரலாற்றில் ஒரு திருப்புமுனை தருணம்: பிரதமர்

பொது சேவை மற்றும் நலனை மையமாகக் கொண்ட சட்டங்களுடன் புதிய சகாப்தம் தொடங்குகிறது: பிரதமர்

Posted On: 21 DEC 2023 9:00PM by PIB Chennai

இந்தியக் குடிமைப் பாதுகாப்புச் சட்டம், 2023, இந்திய நீதித்துறைச் சட்டம், 2023 மற்றும்  இந்திய சாட்சிய சட்டம், 2023 ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியதோடு, இது இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை தருணம் என்று குறிப்பிட்டார்.  இந்த மசோதாக்கள் சமூகத்தின் ஏழைகள், விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படும் பிரிவினருக்கு மேம்பட்டப் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதே நேரத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் பிற குற்றங்களையும் கடுமையாகக் குறைக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவின் சட்டக் கட்டமைப்பை அமிர்த காலத்தில்  மிகவும் பொருத்தமானதாக மறுவரையறை செய்கின்றன என்று பிரதமர் கூறினார். மாநிலங்களவையில் மூன்று மசோதாக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா விவாதிக்கும் காணொலியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள தொடர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"இந்தியக் குடிமைப் பாதுகாப்புச் சட்டம், 2023, இந்திய நீதித்துறைச் சட்டம், 2023 மற்றும்  இந்திய சாட்சிய சட்டம், 2023 ஆகியவை நிறைவேற்றப்பட்டிருப்பது நமது வரலாற்றில் ஒரு திருப்புமுனை தருணமாகும். இந்த மசோதாக்கள் காலனித்துவ கால சட்டங்களின் முடிவைக் குறிக்கின்றன. பொது சேவை மற்றும் நலனை மையமாகக் கொண்ட சட்டங்களுடன் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது.

சீர்திருத்தத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இந்த உருமாற்ற மசோதாக்கள் ஒரு சான்றாகும். இவை தொழில்நுட்பம் மற்றும் தடய அறிவியலில் கவனம் செலுத்தி காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளை நவீன சகாப்தத்திற்குக் கொண்டு வருகின்றன. இந்த மசோதாக்கள் நமது சமூகத்தின் ஏழைகள், விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படும் பிரிவினருக்கு மேம்பட்டப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

அதே நேரத்தில், இந்த மசோதாக்கள் நமது முன்னேற்றத்திற்கு அமைதியான பயணத்தின் ஆணிவேரைத் தாக்கும் குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் இதுபோன்ற குற்றங்களை கடுமையாகக் குறைக்கின்றன. இவற்றின் மூலம் தேசத்துரோகம் தொடர்பான காலாவதியான பிரிவுகளுக்கும் விடை கொடுத்திருக்கிறோம்.

நமது  அமிர்த காலத்தில், இந்த சட்ட சீர்திருத்தங்கள் நமது சட்ட கட்டமைப்பை மிகவும் பொருத்தமானதாக மறுவரையறை செய்கின்றன. உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களின் உரைகள், இந்த மசோதாக்களின் முக்கிய அம்சங்களை மேலும் விளக்குகின்றன.”

***

(Release ID: 1989434)

ANU/SMB/BR/RR



(Release ID: 1989488) Visitor Counter : 219