பிரதமர் அலுவலகம்

தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்


“தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படை அம்சமே, கல்வியை குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டுவருவதோடு,அதனை 21ம் நூற்றாண்டுக்கான நவீன சிந்தனைகளுடன் இணைப்பது தான்”

“பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்விமுறையாக இருக்கமுடியாது”

“நமது இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றவர்களாக, நம்பிக்கை உடையவர்களாக, நடைமுறைகளுக்கு உகந்தவர்களாக திகழ்வதற்கான அடித்தளத்தை கல்விக்கொள்கை உருவாக்குகிறது”

“பெண்களுடன் நெருக்கமான துறைகள் தற்போது அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருகிறது”

“தேசிய கல்விக்கொள்கை’ நாம் எண்ணற்ற வாய்ப்புகளை உணர்வதற்கான சாதனைத்தை வழங்கியுள்ளது”

Posted On: 07 JUL 2022 4:11PM by PIB Chennai

தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோதி வாரணாசில் இன்று தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திரபிரதான், திருமதி அன்னபூர்ணாதேவி, டாக்டர் சுபாஷ் சர்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், இணையமைச்சர்கள், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இதர தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘நமது கல்விமுறை மற்றும் இளம் தலைமுறையினர், ‘அமிர்த கால’ உறுதிப்பாடுகளை நனவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.  மகாமானா மதன்மோகன் மாலவியாவுக்கு தலைவணங்கி இந்த மாநாட்டிற்கு தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். முன்னதாக இன்று ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் அட்சய பாத்திர மதிய உணவு சமையல் அறையை பிரதமர் திறந்துவைத்தார். தாம் கலந்துரையாடிய மாணவர்களின் உயர் திறன், அந்த திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான தேவையை  உணர்த்தும் குறியீடு என்றும் அவர் கூறினார்.

தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படை அம்சமே, கல்வியை குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதோடு, அதனை 21-ம் நூற்றாண்டுக்கான நவீன சிந்தனைகளுடன் இணைப்பது தான்” என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டில் அறிவாற்றல் மற்றும் திறமைக்கு எந்தகாலத்திலும் பஞ்சமில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், எனினும், “பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது” என்றும் தெரிவித்தார். கல்வி பற்றிய இந்திய நெறிமுறைகளின் பன்முகத்தன்மையை சுட்டிக்காட்டிய அவர், அத்தகையை நெறிமுறைகள் நவீன் இந்திய கல்விமுறையை குறிப்பதாக இருக்கவேண்டும் என்றார். “ நாம் இளைஞர்களை பட்டதாரிகளாக மட்டும் உருவாக்காமல், நாடு முன்னோக்கிச் செல்வதற்கு தேவையான மனிதவளம் மற்றும்  நாட்டிற்கான கல்விமுறையை வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். நமது ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த உறுதிப்பாட்டிற்கு தலைமையேற்க வேண்டும்” எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.  புதிய இந்தியாவை படைக்க, புதிய நடைமுறையும் நவீன நடவடிக்கைகளும் அவசியம் என்று  பிரதமர் வலியுறுத்தினார்.   இதற்கு முன்பு கற்பனை செய்துகூட பார்த்திராத அம்சங்கள் தற்போது நனவாகி வருவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், “நாம் கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மட்டும் நாம் மீண்டு வந்துவிடவில்லை, மாறாக, தற்போது இந்தியா உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது, நமது நாடுதான், உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலை கொண்ட நாடாக உள்ளது” என்றும் தெரிவித்தார்.

விண்வெளி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இதற்குமுன்பு, அரசாங்கம் மட்டுமே அனைத்தையும் செய்து வந்த நிலையில், தற்போது தனியார் பங்கேற்பு மூலம் இளைஞர்களுக்கு புதிய உலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டார். குழந்தைகளை அவர்களது திறமை மற்றும் விருப்பத்திற்கேற்ற  திறனுடையவர்களாக மாற்றுவதில் தான், புதிய கல்விக்கொள்கை முழுகவனமும் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். “நமது இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றவர்களாக, நம்பிக்கை உடையவர்களாக, நடைமுறைகளுக்கு உகந்தவர்களாக திகழ்வதற்கான அடித்தளத்தை கல்விக்கொள்கை உருவாக்குகிறது” என்றும் அவர் கூறினார். புதிய சிந்தனைகளுடன் எதிர்காலத்திற்காக பாடுபடவேண்டியதன் தேவையையும் பிரதமர் வலியுறுத்தினார். தற்கால குழந்தைகள், மிகசிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வருவதாகவும், அவர்களுக்கு உதவி செய்து அந்த திறமைகளை வெளிக்கொணர வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

தேசிய கல்விக்கொள்கையை தயாரிப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பாராட்டிய பிரதமர், அந்த வேகம், புதிய கொள்கை தயாரிக்கப்பட்ட பிறகும் குறைந்துவிடவில்லை என்றும்  தெரிவித்தார். அடிக்கடி விவாதங்கள் நடத்தப்படுவதுடன்,புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமரும் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இந்த கொள்கையை அமுல்படுத்துவது குறித்து  எடுத்துரைத்து வருகிறார். இதன் விளைவாக, நாட்டில் உள்ள இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சியில் தீவிர பங்குதாரர்களாக மாறியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய கல்விக் கட்டமைப்பை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். பல்வேறு புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஐஐடிக்கள் மற்றும் ஐஐஎம்-கள் நாட்டில் திறக்கப்பட்டுள்ளன. 2014-ல் இருந்ததை விட, மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது, 55 சதவீதம் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்தி சம வாய்ப்புகளை ஏற்படுத்தும். “புதிய கல்விக்கொள்கை தற்போது தாய் மொழியில் பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், சமஸ்கிருதம் போன்ற பண்டைக்கால இந்திய மொழிகளுக்கு புத்துயிரூட்டப்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறினார்.

உலகின் மிகப்பெரிய கல்விக்கேந்திரமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய உயர்க்கல்வியை சர்வதேச தரத்திற்கு இணையாக தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 180 பல்கலைக்கழகங்களில் சர்வதேச விவகாரங்களுக்கான சிறப்பு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. களத்தில் நடைமுறையில் உள்ள சர்வதேச நடைமுறைகளை வல்லுனர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

செய்முறை அனுபவம் மற்றும் களப்பணியின்  முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ‘ஆய்வகத்திலிருந்து நிலத்திற்கு’ என்ற  குறிக்கோளுடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.  கல்வியாளர்கள், தங்களது அனுபவங்களை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார். ஆதாரம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் பூகோள அமைப்புக்கேற்ற ஆராய்ச்சி மேற்கொள்வதுடன், இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி உலகில் உள்ள பழங்கால சமுதாயங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுமாறும் வலியுறுத்தினார். அதேபோன்று, புத்துயிர் பெற்றுவரும் கட்டமைப்பு துறையிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு முன்பு கிடைக்காத எண்ணற்ற வாய்ப்புகளை அறிந்துகொள்வதற்கான சாதனத்தை “தேசிய கல்விக்கொள்கை” நமக்கு வழங்கி உள்ளது.அதனை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

அகில இந்திய கல்வி மாநாடு

ஜூலை 7 முதல் 9ம் தேதி வரை கல்வி மாநாட்டிற்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு, பிரபல கல்வியாளர்கள், கொள்கைவகுப்போர் மற்றும் முன்னணி கல்வியாளர்கள், தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ சிறந்த முறையில் அமுல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வழங்குவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் (மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார்)-ஐ சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் & நிர்வாக பிரிவுத் தலைவர்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் (ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஐஐஎஸ்இஆர்) திறனை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரும், தத்தமது கல்வி நிறுவனங்களின் தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்துவதில் காணப்படும் முன்னேற்றத்தை எடுத்துரைப்பதோடு, இதனை அமுல்படுத்துவதற்கான சிறந்த உத்திகள், மிகச்சிறந்த நடைமுறைகள் மற்றும் வெற்றிச்சரித்திரத்தையும், எடுத்துரைக்க உள்ளனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கல்வி மாநாட்டில், தேசிய கல்விக்கொள்கை 2020ன் கீழ் அடையாளம் காணப்பட்ட 9 அம்சங்கள் குறித்து குழு விவாதங்கள் நடத்தப்பட்டது. இந்த அம்சங்கள் பல்வேறு துறைகள் மற்றும் முழுமையான கல்வி; திறன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு; ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு; தரமான கல்விக்கு ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துதல்; தரம், தரவரிசை மற்றும் அங்கீகாரம்; டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் ஆன்லைன் கல்வி; சமமான மற்றும் உள்ளார்ந்த கல்வி; இந்திய அறிவாற்றல்முறை; மற்றும் உயர்க்கல்வியை சர்வதேச மயமாக்குதல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

*************** 



(Release ID: 1839935) Visitor Counter : 186