பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லக்னோவில் உ.பி. முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்


80,000 கோடி மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

“இன்று உலகம் எதிர்பார்க்கும் நம்பகத்தன்மையுடைய நட்பு நாடுகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சக்தி ஜனநாயக இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது”

“இன்று உலகம் இந்தியாவின் செயல்திறனை உற்று நோக்குகிறது மற்றும் அதன் செயல்திறனை பாராட்டுகிறது”

“கடந்த 8 ஆண்டுகளில் கொள்கை, நிலைத்தன்மை, ஒத்துழைப்பு, மற்றும் எளிமையாக வணிகம் செய்வதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்”

“உத்தரப்பிரதேசத்தின் விரைவான வளர்ச்சிக்காக எங்கள் அரசாங்கம் உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் இணைந்து செயல்படுகிறது”

“ஒரு மாநிலத்தின் எம்.பி. என்ற முறையில் மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தில் உள்ள திறமை மற்றும் ஆற்றலை நாடு அவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் திறனை உணர்ந்துள்ளேன்”

“நாங்கள் கொள்கை, முடிவுகளை எடுத்தல் மற்றும் நோக்கம் காரணமாக வளர்ச்சியுடன் இருக்கிறோம்”

Posted On: 03 JUN 2022 1:39PM by PIB Chennai

லக்னோவில் இன்று நடைபெற்ற உ.பி. முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது ரூ.80,000 மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். விவசாயம் மற்றும் அவை சார்ந்த திட்டங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல், சிறு,குறு தொழில்கள், உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருத்துவத்துறை, சுற்றுலா, பாதுகாப்பு, விண்வெளி, கைத்தறி மற்றும் ஜவுளி உள்ளிட்ட துறை சார்ந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நாட்டின் முக்கிய தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உத்தரப்பிரதேச இளைஞர்களின் திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். மேலும், தொழிலதிபர்களை காசிக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். “காசியின் பிரதிநிதியாக, காசிக்கு செல்லும்படி உங்களை நான் வலியுறுத்துவேன். புராதன மதிப்புகளுடன், காசி புதிய பொலிவுடன் வெளிப்படும் என்பது, உத்தரப்பிரதேச இளைஞர்களின் திறன்களுக்கு ஒரு உயிருள்ள உதாரணம்” என்று பிரதமர் தெரிவித்தார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்கள், உத்தரப் பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சி மீது மேலும் நம்பிக்கையை உருவாக்கும் என்றும் கூறினார். “இன்று உலகம் எதிர்பார்க்கும் நம்பகத்தன்மையுடைய நட்பு நாடுகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சக்தி ஜனநாயக இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது”

“இன்று உலகம் இந்தியாவின் செயல்திறனை உற்று நோக்குகிறது மற்றும் அதன் செயல்திறனை பாராட்டுகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஜி-20 நாடுகளின் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும், உலக சில்லறை வர்த்தகக் குறியீட்டில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். உலகில் எரிசக்தியை இறக்குமதி செய்யும் 3-வது பெரிய நாடு இந்தியா, உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 84 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 417 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக, அதாவது 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சரக்குகளை ஏற்றுமதி செய்து, இந்தியா புதிய சாதனைப் படைத்துள்ளது.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை குறிப்பிட்ட பிரதமர், “பல ஆண்டுகளாக சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற மந்திரத்துடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். கொள்கை, ஸ்திரத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் எளிதாக வணிகம் செய்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். எங்களின் சீர்திருத்தங்கள் மூலம், இந்தியாவை ஒரேநாடாக வலுப்படுத்த நாங்கள் உழைத்துள்ளோம்.

ஒரே நாடு - ஒரே வரியான ஜி.எஸ்.டி, ஒரே நாடு - ஒரே மின் தொகுப்பு, ஒரே நாடு ஒரே பயண அட்டை, ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை ஆகிய முயற்சிகள் எங்களின் தெளிவான, உறுதியான கொள்கைகளின் பிரதிபலிப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

2017-ம் ஆண்டுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி பேசிய பிரதமர், “வேகமான வளர்ச்சிக்காக, உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் உற்பத்தி துறைகளில் மத்திய, மாநில அரசுகள்  இரட்டை என்ஜின் போன்று செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், முன்னெப்போதும் இல்லாத அளவு, ரூ.7 புள்ளி 50 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். சட்டம் - ஒழுங்கு நிலைமை மேம்படுத்தப்பட்டிருப்பது, வணிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்துடன், தொழில்துறைக்கு உகந்த சூழலை உருவாக்கியிருப்தோடு, மாநிலத்தின் நிர்வாக அமைப்புகளையும் மீட்டெடுத்துள்ளது. ஒரு மாநிலத்தின் எம்.பி.யாக, மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தில் உள்ள திறமை மற்றும் திறனை அவர்களிடமிருந்து நாடு எதிர்பார்க்கும் என்று  பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு அல்லது ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை உத்தரப்பிரதேசத்தில் உள்ளது.  இது நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உத்தரப்பிரதேசத்தின் வலிமையை எடுத்துரைத்த பிரதமர், மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அண்மையில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில், கங்கையின் இருகரைகளிலும், 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரசாயன கலப்பு இல்லாத விவசாய பெருவழித்தடம் அமைப்பது பற்றிய அறிவிப்பு வெளியிட்டதை பிரதமர் நினைவுகூர்ந்தார். உத்தரப்பிரதேசத்தில் 25 முதல் 30 மாவட்டங்களை உள்ளடக்கிய, 1,100 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓடும் கங்கை நதியின் மூலம் இயற்கை விவசாயத்துக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும், பெருமுதலாளிகளுக்கு தற்போது விவசாயத்துறையில் முதலீடு செய்ய சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் மற்றும் மூலதன செலவினங்களுக்காக ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார். நவீன முறையிலான மின்தொகுப்பு, எரிவாயு குழாய் இணைப்புகள், பல்வகை போக்குவரத்து வசதி, விரைவு நெடுஞ்சாலைகள், நவீன மயமாக்கப்பட்ட ரயில்வே உள்கட்டமைப்பு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள சரக்கு வழித்தடம் ஆகியவை உத்தரப்பிரதேசத்துக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்கும் புதிய கலாச்சாரம் நாட்டில் உருவாகியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதற்கு டிஜிட்டல் புரட்சியை பிரதமர் உதாரணமாக சுட்டிக்காட்டினார். 2014-ம் ஆண்டில், இந்தியாவில் 65 மில்லியன் அகண்ட அலைவரிசை சந்ததாரர்கள் மட்டுமே இருந்தனர் என்றும், தற்போது இந்த  எண்ணிக்கை 78 கோடியை எட்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  2014-ல் 200 ரூபாயாக இருந்த ஒரு ஜிபி டேட்டாவிற்கான கட்டணம் தற்போது ரூ. 11-12-ஆகக் குறைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர், உலகில் மிக மலிவாக டேட்டா கிடைக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டில் 100-க்கும் குறைவான கிராமப் பஞ்சாயத்துகளே ஆப்டிகல் ஃபைபருடன் இணைக்கப்பட்டிருந்தன என்றும், தற்போது அதன் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை கடந்து விட்டது. 2014-ம் ஆண்டில், சில நூறு ஸ்டார்ட்-அப்களே இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளது. அண்மையில் 100 யூனிகார்ன்களை உருவாக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது.  நாங்கள் கொள்கை, முடிவுகள் மற்றும் நோக்கத்தால் வளர்ச்சி பெற்று வருகிறோம். உங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருப்போம். மேலும், ஒவ்வொரு அடியிலும் உங்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு பிரதமர் உறுதியளித்தார்.

உத்தரபிரதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2018 பிப்ரவரி 21-22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதல் அடிக்கல் நாட்டு விழா 2018 ஜுலை 29-ம் தேதியும், இரண்டாவது அடிக்கல் நாட்டு விழா 2019-ம் ஆண்டு ஜுலை 28-ம் தேதியும் நடைபெற்றது. முதல் அடிக்கல் நாட்டு விழாவின்போது, ரூ.61,500 கோடி முதலீட்டில், 81 திட்டங்களுக்கும், 2-வது அடிக்கல் நாட்டு விழாவில், ரூ.67,000 கோடி முதலீட்டில், 290 திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

                                                  ***************


(Release ID: 1830897)