பிரதமர் அலுவலகம்

சென்னையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 26 MAY 2022 8:58PM by PIB Chennai

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களே,

தமிழ்நாடு முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் அவர்களே,

மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே,

தமிழ்நாடு அரசின் அமைச்சர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர்களே,

தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினர்களே,

தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளே, வணக்கம்.

 

மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவது என்பது எப்போதுமே மிக அருமையாக இருக்கும் ஒன்று.

இது மிகவும் சிறப்பான பூமி.

இந்த மாநிலத்தின் மக்கள், கலாச்சாரம், மொழி என அனைத்துமே மிகச் சிறப்பானவை.

சீர்பெருமை நிறைந்த பாரதியார் அவர்கள்,

செந்தமிழ் நாடென்னும் போதினிலே,

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

என்று மிக அழகாகப் பாடியிருக்கிறார்.

 

நண்பர்களே, ஒவ்வொரு துறையிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகின்றார்.  அண்மையில் தான் நான் Deaflympics - இந்திய காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பளித்தேன்.  இதுவரை நடந்த போட்டிகளில் இது தான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாம் வென்ற 16 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஆறு பேர்களுக்கு ஒரு பங்கு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? அணிக்கு இது மிகச் சிறந்த பங்களிப்புகளில் ஒன்று.

தமிழ் மொழி நிலையானது-நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. 

சென்னை முதல் கனடா வரை,

மதுரை முதல் மலேஷியா வரை,

நாமக்கல் முதல் நியூயார்க் வரை,

சேலம் முதல் தென்னாப்பிரிக்கா வரை,

பொங்கல் மற்றும் புத்தாண்டுக் காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை.

ஃப்ரான்ஸ் நாட்டின் கான்ஸ் (Cannes) நகரிலே ஒரு திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. 

அங்கே இந்த மகத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டின் மைந்தரான எல். முருகன் அவர்கள், தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரியமான ஆடையில் அங்கே, சிவப்புக் கம்பளத்தின் மீது நடந்தார்.   இது உலகெங்கிலும் உள்ள தமிழர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தது.

நண்பர்களே, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் மேலும் ஒரு உன்னதமான அத்தியாயத்தைக் கொண்டாட நாமனைவரும் இங்கே கூடியிருக்கிறோம்.

31,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று, தொடங்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.

இந்தத் திட்டங்கள் பற்றிய விபரங்களை நாம்  இப்போது பார்த்தோம், ஆனால் நான் சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

சாலைக் கட்டுமானத்தின் மீது செலுத்தப்பட்டிருக்கும் கவனம் தெளிவாகப் புலப்படுகிறது.

இதை ஏன் இந்த வகையில் நாம் செய்கிறோம் என்றால், இது பொருளாதார வளர்ச்சியோடு நேரடியாக தொடர்புடையது.

பெங்களூரூ சென்னை விரைவுச்சாலை இரண்டு முக்கியமான வளர்ச்சி மையங்களை இணைக்கும்.

சென்னை துறைமுகத்தை, மதுரவாயலோடு இணைக்கும் 4 வழி உயர்த்தப்பெற்ற பாதை, சென்னை துறைமுகத்தை மேலும் திறன்மிக்கதாக ஆக்குவதோடு, மாநகரப் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும்.

நெரலூரு முதல் தர்மபுரி வரையும், மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையுமான பகுதிகளின் விரிவாக்கம் மக்களுக்கு ஆதாயங்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 

5 இரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட இருப்பது எனக்குக் குறிப்பாக உவகையை அளிக்கிறது.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும், மேம்பாடும் செய்யப்படுகின்றன.  அதே நேரத்தில், இது உள்ளூர் கலை, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம், என் விவசாய சகோதர சகோதரிகளுக்கு உதவிகரமாக இருக்கும், அதிக அளவிலான சந்தைகளை அணுகுவதற்கு இது உதவும்.

நண்பர்களே,

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்கு உட்பட்டு, வரலாற்று சிறப்புமிக்க சென்னையில் நவீன தொழில் நுட்பத்திலான வீட்டுவசதித் திட்டத்தின்படி வீடுகள் கிடைக்கப் பெறும் அனைவருக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இது எங்கள் அனைவருக்கும் மிகவும் நிறைவை அளித்த ஒரு திட்டம்.

மலிவுவிலையிலான, நீடித்த மற்றும் சூழலுக்கு இசைவான இல்லங்களை உருவாக்குவதில் மிகச் சிறப்பான நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதில் ஒரு உலகளாவிய சவாலை நாங்கள் மேற்கொண்டோம்.

சாதனை படைக்கும் நேரத்திலே, இப்படிப்பட்ட முதல் நவீன தொழில்நுட்பத்திலான வீடு கட்டும் திட்டம் சாத்தியமாகி இருக்கிறது. அது சென்னையில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்வை அளிக்கிறது.

திருவள்ளூர் முதல் பெங்களூரு வரையும், எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையுமான இயற்கை எரிவாயு குழாய் பதித்தல் தொடங்கியிருப்பதன் காரணமாக, தொழில் நிறுவனங்களுக்கும், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநில மக்களுக்கும் இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சென்னை துறைமுகத்தைப் பொருளாதார வளர்ச்சியின் மையமாக ஆக்கும் தொலைநோக்குப் பார்வையோடும், சென்னையில் ஒரு பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டிருக்கிறது.

நாட்டின் பிற பாகங்களிலும் இப்படிப்பட்ட பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களை அமைக்க எங்களுடைய அரசு அர்ப்பணிப்போடு இருக்கிறது.

இந்த பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் நமது நாட்டிலே ஒரு முன்மாதிரி மாற்றத்தை ஏற்படுத்தும்.

பல்வேறு துறைகளிலும் இருக்கும் இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றுமே, வேலைவாய்ப்புக்களையும், தற்சார்பு நிலை நோக்கிய நமது உறுதிப்பாட்டையும் ஊக்கப்படுத்தும்.

நண்பர்களே,

நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தை விடச் சிறப்பான ஒரு வாழ்க்கைத் தரத்தை உங்கள் குழந்தைகள் வாழ வேண்டும் என்று நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க நீங்கள் ஒவ்வொருவரும் விரும்புவீர்கள்.

இதற்கு முக்கியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்று தான் தலைசிறந்த உள்கட்டமைப்பு வசதிகள்.

எந்த நாடுகள் எல்லாம் உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் கூடுதல் முக்கியத்துவம் அளித்தனவோ, அந்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையிலிருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்குக் கற்பித்திருக்கிறது.

தலைசிறந்த தரமும், நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசாங்கம் தனது முழு கவனத்தைச் செலுத்துகிறது.

நான் உள்கட்டமைப்பு பற்றிப் பேசும் போது, சமூக மற்றும் புறக் கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகிறேன்.

சமூகக் கட்டமைப்பை மேம்படுத்துவதன் வாயிலாக, நம்மால் ஏழைகள் நலனை உறுதி செய்ய முடியும். 

சமூகக் கட்டமைப்பின் மீதான நமது அக்கறை, அனைவரும் நலன் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் நமக்கிருக்கும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

முக்கியமான திட்டங்கள் முழுமை பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.

எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சரி, கழிப்பறைகளோ, வீட்டுவசதியோ, நிதிசார் உள்ளடக்க திட்டங்களோ – அது எதுவாக இருந்தாலும், அவையனைத்தும், அனைவரையும் சென்று சேர்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம்.

 

ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீரைக் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்ய பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி நாம் செய்யும் போது, பாரபட்சமோ, விடுபட்டுப் போவதற்கான சாத்தியக்கூறோ இருக்காது.

உள்கட்டமைப்பு மீது கவனம் செலுத்தப்படும் போது, இந்தியாவின் இளைஞர்கள் தான் அதிகம் பயன் பெறுவார்கள். 

இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற உதவுவதோடு, வருவாயையும், அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொள்ள இதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நண்பர்களே,

பாரம்பரியமாக உள்கட்டமைப்பு என்று எது கருதப்பட்டு வந்ததோ, அதையும் தாண்டி எங்கள் அரசு கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கட்டமைப்பு என்றால் சாலைகள், மின்சாரம், குடிநீர் வசதி ஆகியன மட்டுமே கருதப்பட்டன.

இன்று நாம் இந்தியாவின் எரிவாயு குழாய் வழி இணைப்புகளை விரிவாக்கச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதிவேக இணைய வசதியை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   அதிவேக இணையத்தை நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்வதே எங்களுடைய தொலைநோக்குப் பார்வையாக உள்ளது.  இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்!!

பிரதம மந்திரி விரைவு சக்தித் திட்டத்தை, சில மாதங்கள் முன்பாக நாங்கள் தொடங்கினோம்.

இனிவரும் ஆண்டுகளில் இந்தியாவில் உயர் தரம் வாய்ந்த கட்டமைப்பினை உறுதி செய்யும் நோக்கத்தோடு, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும், அனைத்து அமைச்சகங்களையும் இந்தத் திட்டம் ஒன்றிணைக்கும்.

செங்கோட்டை கொத்தளத்தில் நான் உரையாற்றிய போது ஒரு தேசிய கட்டமைப்பு ஒருங்கிணைப்புத் திட்டம் குறித்து பேசியிருந்தேன்.  இந்தத் திட்டத்தின் மதிப்பு 100 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்டது.  இந்தத் தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கையின் போது, 7.5 இலட்சம் கோடி ரூபாய், மூலதனச் செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரலாற்று சிறப்பு மி்க்கது.

கட்டமைப்பை உருவாக்கும் வேளையில், இந்தத் திட்டங்கள், குறித்த நேரத்திலும், வெளிப்படைத்தன்மையுடனும் நிறைவு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம்.

நண்பர்களே,

தமிழ்மொழியையும், கலாச்சாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது.

செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று, இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னையில் தொடங்கப்பட்டது.  இந்தப் புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.  இங்கே விசாலமான ஒரு நூலகம், ஒரு மின்னணு நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், பல்லூடக அரங்கொன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புக்களுக்கான சுப்பிரமணிய பாரதி பெயரிலான ஒரு இருக்கை, அண்மையில் தான் அறிவிக்கப்பட்டது.  பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் என் தொகுதியில் இருப்பதால், என்னுடைய உவகை கூடுதல் விசேஷமானது.

இந்திய மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை அவற்றுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை காரணமாக, தொழில்நுட்ப, மருத்துவப் படிப்புக்களை உள்ளூர் மொழிகளிலேயே கற்க முடியும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் இதனால் பலனடைவார்கள்.

நண்பர்களே,

இலங்கை நெருக்கடியான சூழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறது.  அந்நாட்டின் தற்போதைய நிலவரம் உங்களுக்குக் கண்டிப்பாகக் கவலையளிப்பதாக இருக்கும்.

நெருங்கிய நட்பு நாடு என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும், இந்தியா இலங்கைக்கு அனைத்துவிதமான உதவிகளையும் அளித்து வருகிறது.

நிதியுதவி, எரிபொருள்-உணவு-மருந்துகள், பிற அத்தியாவசியமான பொருட்கள் உதவி ஆகியன இதில் அடங்கும்.

பல இந்திய அமைப்புக்களும் தனிநபர்களும் இலங்கையின் வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி மற்றும் மலையகத்தில் வாழும் தமிழர்கள் உட்பட, இலங்கையில் இருக்கும் தங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு உதவிகளை அளித்திருக்கிறார்கள்.

இலங்கைக்குப் பொருளாதார ஆதரவு அளிப்பது தொடர்பாக சர்வதேச அமைப்புகளால் இந்தியா தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு ஆதரவாக, இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.

நண்பர்களே, யாழ்ப்பாணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்றதை என்னால் மறக்க முடியாது.  யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் நான் தான்.

இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையிலே இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.  இந்தத் திட்டங்கள் சுகாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கும்.

நண்பர்களே, சுதந்திரத் திருநாள் அமிர்தப் பெருவிழாவை நாம் இப்போது கொண்டாடி வருகிறோம்.  75 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு சுதந்திர நாடு என்ற வகையில் நாம் நமது பயணத்தைத் தொடங்கினோம். 

நமது நாட்டிற்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பல கனவுகளைக் கண்டார்கள். அவற்றை நிறைவேற்றுவது நமது கடமை என்பதோடு, நாமனைவரும் இந்த சந்தர்ப்பத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு கனவை நனவாக்க முயற்சி மேற்கொள்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நாமனைவரும் இணைந்து இந்தியாவை வலுவானதாகவும், வளமானதாகவும் ஆக்குவோம்.

மீண்டும் ஒருமுறை, தொடங்கப்பட்டிருக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கான நல்வாழ்த்துக்கள்.

வணக்கம்.

மிக்க நன்றி.

 இந்த மொழி பெயர்ப்பு தோராயமானது, முழுமையான விவரங்களுக்கு பிரதமர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1828592

***************



(Release ID: 1828599) Visitor Counter : 242