பிரதமர் அலுவலகம்

சூரிய ஒளியிலிருந்து 750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ரேவா சூரிய மின்திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 10 JUL 2020 12:22PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் திருமதி. ஆனந்திபென் படேல் அவர்களே, மத்தியப் பிரதேச மக்களின் மனம் கவர்ந்த முதல்வர் திரு. சிவ்ராஜ் சிங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு. ஆர்.கே. சிங் அவர்களே, திரு. தவார் சந்த் கேலாட் அவர்களே, திரு. நரேந்திர சிங் தோமார் அவர்களே, திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே, திரு. பிரகலாத் சிங் படேல் அவர்களே, மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவை உறுப்பினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

ரேவா உள்ளிட்டு மத்தியப் பிரதேச மாநிலம் முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வைக் கண்டு களிக்கும் எனது சகோதர, சகோதரிகளே! உண்மையிலேயே ரேவா இன்று ஒரு புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது. நர்மதா நதி என்ற நமது அன்னை மற்றும் வெள்ளைப் புலிகளுக்குப் புகழ்பெற்றதொரு இடமாக ரேவா இதுவரை அறியப்பட்டு வந்துள்ளது. இப்போது ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தோடும் ரேவா இணைந்திருக்கிறது. வான் வெளியிலிருந்து எடுக்கப்பட்ட காணொலிக் காட்சியை நீங்கள் பார்த்தீர்கள் ஆனால் பல்லாயிரக்கணக்கான சூரிய தகடுகள் வயல்களில் அசைந்தாடும் பயிர்களைப் போல் நிரம்பியிருப்பதைக் காண முடியும். கருநீல நீரைக் கொண்ட ஒரு கடலை நாம் கடந்து வருகிறோமா? என்பது போலவும் நமக்குத் தோன்றக் கூடும். இதற்காக குறிப்பாக ரேவா பகுதியைச் சேர்ந்த மக்களையும் மத்தியப் பிரதேச மாநில மக்களையும் நான் பாராட்டுகிறேன்.

ரேவாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், இந்த சதாப்தத்தில் இந்தப் பகுதி முழுவதையுமே மிக முக்கியமானதொரு மின்சார மையமாக மாற்ற உதவவிருக்கிறது. இந்த மின் உற்பத்தித் திட்டத்தின் மூலம் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் மட்டுமின்றி தில்லியில் செயல்படும் மெட்ரோ ரயில் திட்டமும் பயன்பெறவிருக்கின்றன. ரேவா மட்டுமின்றி ஷாஜாப்பூர், நீமூச், சத்தர்பூர் ஆகிய இடங்களிலும் இதேபோன்று சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரும் நிலையங்கள் செயல்படுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஓம்காரேஸ்வர் அணையின் மீது மிதக்கும் சூரிய தகடுகளைக் கொண்டு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்கும் திட்டமும் உள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் முழுமையடையும்போது மலிவான, தூய்மையான மின்சாரத்திற்கான மையமாக மத்தியப் பிரதேச மாநிலம் நிச்சயமாக மாறும். மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள், விவசாயிகள், ஆதிவாசி மக்கள் இதன் மூலம் பெரிதும் பயன் பெறவிருக்கின்றனர்.

நண்பர்களே,

நமது அன்றாட வாழ்விலும், கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் சூரிய வழிபாடு என்பது தனித்ததொரு இடத்தைப் பெற்றுள்ளது. சூரிய பகவான் நம்மை தூய்மையாக்கட்டும்! இதே போன்ற தூய்மைக்கான உணர்வுதான் இன்று ரேவா பகுதி எங்கும் உணரப்படுகிறது. சூரிய பகவானின் ஆற்றலை இன்று நாடு முழுவதும் உணர முடிகிறது. அவரது கனிவான வாழ்த்துகளின் விளைவாகத்தான் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் உலகிலேயே முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக நாம் இருக்கிறோம்.

நண்பர்களே,

இன்றைக்கு மட்டுமல்ல; 21ஆம் நூற்றாண்டு முழுவதுமே நமது மின்சாரத் தேவைகளுக்கான மிகப்பெரும் ஆதாரவளமாக சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் திகழவிருக்கிறது. ஏனெனில், இத்தகைய மின்சாரமானது நிச்சயமானது; தூய்மையானது; பாதுகாப்பானதும் ஆகும். இது நிச்சயமானது; ஏனெனில் ஏனைய வகைப்பட்ட ஆற்றல் மற்றும் மின்சாரம் ஆகியவை ஏதோவொரு நாளில் தீர்ந்து போகக்கூடும். ஆனால் சூரிய பகவான் எப்போதுமே நம் உலகம் அனைத்திற்கும் ஒளி தந்து கொண்டே இருப்பார். அது தூய்மையானது; ஏனெனில் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதற்குப் பதிலாக அதைப் பாதுகாக்க உதவுகிறது. அது பாதுகாப்பானது; ஏனெனில் சுயச்சார்புக்கான மிகப்பெரும் சின்னமாகவும், உத்வேகமூட்டுவதாகவும் அது விளங்குகிறது. மேலும் அது நமது மின்சாரத் தேவைகளையும் பாதுகாக்கிறது. வளர்ச்சியின் புதிய சிகரங்களை நோக்கி இந்தியா முன்னேறும்போது, நமது கனவுகளும் நம்பிக்கைகளும் கூட அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதே நேரத்தில் ஆற்றல் மற்றும் மின்சாரத்திற்கான நமது தேவைகளும் அதிகரிக்கின்றன. இத்தகையதொரு சூழலில், மின்சாரத் துறையில் தற்சார்பு என்பது தற்சார்புமிக்க இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் என்பது என்பது மிகப் பெரும் பங்கினை வகிக்கவிருக்கிறது. இந்தியாவின் இந்த வலிமையை மேலும் விரிவுபடுத்தவே நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

நண்பர்களே,

தற்சார்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி நாம் பேசும்போது பொருளாதாரம் என்பது அதன் மிக முக்கியமான அம்சமாகத் திகழ்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலுமுள்ள கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதாரத்தையா அல்லது சுற்றுச் சூழலையா எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருந்து வந்துள்ளனர். இந்தப் பின்னணியில் சில நேரங்களில் பொருளாதாரத்திற்குச் சாதகமாகவும், வேறு சில நேரங்களில் சுற்றுச் சூழலுக்கு ஆதரவாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல; மாறாக, ஒன்று மற்றதின் நேச அணியே என்பதை இந்தியா எடுத்துக் காட்டியுள்ளது. அது தூய்மையான இந்தியாவிற்கான இயக்கமாக இருந்தாலும் சரி, அல்லது சமையல் எரிவாயுவைப் போன்ற தூய்மையான எரிபொருளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்குவதற்கான இயக்கமாக இருந்தாலும் சரி, அல்லது நாடு முழுவதிலும் நெருக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் அடிப்படையில் இயங்கும் வாகன அமைப்பின் மிகப்பெரும் வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சியாக இருந்தாலும் சரி, அல்லது நாட்டில் மின்சாரத்தை அடிப்படையாகக்  கொண்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளாக இருந்தாலும் சரி, இத்தகைய எண்ணற்ற முயற்சிகள் அனைத்துமே நாட்டிலுள்ள சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பானதாக, சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான முயற்சிகளே ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரையில் பொருளாதாரமும் சுற்றுச் சூழலும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல; மாறாக, ஒன்றுக்கொன்று உதவுபவையே ஆகும்.

நண்பர்களே,

அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் திட்டங்களிலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையை எளிமையாக்குவது ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எங்களைப் பொறுத்தவரையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது ஒரு சில குறிப்பிட்ட திட்டங்களோடு முடிந்து விடுவதல்ல; அது வாழ்க்கைக்கான ஒரு வழிமுறை. மறுசுழற்சி அடிப்படையிலான பெரும் மின் உற்பத்தித் திட்டங்களை நாங்கள் தொடங்கும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தூய்மையான ஆற்றல் என்பது கவனத்தில் கொள்ளப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். அதன் பயன்கள் நாட்டின் மூலைமுடுக்கெங்கும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதிப்படுத்தவும் நாங்கள் முயற்சிக்கிறோம். இதற்கு ஓர் உதாரணத்தையும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

நண்பர்களே,

கடந்த ஆறு ஆண்டுகளில் நாடு முழுவதிலும் சுமார் 36 கோடி எல் இ டி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட எல் இ டி தெரு விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு இது மிகச் சிறிய ஒன்றாகவே தோன்றக் கூடும். பொதுவாகவே புதியதாக ஒரு வசதியை நாம் பெறும்போது அதன் தாக்கம் பற்றி நாம் அதிகமாகப் பேசுவதில்லை. அது போன்ற ஒரு செயலைச் செய்யாத போதுதான் இத்தகைய விவாதங்கள் எழுகின்றன.

நண்பர்களே,

இந்த மிகச் சிறிய எல் இ டி பல்ப் இல்லாதபோது, அதன் தேவையை நாம் உணர்ந்தோம். என்றாலும் அதன் விலை கைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது. இவை பெரிதாக விற்பனையாகாத நிலையில், இவற்றை உற்பத்தி செய்பவர்களும் இல்லாமல் இருந்தனர். இந்த ஆறு ஆண்டுகளில் என்ன மாற்றம் ஏற்பட்டது? எல் இ டி பல்புகளின் விலையானது கிட்டத்தட்ட  பத்து மடங்கு குறைந்தது மட்டுமின்றி இத்தகைய பல்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் பொதுச் சந்தைக்கு வந்தன. வழக்கமாக 100-200 வாட் திறனுள்ள பல்புகளில் இருந்து நாம் பெற்று வந்த வெளிச்சத்தை இப்போது 9-10 வாட் பல்புகளில் இருந்து நம்மால் பெற முடியும். வீடுகளிலும் தெருக்களிலும் எல் இ டி பல்புகளை நிறுவியதன் விளைவாக நமது மின் நுகர்வு ஆண்டுக்கு சுமார் 600 பில்லியன் யூனிட்கள் குறைந்து வருகிறது. அதேநேரத்தில் நல்ல தரமான வெளிச்சத்தையும் மக்கள் பெற்று வருகின்றனர். மேலும் நாட்டிலுள்ள மக்கள் தங்களது மின் நுகர்வுக் கட்டணத்தில் ஆண்டுக்கு சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கவும் முடிந்துள்ளது. அதாவது, இந்த எல் இ டி பல்புகள் மின் நுகர்வு கட்டணத்தைக் குறைத்துள்ளன. அதே நேரத்தில் மற்றொரு முக்கியமான அம்சமும் இதில் அடங்கியுள்ளது. அதாவது இந்த எல் இ டி பல்புகளின் பயன்பாட்டின் விளைவாக சுமார் 4.5 கோடி டன் அளவிலான கார்பன் டையாக்ஸைட் நமது சுற்றுச் சூழலில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுதான் நாம் சுவாசிக்கும் காற்று மாசுபடுவதை குறைக்க உதவுகிறது.

நண்பர்களே,

நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் மின்சாரம் சென்று சேர்வதை, ஒவ்வொருவருக்கும் தேவையான மின்சாரம் கிடைப்பதை, நமது சுற்றுச் சூழல், காற்று, நீர் ஆகியவை தொடர்ந்து தூய்மையாக நீடிப்பதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இந்தக் கருத்து சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தி செய்வதற்கான எங்களது கொள்கை மற்றும் நடைமுறை உத்தி ஆகியவற்றிலும் பிரதிபலிக்கிறது. சற்றே கற்பனை செய்து பாருங்கள்! 2014ஆம் ஆண்டில் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 7-8 ஆக இருந்தது. இன்று அதே மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 2.25 பைசாவிலிருந்து ரூ. 2.50 பைசா வரையிலுமாக குறைந்துள்ளது. இத்துறையில் ஈடுபட்டு வரும் தொழில்முனைவர்களும் கூட இதனால் பெரிதும் பயனடைந்துள்ளனர். அவர்களும் தங்கள் பங்கிற்கு நமது நாட்டு மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் எவ்வாறு சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் மிகவும் மலிவாக உள்ளது என நாடு முழுவதிலும் உள்ள, உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இப்போது விவாதித்து வருகின்றனர். சூரிய ஒளியில் இருந்து மின்சார உற்பத்தி செய்வது தொடர்பாக இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேலும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இத்தகைய மிகப்பெரும் நடவடிக்கைகளின் விளைவாக, தூய்மையான ஆற்றலுக்கான மிகவும் கவர்ச்சிகரமான சந்தையாக இந்தியா இப்போது கருதப்படுகிறது. மறுசுழற்சி அடிப்படையிலான மின்சார உற்பத்திக்கு மாறிச் செல்வது குறித்து உலகம் முழுவதிலும் எங்கெல்லாம் விவாதங்கள் நடைபெற்று வருகிறதோ, அங்கெல்லாம் இதற்கான ஒரு முன்மாதிரியாக இந்தியா பார்க்கப்படுகிறது.

நண்பர்களே,

 

இந்தியா மீது உலகம் வைத்துள்ள எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த உலகையும் இணைப்பதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இந்த யோசனையின் விளைவு தான் சர்வதேச சூரிய சக்தி கூட்டணி ஆகும். ஒரே உலகம், ஒரே சூரியன் மற்றும் ஒரே மின்சக்தி விநியோக அமைப்பின் ஆத்மா இது தான். உலகின் முன்னால் உள்ள இந்த பெரிய நெருக்கடியை சமாளிப்பதற்கும், சிறிய மற்றும் ஏழை நாடுகளின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், சூரிய ஒளி மின்சாரத்தின் சிறப்பான உற்பத்தி மற்றும் உபயோகத்திற்கு ஒட்டுமொத்த உலகத்தையும் ஒன்று திரட்டும் முயற்சி இதுவாகும்.

 

நண்பர்களே,

 

ஒரு விதத்தில், வாடிக்கையாளர்களை உற்பத்தியாளர்களாக மாற்றியுள்ள சூரிய ஒளி மின்சாரம், மின்சார பொத்தானின் முழு அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. மின்சார உற்பத்தியின் இதர முறைகளில் மக்களின் பங்கேற்பு குறைவானதாகும். ஆனால், நாம் சூரிய ஒளி மின்சாரத்தைக் கருத்தில் கொண்டோமானால், வீட்டின் கூரையாக இருந்தாலும், அலுவலகத்தின் கூரையாக இருந்தாலும், தொழிற்சாலையாக இருந்தாலும், அனைத்து இடங்களிலும் சிறிய வாய்ப்பாவது இருப்பதால், மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை அவர்களே தயாரித்துக் கொள்ளலாம். இதற்கு அதிக அளவிலான ஊக்கத்தொகையைத் தரும் அரசு, அவர்களுக்கு ஆதரவையும் அளிக்கிறது. மின்சார உற்பத்தியில் தன்னிறைவை அடையச் செய்யும் இந்தத் திட்டத்தில், உணவு உற்பத்தியாளர்களாகிய விவசாயிகளும் தற்போது மின்சார உற்பத்தியாளர்களாக மாறலாம்.

 

நண்பர்களே,

 

நமது விவசாயி இன்று மிகவும் திறன் வாய்ந்தவராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பதால், இரு வகையான பயிர்களுடன் நாட்டுக்கு அவர் உதவுகிறார். நாம் அனைவரும் உணவு பெறும் பாரம்பரிய விவசாயம் ஒரு பயிர் என்றால், இன்னொரு வகையான பயிர்களை நமது விவசாயிகள் தற்போது நிறுவுவததால், அவர்களின் இல்லங்களுக்கு மின்சாரம் சென்றடைகிறது. பாரம்பரிய விவசாயம் என்னும் முதல் பயிர், வளமான நிலத்தில் நமது விவசாயியால் நடப்படுகிறது. சூரிய ஒளி மின்சார ஆலை என்னும் இன்னொரு வகையான பயிர் அவ்வளவாக வளமில்லாத நிலம், அல்லது, விளைச்சலுக்கு உபயோகமில்லாத நிலங்களில் நடப்படுகிறது. அதாவது, விவசாயியின் வேளாண்மை செய்ய முடியாத நிலத்தையும் பயன்படுத்த முடியும். இது விவசாயியின் வருமானத்தையும் பெருக்கும்.

 

குசும் திட்டத்தின் மூலம் உபரி நிலத்தில் இத்தகைய சூரிய ஒளி மின்சார ஆலைகளை நிறுவ விவசாயிகளுக்கு உதவிகள் செய்யப்படுகிறது. விவசாய நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் தங்களது தனிப்பட்ட மின்சாரத் தேவைகளை நமது விவசாயிகள் பூர்த்தி செய்து கொள்வதோடு, உபரி மின்சாரத்தை விற்கவும் முடிகிறது. இத்தகைய கூடுதல் வருமானத்தை உருவாக்கிக் கொள்வதற்கான இந்த மிகப்பெரிய இயக்கத்தை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இந்தியாவை வெற்றிகரமான மின்சார ஏற்றுமதியாளராக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த விவசாய நண்பர்கள் மாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். இதை ஒரு சாதனையாக ஆக்குவதில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் காட்டியுள்ள உறுதியினால் இந்த நம்பிக்கை வந்துள்ளது. நீங்கள் செய்துள்ள பணி விவாதத்துக்கான தலைப்பாக மாறியுள்ளது. கோதுமை உற்பத்தியில் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளி நீங்கள் செய்துள்ள சாதனை போற்றத்தக்கது. இந்த கொரோனா பெருந்தொற்று சமயத்தில் மத்தியப் பிரதேச விவசாயிகளின் அனைத்து சாதனைகளையும் முறியடித்த கோதுமை உற்பத்தியும், மத்தியப் பிரதேச அரசின் அனைத்து சாதனைகளையும் முறியடித்த கொள்முதலும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இதனால், மின்சார உற்பத்தியிலும் மத்தியப் பிரதேசத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. குசும் திட்டத்தின் கீழ் மின்சார உற்பத்தியிலும் மத்தியப் பிரதேச விவசாயிகள் சாதனை படைத்தார்கள் என்னும் செய்தி ஒரு நாள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

சகோதர, சகோதரிகளே,

 

தரம் வாய்ந்த சூரிய ஒளி மின்சார உபகரணங்கள், சிறந்த மின்கலங்கள் மற்றும் உயர் தர சேமிப்புத் திறன் நாட்டில் இல்லாவிட்டால் சூரிய ஒளி மின்சாரத்தின் முழு சக்தியையும் நம்மால் பெற முடியாது. இந்தத் திசையில் தற்போது முழு வீச்சில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சூரிய ஒளி மின்சார உபகரணங்கள் உள்ளிட்டக் கருவிகளுக்காக இறக்குமதிகளை சார்ந்திருந்ததற்கு முடிவு கட்ட தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நாடு திட்டமிட்டுள்ளது. நாட்டின் சூரிய சக்தி ஒளிமின்னழுத்த தொகுதிகளின் உற்பத்தித் திறனை துரித கதியில் அதிகரிப்பதே லட்சியம் ஆகும். இந்தியாவில், குசும் திட்டத்தின் கீழ் நிறுவப்படும் காற்றழுத்த விசைக்குழாய்களிலும், வீடுகளின் கூரைகள் மீது நிறுவப்படும் உபகரணங்களிலும் சூரிய சக்தி ஒளிமின்னழுத்த செல்கள் மற்றும் தொகுதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, அனைத்து அரசுத் துறைகளும் மற்றும் இதர அரசு நிறுவனங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சூரிய சக்தி செல்கள் மற்றும் தொகுதிகளை கொள்முதல் செய்வது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இது மட்டுமில்லாது, மின்சார ஆலைகளை நிறுவும் தொழில் நிறுவனங்கள், சூரிய சக்தி ஒளிமின்னழுத்தத்தை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்தப் படுகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர்கள், இந்தத் துறையில் தொடர்புடைய தொழில் முனைவோர், புது நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகியோரை நான் இன்று கேட்டுக் கொள்கிறேன்.

 

சகோதர, சகோதரிகளே, நம் மீது நாம் நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே தற்சார்பு என்பது உண்மையில் சாத்தியமாகும். ஒட்டுமொத்த நாடும், ஒட்டுமொத்த அமைப்பும் ஒவ்வொரு குடிமகனையும் ஆதரித்தால் மட்டுமே நம்பிக்கை என்பது வரும். கொரோனா நெருக்கடியால் உருவாக்கப்பட்ட நிலைமைகளுக்கிடையே இந்தியா இதைத் தான் செய்துக் கொண்டிருக்கிறது. நம்பிக்கையை கட்டமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் அரசு இதுவாகும். அரசுகளால் அடிக்கடி சென்றடைய முடியாத சமூகத்தின் பிரிவுகளை அரசின் வளங்களும், உணர்வுகளும் இன்று சென்றடைந்து கொண்டிருக்கிறது. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் உதாரணத்தை நாம் பார்ப்போம். எண்பது கோடிக்கும் அதிகமான ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக உணவளிப்பதும், அவர்களின் சட்டைப் பைகளில் சிறிது பணத்தை வைப்பதும் தான் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை ஆகும். பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன், மழைக்காலம் தொடங்கப்போவதை அரசு உணர்ந்தது. தீபாவளி மற்றும் சத் பூஜை வரை நமக்கு பண்டிகைகள் இருக்கின்றன. அனைத்து பிரிவுகளுக்கும், மதங்களுக்கும் பண்டிகைகள் இருக்கின்றன.

 

இம்மாதிரியான காலகட்டத்தில் தான், இத்தகைய உதவியை ஏழைகள் பெற வேண்டும். எனவே, இந்தத் திட்டம் தொடர்ந்தது. நவம்பர் வரை தற்போது ஏழைக் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் கிடைக்கும். மேலும், லட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு அரசு முழுமையான பங்களிப்பை அளிக்கிறது. அதே போல், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம், அமைப்புக்கு குறைந்தபட்சம் அணுகுதல் உள்ள நண்பர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இன்று, இந்தத் திட்டத்தின் மூலம், லட்சக்கணக்கான விற்பனையாளர்களும், சிறு வியாபாரிகளும் ரூ 10,000 வரையிலான சிறு கடன்களை பெறத் தொடங்கியுள்ளனர். மிகவும் முக்கியமான மற்றும் நமக்காக தங்களின் சிறு வணிகங்களை நடத்தும் இந்த நண்பர்களைப் பற்றி நாம் எப்போது சிந்தித்து இருக்கிறோம்? அதாவது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள் மற்றும் பெரிய நிறுவனங்களை நாம் பார்த்துக் கொண்ட அதே வேளையில், இந்த சிறிய மற்றும் பயனுள்ள தொழில்களைப் பற்றியும் நாம் சிந்தித்துள்ளோம்.

 

நண்பர்களே,

 

அரசாக இருந்தாலும், சமுதாயமாக இருந்தாலும், இந்தக் கடுமையான சவாலை எதிர்கொள்ள கருணை மற்றும் கண்காணிப்பு ஆகியவையே நமது மிகப்பெரிய உந்துசக்திகளாகும். மத்தியப் பிரதேசத்தையும், ஒட்டு மொத்த நாட்டையும் வளர்ச்சியடைய வைக்க நீங்கள் இன்று வீடுகளை விட்டு வெளியே வரும் சமயத்தில், மேலும் ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இரு கஜங்கள் இடைவெளி அல்லது சமூக விலகல், ஒரு முகக் கவசம் மற்றும் 20 நொடிகளுக்கு சோப் மூலம் கைகளைக் கழுவுதல் ஆகிய விதிமுறைகளை நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த சூரிய ஒளி மின்சாரத் திட்டத்துக்காக மத்தியப் பிரதேசத்துக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்!

 

மிக்க நன்றி!

 

*****



(Release ID: 1641492) Visitor Counter : 1048