பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் மேஹ்சானின் மோதெராவில் ரூ. 3900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

Posted On: 09 OCT 2022 10:24PM by PIB Chennai

குஜராத் மாநிலம் மேஹ்சானின் மோதெராவில் ரூ. 3900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி,  நாட்டிற்கு இன்று அர்ப்பணித்தார். 24 மணி நேரமும் சூரிய மின் சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமம் என்று மோதெராவை பிரதமர் அறிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மின்சாரம், தண்ணீர் முதல் ரயில்வே, சாலை வரையிலும்,  பால்வளம் முதல் திறன் மேம்பாடு, சுகாதாரம் வரையிலும் ஏராளமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.  இந்தத் திட்டங்களால் இந்தப் பகுதியில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும், கால்நடை பராமரிப்புத் துறையில் ஈடுபடும் மக்கள் மற்றும் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு, மாநிலத்தின் பாரம்பரிய சுற்றுலாவும் வளர்ச்சி பெறும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மோதெராவிலுள்ள வீடுகளின் விளக்குகள், விவசாய தேவைகள் மற்றும் வாகனங்களுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய மின் சக்தியிலிருந்து பெற முடியும் என்றார் அவர். “21-ஆம் நூற்றாண்டில் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு நமது எரிசக்திகளின் தேவை சம்பந்தமான இது போன்ற முயற்சிகளை நாம் அதிகரிக்க வேண்டும்”, என்று அவர் வலியுறுத்தினார். பொதுமக்களே மின்சாரத்தை உற்பத்தி செய்பவர்களாகவும், நுகர்வோராகவும் செயல்படும் பாதையில் தான் பணியாற்றி வருவதாக பிரதமர் கூறினார். “உங்களுக்குத் தேவையான எரிசக்தியைப் பயன்படுத்திவிட்டு மீதமுள்ள மின்சாரத்தை அரசுக்கு விற்பனை செய்யுங்கள். இதன் மூலம் மின்சாரக் கட்டணங்கள் நீக்கப்படுவதோடு, கூடுதல் வருமானமும் கிடைக்கும்”, என்று அவர் குறிப்பிட்டார். மக்கள் தங்கள் வீடுகளிலும், விவசாயிகள் தங்கள் விலை நிலங்களிலும் சூரிய மின்சக்தி தகடுகளைப் பொருத்தியும், நீர் பாசனத்திற்காக சூரிய மின்சக்தியில் இயங்கும் பம்புகளைப் பொருத்தியும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற கொள்கைகளை அமைக்கும் பாதையில் மத்திய அரசு தற்போது செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் வெற்றி குறித்த தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திரு நரேந்திர மோடி, முன்பு ரூ.1000 என்ற வகையில் விற்கப்பட்ட பொதுவான மருந்துகள், தற்போது ரூ.100-200 என்ற விலையில் விற்கப்படுவதால் அனைவரும் மருந்துகளை இந்த மையங்களில் இருந்து வாங்குமாறு கேட்டுக் கொண்டார்.

குஜராத் முதல்வர் திரு புபேந்திர  பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சி. ஆர். பாட்டில், திரு பாராசின்ஹ் தாபி, திருமதி சாரதாபென் பட்டேல் மற்றும் திரு ஜுகன்ஜி லோகண்ட்வாலா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

(Release ID: 1866334)

 



(Release ID: 1866386) Visitor Counter : 160