பிரதமர் அலுவலகம்

பிரகதி மைதான ஒருங்கிணைந்த வழித்தட திட்டத்தின் அர்ப்பணிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 JUN 2022 4:50PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, திரு. பியூஷ் கோயல் அவர்களே, திரு.ஹர்தீப் சிங் பூரி அவர்களே, திரு.சோம் பிரகாஷ் அவர்களே, திருமதி. அனுப்ரியா படேல் அவர்களே, மற்றும் விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே,

தில்லி, நொய்டா-காசியாபாத், மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் தில்லி வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். தில்லிக்கு இன்று, மத்திய அரசிடமிருந்து நவீன உள்கட்டமைப்பு என்ற அழகிய வெகுமதி கிடைத்துள்ளது.

இந்த சுரங்கப்பாதையைக் கடக்கும்போது பல்வேறு நிகழ்வுகள் என் ஞாபகத்துக்கு வந்தன. குறுகியக் காலத்தில், ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவது என்பது எளிதான காரியமல்ல. இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ள சாலை, தில்லியின் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. சுரங்கப்பாதைக்கு மேல் ஏழு ரயில் பாதைகள் செல்கின்றன. இத்தனை சிரமங்களுக்கு இடையே, கொரோனா தொற்று வந்து புதிய சிக்கலை உருவாக்கியது. நாம், நாட்டுக்காக புதிய திட்டங்களை தொடங்கும்போது, தடை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கும் குறைவில்லை.

நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும்போது, பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த திட்டமும், அதேபோன்று பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. ஆனால், இது புதிய இந்தியா. இது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறது. புதிய தீர்மானங்களை எடுக்கிறது. அந்த தீர்மானங்களை நிறைவேற்ற இடைவிடாத முயற்சிகளையும் மேற்கொள்கிறது. விடாமுயற்சி, ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை நிறைவேற்றி, நிர்வாகத்தின் திறமையை வெளிப்படுத்திய பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். இந்த திட்டத்துக்காக வியர்வை சிந்திய அனைத்து தொழிலாள சகோதர, சகோதரிகளுக்கும் எனது இதயத்தின் அடியாழத்தில் இருந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப பிரகதி மைதான கண்காட்சியை மாற்றியமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரகதி மைதானம், இந்தியர்களின் திறன்கள், தயாரிப்புகள், இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் நமது கலாச்சாரத்தை எடுத்துக்காட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால், அதன் பிறகு இந்தியா நிறையவே மாறிவிட்டது. அதன் தேவைகளும் அதிகரித்து விட்டன. ஆனால், பிரகதி மைதானம் பெரிய அளவில் முன்னேற்றமடையில்லை என்பது வேதனையான விஷயம். இங்குள்ள வசதிகளை மேம்படுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் வகுக்கப்பட்டது.

தேசிய தலைநகர் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும், நவீன வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கண்காட்சி அரங்குகளை அமைப்பதற்காக இந்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. துவாரக்காவில் கட்டப்பட்டு வரும் சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையமும், பிரகதி மைதானத்தின் மறுசீரமைப்புத் திட்டமும் இதற்கு சான்றாக திகழும்.

கடந்த ஆண்டில், இங்கு நான்கு கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நவீனத்துடன் கூடிய ஒருங்கிணைப்பு வசதி தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டங்கள், தலைநகரின் தோற்றத்தையே மாற்றியமைத்து, அதனை மேலும் நவீனமயமாக்குகிறது அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! நன்றி.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835307

                             ***************



(Release ID: 1835771) Visitor Counter : 137