பிரதமர் அலுவலகம்

தானே மற்றும் திவா-வை இணைக்கும் ரயில் பாதைகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

மும்பை புறநகர் ரயில்வேயின் இரண்டு புறநகர் ரயில்களையும் தொடங்கி வைத்தார்

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவிருப்பதை யொட்டி அவருக்கு மரியாதை செலுத்தி தமது உரையை தொடங்கினார்

“எப்போதும் நடமாட்டம் மிகுந்த பெருநகரில் வசிப்போரின் வாழ்க்கையை இந்த புதிய பாதைகள் எளிதாக்கும்”

“தற்சார்பு இந்தியாவுக்கு பங்களிப்பு அளிக்கும் விதமாக மும்பையின் திறனை இந்த நடவடிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்”

“மும்பையில் 21 ஆம் நூற்றாண்டுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நாம் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்”

“இந்திய ரயில்வேயை மேலும் பாதுகாப்பானதாக, வசதி மிகுந்ததாக, நவீனமானதாக மாற்றுவது என்ற அரசின் உறுதிப்பாட்டை கொரோனா பெருந்தொற்றால் கூட அசைக்க முடியவில்லை”

“ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வளங்களில் போதுமான முதலீடு செய்யாததால் கடந்த காலத்தில் நாட்டின் பொது போக்குவரத்து முடங்கி கிடந்தது”

ரூ. 620 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட கூடுதல் ரயில் பாதைகள் நீண்ட தூர ரயில் போக்குவரத்துக்கும் புறநகர் ரயில் போக்குவரத்துக்கும் இடையிலான குறுக்கீடுகளை கணிசமாக அகற்றும்

Posted On: 18 FEB 2022 6:43PM by PIB Chennai

தானே மற்றும் திவா-வை இணைக்கும் வகையிலான 2 கூடுதல் ரயில் பாதைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  மும்பை புறநகர் ரயில்வேயின் இரண்டு புறநகர் ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர், ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்த நாள், நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தி தமது உரையை பிரதமர் தொடங்கினார்.  சிவாஜி மகராஜ் இந்தியாவின் பெருமிதம், அடையாளம் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் பாதுகாவலராக திகழ்ந்தவர் என்று பிரதமர்  குறிப்பிட்டார்.

தானே மற்றும் திவா-வை இணைக்கும் 5 மற்றும் 6-வது ரயில்பாதைகள் தொடங்கப்பட்டு இருப்பதையொட்டி, மும்பைவாசிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், எப்போதும் நடமாட்டம் மிகுந்த பெருநகரில் வசிப்போரின் வாழ்க்கையை இந்த புதிய பாதைகள் எளிதாக்கும் என்றார்.  இந்த புதிய 2 பாதைகளின் நான்கு நேரடி பலன்களை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  முதலாவதாக உள்ளூர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு தனித்தனி பாதை; இரண்டாவதாக வெளி மாநிலங்களிலிருந்து வரும் ரயில்கள், உள்ளூர் ரயில்கள் கடந்த செல்வதற்காக  காத்திருக்கத் தேவையில்லை; மூன்றாவதாக மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் கல்யாண் மற்றும் குர்லா வரையிலான பிரிவில்  பெருமளவு தடையின்றி இயங்க முடியும் என்பதோடு, நிறைவாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பாதையை மூடுவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கல்வா மும்ரா பயணிகள் தப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்த புதிய ரயில் பாதைகள் மற்றும் மத்திய ரயில்வேயில் பெரும்பாலும் குளிர்சாதன வசதி கொண்ட 36 புதிய உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுவது, உள்ளூர் ரயில் சேவையை விரிவுபடுத்தி, வசதிகளை நவீனப்படுத்துவது என்ற அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில் மும்பை பெருநகரின் பங்களிப்பை நினைவு கூர்ந்த பிரதமர், தற்சார்பு இந்தியாவுக்கான பங்களிப்பில் மும்பையின் திறனை பன்மடங்கு அதிகரிக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். “எனவேதான், மும்பையில் 21 ஆம் நூற்றாண்டுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நாம் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மும்பை புறநகர் ரயில் போக்குவரத்தை நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதாக மாற்றும் வகையில், மும்பை ரயில் போக்குவரத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது.  மும்பையில் மேலும் 400 கி.மீ. தொலைவுக்கு புறநகர் ரயில் பாதைகளையும், 19 ரயில் நிலையங்களை அமைப்பதோடு, நவீன சிபிடிசி சிக்னல் சாதனங்களை அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

“அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் நாட்டின் தேவை என்றும், இது கனவு நகரான மும்பையின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும்.  இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதுதான் நமது முன்னுரிமைப் பணி” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய  ரயில்வேயை மேலும் பாதுகாப்பானதாகவசதி மிகுந்ததாகநவீனமானதாக மாற்றுவது என்ற அரசின் உறுதிப்பாட்டை கொரோனா பெருந்தொற்றால் கூட அசைக்க முடியவில்லை என்று பிரதமர் கூறினார்.  கடந்த இரண்டாண்டுகளில் ரயில்வே துறை, சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனைகளை படைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.  8 ஆயிரம் கி.மீ தூர ரயில்பாதைகள் மின்சார மயமாக்கப்பட்டு இருப்பதுடன், 4.5  ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது.  கொரோனா காலக்கட்டத்தில் கிஷான் ரயில்கள் மூலம் விவசாயிகளுக்கு நாடு தழுவிய சந்தைகளுடன் இணைப்பு  வசதி  ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். 

கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான புதிய இந்தியாவின் மாறுபட்ட அணுகுமுறை பற்றி குறிப்பிட்ட பிரதமர், திட்டமிடல் முதல் நிறைவேற்றி முடிக்கும் நிலை வரை போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், கடந்த கால திட்டங்கள் தாமதமடைந்து வந்ததாகவும் தெரிவித்தார்.   இதனால், 21 ஆம் நூற்றாண்டுக்கான கட்டமைப்பு திட்டங்களை உருவாக்க முடியாமல் போனதால்தான், பிரதமரின் கதி சக்தி திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த திட்டம் மத்திய அரசின் அனைத்து துறைகள், மாநில அரசுகளின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் துறையினரை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரும்.  இந்த அமைப்பு, முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக்கு தேவையான தகவல்களை  சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முன்கூட்டியே வழங்கும்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வளங்களில் போதுமான முதலீடு  செய்வது பற்றி, சிந்திக்காததை திரு மோடி வெகுவாக குறைகூறினார்.  இதன்காரணமாக  கடந்த காலத்தில் நாட்டின் பொது போக்குவரத்து முடங்கி கிடந்தது என்றார்.  “இதுபோன்ற சிந்தனைகளை புறந்தள்ளி, இந்தியா தற்போது முன்னேறிச் செல்கிறது” என்று அவர் கூறினார்.

இந்திய ரயில்வேக்கு புதிய பொலிவை அளிக்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் பட்டியலிட்டார்.  காந்திநகர் மற்றும் போபாலில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் நிலையங்கள், இந்திய ரயில்வேயின் அடையாளமாக வேகமாக உருவெடுத்து வருவதுடன் 6,000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் ரயில்வே துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்து நவீன வசதிகளை ஏற்படுத்தியுள்ளன.  வரும் ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தேச சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.   

கல்யாண் ரயில் சந்திப்பு, மத்திய ரயில்வேயின் முக்கிய சந்திப்பாக திகழ்கிறது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து வரும் ரயில்கள் கல்யாண் நிலையத்தில் ஒன்றாக இணைந்து சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தை நோக்கி செல்கின்றன.  கல்யாண் மற்றும் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம் இடையே  உள்ள 4 ரயில் பாதைகளில் இரண்டு பாதைகள், மெதுவாக செல்லும் உள்ளூர் ரயில்களுக்காகவும், எஞ்சிய  இரண்டு பாதைகள், விரைவு உள்ளூர் ரயில்கள், மெயில் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.  புறநகர் மற்றும் நீண்ட தூர ரயில் போக்குவரத்தை தனித்தனியாக பிரிக்கும் விதமாக 2 கூடுதல் ரயில் பாதைகள் திட்டமிடப்பட்டது,

ரூ. 620 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட தானே – திவா –வை இணைக்கும் இரண்டு கூடுதல் ரயில் பாதையில், 1.4 கி.மீ. தூர ரயில்வே மேம்பாலம், 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.  இந்த ரயில்பாதைகள் மும்பையில் நீண்ட தூர ரயில் போக்குவரத்துக்கும், புறநகர் ரயில் போக்குவரத்துக்கும் இடையிலான குறுக்கீடுகளை கணிசமாக அகற்றும்.  இந்த ரயில் பாதைகள், நகரில் (மும்பையில்) 36 புதிய புறநகர் ரயில்களை அறிமுகப்படுத்த வழிவகை செய்துள்ளன.

***************



(Release ID: 1799394) Visitor Counter : 216