பிரதமர் அலுவலகம்

பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் திறந்து வைத்தார்


சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள விரைவுச் சாலையில் கட்டமைக்கப்பட்ட 3.2 கிமீ நீளம் கொண்ட விமானப் பாதையில் விமான சாகச காட்சிகளை பார்வையிட்டார்

"இந்த விரைவுச் சாலை உ.பி.யில் உறுதிமொழிகளை நிறைவேற்றப்பட்டதற்கான சான்றாகும், இது உ.பி.யின் பெருமை மற்றும் அதிசயம்"

"இன்று, பூர்வாஞ்சலின் கோரிக்கைகளுக்கு மேற்கத்திய நாடுகளின் கோரிக்கைகளுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன"

"இந்த தசாப்தத்தின் தேவைகளை மனதில் கொண்டு, வளமான உத்தரப்பிரதேசத்தை உருவாக்க உள்கட்டமைப்பு கட்டமைக்கப்படுகிறது"

"இரட்டை இயந்திர அரசு உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது"

Posted On: 16 NOV 2021 4:27PM by PIB Chennai

பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள விரைவுச் சாலையில் 3.2 கிமீ நீளமுள்ள விமானப் பாதையில் விமானக் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டும் போது, ஒரு நாள் இதே விரைவுப் பாதையில் தரையிறங்குவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்றார். “இந்த விரைவுச் சாலை விரைவான வேகத்தில் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும், இந்த விரைவுச் சாலை உ.பி.யின் வளர்ச்சிக்கானது, இந்த விரைவுச் சாலை புதிய உத்தரப் பிரதேசத்தைக் கட்டமைப்பதற்கானது, இந்த விரைவுச் சாலை உ.பி.யில் உள்ள நவீன வசதிகளின் பிரதிபலிப்பு ஆகும், உ.பி.யில் உறுதிமொழிகளை நிறைவேற்றியதற்கு இந்த விரைவுச் சாலை ஒரு சான்று, இது உ.பி.யின் பெருமையும் அதிசயமும் ஆகும்,” என்று அவர் கூறினார்.

 

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சமச்சீரான வளர்ச்சி அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். சில பகுதிகள் வளர்ச்சியில் முன்னோக்கி செல்கின்றன, சில பகுதிகள் பல தசாப்தங்களாக பின்தங்கியுள்ளன. இந்த சமத்துவமின்மை எந்த நாட்டுக்கும் நல்லதல்ல என்றார் அவர். இந்தியாவின் கிழக்குப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தும், நாட்டில் நடைபெறும் வளர்ச்சியால் பெரிய அளவில் அவற்றுக்கு பலன் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். முந்தைய அரசுகள் நீண்ட காலமாக உ.பி.யின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என்று பிரதமர் கூறினார். கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் இன்று வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை நிறைவு செய்ததற்காக உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், அவரது குழுவினர் மற்றும் உ.பி. மக்களைப் பிரதமர் பாராட்டினார். மேலும் இந்த திட்டத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களை அவர் பாராட்டினார்.

 

நாட்டின் வளத்திற்கு சமமாக நாட்டின் பாதுகாப்பும் முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். அதைக் கருத்தில் கொண்டு, பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை அமைக்கும் போது போர் விமானங்கள் அவசரமாக தரையிறங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார் அவர். பல தசாப்தங்களாக நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை புறக்கணித்தவர்களுக்கு இந்த விமானங்களின் கர்ஜனை பதிலளிக்கும் என்று அவர் கூறினார்.

 

கங்கை மற்றும் பிற நதிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட இவ்வளவு பெரிய பகுதி இருந்தபோதிலும், 7-8 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த வளர்ச்சியும் இல்லை என்று பிரதமர் வேதனை தெரிவித்தார். 2014-ம் ஆண்டு, நாட்டிற்கு சேவை செய்ய நாடு தமக்கு வாய்ப்பளித்தபோது, உ.பி.யின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தேன் என்று அவர் கூறினார். ஏழைகளுக்கு நல்ல வீடுகள் கிடைக்க வேண்டும், ஏழைகளுக்குக் கழிப்பறைகள் இருக்க வேண்டும், பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது, அனைவரது வீடுகளிலும் மின்சாரம் இருக்க வேண்டும், இதுபோன்ற பல பணிகள் இங்கு நடைபெற வேண்டும் என்று எண்ணியதாக அவர் கூறினார். முந்தைய அரசை விமர்சித்த பிரதமர், இந்த வசதிகளை வழங்குவதில் அப்போதைய உ.பி. அரசு தமக்கு ஆதரவளிக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றார். உ.பி. மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதற்கும், வளர்ச்சியில் பாகுபாடு காட்டப்பட்டதற்கும், அவர்களின் குடும்ப நலனை மட்டுமே அன்றைய அரசு கருத்தில் கொண்டு செயல்பட்டதற்கும், உ.பி. மக்கள் அதை அகற்றினார்கள் என்று அவர் கூறினார்.

 

உ.பி.யில் முன்பு எத்தனை தடவை மின்வெட்டுகள் ஏற்பட்டன என்பதை யாரால் மறக்க முடியும், உ.பி.யில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதை யாரால் மறக்க முடியும், உ.பி.யில் மருத்துவ வசதிகள் என்ன என்பதை யாரால் மறக்க முடியும் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். உ.பி.யில் கடந்த நான்கரை ஆண்டுகளில், அது கிழக்கு அல்லது மேற்கு பகுதியாக இருக்கட்டும், ஆயிரக்கணக்கான கிராமங்கள் புதிய சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு புதிய சாலைகள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

 

மக்களின் தீவிரப் பங்கேற்புடன், உ.பி.யின் வளர்ச்சிக்கான கனவு தற்போது நனவாக்கப்படுவதாக பிரதமர் கூறினார். உ.பி.யில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றன, எய்ம்ஸ் வருகிறது, நவீன கல்வி நிறுவனங்கள் கட்டப்படுகின்றன. சில வாரங்களுக்கு முன்பு குஷிநகரில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.

 

உ.பி. போன்ற ஒரு பரந்த மாநிலத்தின் சில பகுதிகள் முன்பு ஒன்றுக்கொன்று பெரிய அளவில் துண்டிக்கப்பட்டன என்பதும் உண்மை என்று பிரதமர் கூறினார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்று வந்தாலும், சரியான இணைப்பு வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டனர். கிழக்கு உத்தரப்பிரதேச மக்களுக்கு, லக்னோவை அடைவது கூட ஒரு சவலாக இருந்தது. "முந்தைய முதலமைச்சர்களுக்கு, அவர்களின் வீடுகள் இருந்த இடத்தில் மட்டுமே வளர்ச்சி போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று மேற்குலகின் கோரிக்கைகளுக்கு நிகரான முக்கியத்துவம் பூர்வாஞ்சலின் கோரிக்கைகளுக்கு வழங்கப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த அதிவேக நெடுஞ்சாலை லக்னோவுடன் அந்த நகரங்களை மிகுந்த லட்சியம் மற்றும் வளர்ச்சிக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகளுடன் இணைக்கும் என்று அவர் கூறினார். நல்ல சாலை எங்கு செல்கிறதோ, அங்கு நல்ல நெடுஞ்சாலைகள் சென்றடையும் என்றார் அவர்.

 

உத்தரப்பிரதேசத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு சிறந்த இணைப்பு அவசியம் என்றும், உ.பி.யின் ஒவ்வொரு மூலையையும் இணைக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உ.பி.யில் விரைவுச் சாலைகள் தயாராகி வரும் நிலையில், தொழில்துறை வழித்தடத்திற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அவர். மிக விரைவில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையைச் சுற்றி புதிய தொழில்கள் வரத் தொடங்கும். வரும் நாட்களில், இந்த விரைவுச் சாலைகளை ஒட்டி அமைந்துள்ள நகரங்களில், உணவு பதப்படுத்துதல், பால், குளிர்பதனக் கிடங்கு, பழங்கள் மற்றும் காய்கறிகள் சேமிப்பு, தானியங்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் இதர விவசாயப் பொருட்கள் தொடர்பான தயாரிப்புகளின் பணிகள் வேகமாக அதிகரிக்கும். உ.பி.யின் தொழில்மயமாக்கலுக்கு திறமையான மனிதவளம் அவசியம் என்று கூறிய அவர், எனவே பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது என்றார். இந்த நகரங்களில் ஐடிஐ மற்றும் பிற பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களும் நிறுவப்படும்.

 

உ.பி.யில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு வழித்தடமும் இங்கு புதிய வேலைவாய்ப்புகளை கொண்டு வரப் போகிறது என்று பிரதமர் கூறினார். உ.பி.யில் நடைபெறும் இந்த உள்கட்டமைப்பு பணிகள், எதிர்காலத்தில் பொருளாதாரத்திற்கு புதிய உயரங்களை வழங்கும் என்றார் அவர்.

 

ஒருவர் வீடு கட்டினாலும், முதலில் சாலைகளைப் பற்றி கவலைப்படுவது, மண்ணை ஆய்வு செய்வது மற்றும் பிற அம்சங்களை அவர் கருத்தில் கொள்கிறார் என்று பிரதமர் கூறினார். ஆனால், உ.பி.யில், இணைப்பு வசதிகளை பற்றி கவலைப்படாமல் தொழில்மயமாக்கல் கனவுகளை வெளிப்படுத்திய இத்தகைய அரசாங்கங்களின் நீண்ட காலத்தை நாம் பார்த்திருக்கிறோம். இதனால், தேவையான வசதிகள் இல்லாததால், இங்கு அமைந்துள்ள பல தொழிற்சாலைகள் பூட்டியே கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில், தில்லி மற்றும் லக்னோ ஆகிய இரண்டும் வம்சங்களின் ஆதிக்கத்தில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பல ஆண்டுகளாக, குடும்ப உறுப்பினர்களின் இந்த கூட்டணி உ.பி.யின் லட்சியங்களை நசுக்கியது.

 

உ.பி.யில் உள்ள இரட்டை என்ஜின் அரசு உ.பி.யில் உள்ள சாமானிய மக்களை தங்கள் குடும்பமாக கருதி இன்று செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார். புதிய தொழிற்சாலைகள் உருவாகும் சூழல் உருவாகி வருகிறது. இந்த தசாப்தத்தின் தேவைகளை மனதில் கொண்டு, வளமான உத்தரப்பிரதேசத்தை உருவாக்க உள்கட்டமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன என்றார் அவர்.

 

கொரோனா தடுப்பூசி வழங்கலில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும் உத்தரப் பிரதேச அரசை பிரதமர் பாராட்டினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு எதிரான எந்த அரசியல் பிரச்சாரத்தையும் அனுமதிக்காத உ.பி. மக்களை அவர் பாராட்டினார்.

 

உ.பி.யின் அனைத்து துறை வளர்ச்சிக்காக அரசு இரவும் பகலும் உழைத்து வருவதாக பிரதமர் கூறினார். இணைப்பு வசதிகளுடன், உ.பி.யில் உள்கட்டமைப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 30 லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு உ.பி அரசு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த ஆண்டு லட்சக்கணக்கான சகோதரிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க இரட்டை இயந்திர அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. சேவை மனப்பான்மையுடன் தேசத்தைக் கட்டியெழுப்புவது நமது கடமை, அதையே செய்வோம் என்றார் அவர்.

****



(Release ID: 1772393) Visitor Counter : 216