பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

பேக்கேஜிங் செய்யப் பயன்படும் சணல் பொருட்கள் சட்டம் 1987-ன் கீழ், 2021-22 சணல் ஆண்டுக்கான ஒதுக்கீடு முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


உணவு தானியங்களை 100%-ம் சர்க்கரையை 20% அளவிற்கும் கட்டாயம் சணல் பைகளில்தான் பேக்கேஜிங் செய்ய வேண்டும்

Posted On: 10 NOV 2021 3:43PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் 10, நவம்பர் 2021 அன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2021-22 சணல் ஆண்டில் (1, ஜூலை 2021 முதல் 30 ஜூன் 2022 வரை) பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கு சணல் பைகளைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22 சணல் ஆண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கட்டாய பேக்கேஜிங் விதிமுறைகளின்படி, உணவு தானியங்களை 100%-ம் சர்க்கரையை 20% அளவிற்கும் கட்டாயம் சணல் பைகளில்தான் பேக்கேஜிங் செய்ய வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டு விதிமுறைகள் உள்நாட்டு கச்சா சணல் உற்பத்தி மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் நலனைப் பாதுகாக்க மேலும் உதவிகரமாக அமைவதோடு, தற்சார்பு இந்தியா கொள்கைக்கு ஏற்ப, இந்தியா தற்சார்பு அடையவும் வழிவகுக்கும். சணல் பேக்கேஜிங் பொருட்கள் ஒதுக்கீடு, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா சணலில் 66.57% பயன்படுத்துவதற்கு உதவிகரமாக அமையும். இந்தப் புதிய ஒதுக்கீடு முறை மூலம், சணல் ஆலைகள் மற்றும் அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 0.37 மில்லியன் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் அளித்துள்ளது.

இந்தியாவின் தேசியப் பொருளாதாரத்தில் சணல் தொழில் முக்கிய இடம் வகிக்கிறது, குறிப்பாக கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேற்கு வங்கத்தின் முக்கியத் தொழில்களில் ஒன்றாக, சணல் தொழில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உணவு தானியங்களை பேக்கேஜிங் செய்ய ஆண்டுதோறும் சுமார் ரூ.8,000 கோடி அளவிற்கு மத்திய அரசு சணல் சாக்குப் பைகளை கொள்முதல் செய்வதன் மூலம், சணல் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை உத்தரவாதம் கிடைக்கச் செய்வதுடன், தொழிலாளர்களுக்கும் வேலை உத்தரவாதத்தை அளித்து வருகிறது.

****



(Release ID: 1770603) Visitor Counter : 201