சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 06 MAY 2020 6:18PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், குஜராத் துணை முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் திரு நிதின்பாய் பட்டேல், மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் திரு ராஜேஷ் டோப்பே ஆகியோருடன் இன்று உயர்நிலை ஆய்வு நடத்தினார்.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, மத்திய மாநில அரசுகளின் உயரதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இந்த இரு மாநிலங்களிலும் கோவிட்-19 நோய்த் தாக்குதல் மேலாண்மைக்குத் தேவையான ஆயத்த நிலைகள் குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

கோவிட் அல்லாத விஷயங்களில் அத்தியாவசிய சேவைகள் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தினார். தீவிர மூச்சுக் கோளாறு தொற்று (சாரி) / சளிக் காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவு (ஐ.எல்.ஐ.) குறித்த மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தினால், நோய்த் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் காணவும், உரிய சமயத்தில் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். கோவிட்-19 நோய் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க முன்வராத நிலை இருப்பதால், அந்த நோயாளிகளை பாரபட்சமாக நடத்தக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவ்வாறு செய்தால், நோய் பாதிப்பு உள்ளவர்கள் உரிய சமயத்தில் அதை தெரிவிக்க முன்வருவார்கள். இதனால் சிகிச்சை வசதியை அதிகரித்து, மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று அவர் கூறினார்.

கோவிட்-19 நோய் பாதித்தவர்களில் 14,183 பேர் இதுவரை குணமாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1457 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்த நோய் பாதித்தவர்களில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28.72 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரையில் 49,391 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. நேற்றில் இருந்து புதிதாக 2958 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறிந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.



(Release ID: 1621563) Visitor Counter : 163