பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்


நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்த கட்சிகள், பெண்களின் சக்தியை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன: பிரதமர்

குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சியினர் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்களின் பயம்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 18 APR 2026 11:39PM by PIB Chennai

இந்தியாவின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் தொடர்பான மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், பெண்களின் முன்னேற்றம் தடைபட்டிருப்பது குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். அரசின் முழுமையான மற்றும் நேர்மையான முயற்சிகள் இருந்தபோதிலும், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா   நிறைவேறத் தவறியதன் மூலம், பெண்களின் நியாயமான கனவுகள் நசுக்கப்பட்டுவிட்டன என்று அவர் வேதனை தெரிவித்தார். "இந்த மோசமான விளைவுக்காக நாட்டின் அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று திரு மோடி கூறினார்.

தேசிய நலனே முதன்மையானது என்பதை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் நலனைக் காட்டிலும் தங்களின் கட்சி நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார்.

நாடு முழுவதும் ஏற்பட்ட மிகுந்த ஏமாற்றத்தைப் பிரதிபலித்த பிரதமர், இந்த மசோதாவின் தோல்வி, பெண்களின் சுயமரியாதை மீது விழுந்த பேரிடி என்று குறிப்பிட்டார்.  இந்த அவமானம் பெண்களின் மனங்களில் நிரந்தரமாகப் பதிந்துவிடும்  என்று அவர் சுட்டிக்காட்டினார். "பெண்கள் எதை வேண்டுமானாலும் மறந்து விடுவார்கள், ஆனால் தங்கள் பெருமைக்கு ஏற்பட்ட அவமானத்தை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்," என்று திரு மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தியப் பெண்கள், தீய நோக்கங்களை நன்கு அறிந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் தவறு செய்யும் அரசியல்வாதிகளைக் கடுமையாகப் பொறுப்பேற்க வைப்பார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்தின் மாற்றத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை விவரித்த பிரதமர், இந்தச் சட்டம், மக்கள்தொகையில் 50% அங்கம் வகிக்கும் பெண்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உரிமைகளை வழங்கவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு மாபெரும் முயற்சி என்று விளக்கினார். அமைப்பு ரீதியான தடைகளை அகற்றி, மாநிலங்களின் அளவு அல்லது புவியியல் அமைப்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தையும் சமமாக அதிகரிப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். "பெண்களின் உரிமைகளைப் பறிக்கப் பயன்படுத்தும் வெறுக்கத்தக்க அரசியல் போக்கை நாடு இப்போது முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளது," என்று திரு மோடி உறுதிப்படுத்தினார்.

தங்கள் குடும்பங்களைச் சாராத அதிகாரம் பெற்ற பெண்களால், தங்களது  உள்ளூர் தலைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சிகள் அஞ்சுகின்றன என பிரதமர் கூறினார். தற்போது பஞ்சாயத்துகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான திறமையான பெண்கள், குடும்ப அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் ஆழமாக வேரூன்றிய பாதுகாப்பின்மைக்கு நேரடி சவாலாக விளங்குகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொகுதி மறுவரையறை தொடர்பான தவறான கூற்றுகளை மறுத்த பிரதமர், அனைத்து மாநிலங்களும் சமமான, நியாயமான விகிதத்தில் தங்கள் இடங்களை அதிகரித்துக் கொள்ளும் என்பதால், எந்த மாநிலமும் தனது பிரதிநிதித்துவத்தை இழக்காது என்பதை அரசு திட்டவட்டமாக உறுதி செய்துள்ளதாகத் தெளிவுபடுத்தினார். பிராந்திய வளர்ச்சிக்கான தவறவிடப்பட்ட வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டி, இந்தத் திருத்தம் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கான நாடாளுமன்ற இடங்களை கணிசமாக அதிகரித்திருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் போராட்டம் என்பது ஒரு தனிச் சட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல, அது ஆழமான எதிர்மறையான, சீர்திருத்த எதிர்ப்பு மனப்பான்மைக்கு எதிரான ஒரு பெரும் போர் என்று அவர் எடுத்துரைத்தார். "இந்த நச்சு மனப்பான்மைக்கு, நாட்டின் அனைத்து சகோதரிகளும் மகள்களும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை," என்று திரு மோடி குறிப்பிட்டார்.

மசோதாவின் தோல்வி, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த பிரதமர், எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை ஆதரித்திருந்தால், விளம்பரங்கள் மூலம் அவர்களைப் பாராட்ட தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். "இந்தப் பிரச்சினை ஒருபோதும் அரசியல் பெருமை தேடிக்கொள்வது பற்றியது அல்ல; இது உரிமைகளைப் பாதுகாப்பது பற்றியது," என்று திரு மோடி திட்டவட்டமாகக் கூறினார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், கோடிக்கணக்கான பெண்களின்  துயரத்தில் தானும் பங்கெடுப்பதாகக் கூறினார். இந்தச் சட்டமியற்றும் பாதையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு தடையையும் நீக்குவதாக உறுதியளித்த அவர், நாட்டின் 100 சதவீதப் பெண்களின் ஆசீர்வாதத்துடன் அரசு இறுதியில் வெற்றி பெறும் என்று பிரகடனப்படுத்தினார். "மக்கள் தொகையில் சரிபாதியினரின் கனவுகளுக்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும், நாம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்," என்று திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253466&reg=3&lang=2

AD/BR/RK

 

(Release ID: 2253466)


(வெளியீட்டு அடையாள எண்: 2253495) வருகையாளர் எண்ணிக்கை : 11