பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை தொடங்கி வைத்தார்

மகளிருக்கு அதிகாரமளித்தல் வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளம், நாட்டின் மகளிருக்கு அதிகாரமளித்தல் எங்கள் அரசின் முதன்மையான முன்னுரிமையாகும்: பிரதமர்

அரசு தொடர்ந்து பணியாற்றுகிறது அவர்களுடைய வாழ்க்கை சிரமங்களை குறைக்க தொடர்ந்து பணியாற்றும்: பிரதமர்

அன்னையின் கண்ணியம், அவரது மரியாதை, அவரது சுயமரியாதை ஆகியவை எங்கள் அரசின் முதன்மை முன்னுரிமையாகும்: பிரதமர்

Posted On: 02 SEP 2025 2:35PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை இன்று காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த புனிதமிக்க செவ்வாய்க்கிழமையில் உயர்ந்த நம்பிக்கைக்குரிய முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் பீகாரின் அன்னையர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு புதிய வசதி அளிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இந்த முன்முயற்சி, கிராமங்களில் வாழ்வாதார கடன் தொடர்புடைய பெண்கள் எளிதாக நிதி ஆதரவைப் பெற்று தங்களுடைய பணி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த உதவிடும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜீவிகா வாழ்வாதார கடன் முறை முழுவதுமாக மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதாகவும், நேரடி வருகையை தவிர்த்து மொபைல் ஃபோன் வாயிலாக அனைத்தையும் தற்போது மேற்கொள்ள முடியும் என்று தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.   வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளதற்காக பீகார் மாநில அன்னையர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த சிறப்பான முன்முயற்சிக்காக திரு நிதிஷ் குமாருக்கும், பீகார் அரசுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். 

மகளிருக்கு அதிகாரமளித்தல் வளர்ச்சியடைந்த இந்தியாவின் மிகப்பெரிய அடித்தளம் என்று குறிப்பிட்ட திரு மோடி, மகளிருக்கு அதிகாரமளித்தலும், அவர்களுடைய வாழ்வாதார சிரமங்களைக் குறைத்தலும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். அன்னையர்கள், சகோதரிகள் மற்றும் புதல்விகளின் வாழ்க்கைத்தரத்தை எளிதாக்க அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். பெண்களுக்காக கோடிக்கணக்கான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதன் மூலம் திறந்தவெளி கழிப்பிட சிரமங்களிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு, அந்த வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படுவது உறுதிசெய்ய சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.  அந்த வீடுகளின் உரிமையாளர்களாக பெண்கள் மாறும் போது, அவர்களுடைய குரலும் ஓங்கி ஒலிக்கிறது.

தூய்மையான குடிநீர் வசதியை ஏற்படுத்துவதில் உள்ள பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில், இல்லந்தோறும் குடிநீர் வசதி திட்டத்தை அரசு தொடங்கியது. சுகாதார வசதியை பெறுவதில் அன்னையர்களுக்கும், சகோதரிகளுக்கும் சிரமம் ஏற்படக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு ரூபாய் 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வசதி வழங்கப்பட்டுள்ளதாக திரு மோடி தெரிவித்தார். இலவச ரேஷன் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், நாள்தோறும் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உணவளிப்பது என்ற கவலையில் இருந்து அனைத்து அனையர்களும் விடுபட்டுள்ளதாக கூறினார். மகளிரின் வருவாயை அதிகரிக்க லட்சாதிபதி சகோதரி, ட்ரோன் சகோதரி, வங்கி தோழி போன்ற முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இவை நாடு முழுவதும் மகளிருக்கு அதிகாரம் அளிப்பதாக தெரிவித்தார். இத்திட்டங்கள் சேவையாற்றும் அன்னையர்கள் மற்றும் மகளிருக்கு அர்ப்பணிக்கும் வகையில் மிகப்பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்று அவர் விவரித்தார். வரும் மாதங்களில் பீகாரில் தங்களுடைய அரசு இந்த இயக்கத்தை மேலும் துரிதப்படுத்தும் என்று திரு மோடி உறுதியளித்தார்.

தாய்வழி சக்தி மற்றும் அன்னையர்களின் மரியாதை என்பது என்றும் பீகார் மண்ணில் உயர்ந்த இடத்தை வகிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பீகாரில் கங்கை மையா, கோசி மையா, கண்டகி மையா, புன்புன் மையா ஆகிய தெய்வங்கள் ஆழ்ந்த பக்தியுடன் வழிபடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். ஜானகி அவர்கள் பீகாரின் புதல்வி என்றும், அதன் கலாச்சார நெறிமுறைகளில் வளர்க்கப்பட்டவர் என்றும் உலகம் முழுவதும் சீதா அன்னை என்று போற்றப்படுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். சாத்தி மையாவுக்கு பிரார்த்தனை செய்வது அனைவருக்கும் ஒரு ஆசீர்வாதமாகக் கருதப்படுகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். நவராத்திரியின் புனித விழா நெருங்கி வருவதாகவும், அந்த நேரத்தில் நாடு முழுவதும் ஒன்பது வடிவ அன்னை துர்க்கை வழிபடப்படுவதாகவும் அவர் கூறினார். பீகார் மற்றும் பூர்வாஞ்சல் பகுதியில், தெய்வீகத் தாயின் வெளிப்பாடுகளாக ஏழு சகோதரிகளை வணங்கும் சத்பாஹினி பூஜையின் தலைமுறை பாரம்பரியமும் உள்ளது என்றும் அவர் கூறினார். தாய் மீதான இந்த ஆழமான நம்பிக்கையும் பக்தியும் பீகாரின் வரையறுக்கப்பட்ட அடையாளமாகும் என்பதை அவர் வலியுறுத்தினார். எவரும், எவ்வளவு அன்பானவர்களாக இருந்தாலும், ஒரு அன்னையின் இடத்தை வகிக்க முடியாது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தமது அரசுக்கு அன்னையர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பெருமை மிகவும் முன்னுரிமை வாய்ந்தவை என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒரு அன்னை நமது உலகின் சாராம்சம் என்றும், அவர் நமது சுயமரியாதையை வெளிப்படுத்துகிறார் என்றும் குறிப்பிட்டார். பீகாரின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் குறிப்பிட்ட அவர்அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து தமது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார். தம்மாள் அதை கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது என்று கூறினார். பீகாரில் உள்ள எதிர்க்கட்சி கூட்டணியின் ஒரு மேடையில் இருந்து, தமது அன்னைக்கு எதிராக அவமானகரமான கருத்துக்கள் கூறப்பட்டதாக பிரதமர் கூறினார். இந்த அவமானங்கள் தனது அன்னையை அவமதிப்பது மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு தாய், சகோதரி மற்றும் புதல்வியையும் அவமதிப்பதாகும் என்று அவர் கூறினார். இதுபோன்ற கருத்துக்களைக் கண்டும், கேட்டும் பீகார் மக்கள், குறிப்பாக அதன் அன்னையர்கள் உணர்ந்த வலியை திரு மோடி எடுத்துரைத்தார். தமது இதயத்தில் உள்ள துயரத்தை பீகார் மக்களும் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர் என்றும், இந்த துயரத்தை இன்று மக்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். 

சுமார் 55 ஆண்டுகளாக சமூகத்திற்கும், நாட்டிற்கும் தாம் சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணமும், நாட்டிற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். இந்தப் பயணத்தில் தமது தாயின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். பாரத அன்னைக்கு சேவை செய்வதற்காக, தமது தாய் தன்னை குடும்பத்திற்கான கடமைகளிலிருந்து விடுவித்ததாக திரு மோடி குறிப்பிட்டார். நாட்டின் சேவைக்காக தம்மை ஆசிர்வதித்த இந்த தாய் உலகில் இல்லாத நிலையில், எதிர்க்கட்சி கூட்டணியின் ஒரு மேடையில் இருந்து தாக்கப்பட்டது குறித்து தமது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். இது மிகவும் வேதனையானது, துயரமிக்கது மற்றும் மிகவும் புண்படுத்தியது என்று அவர் விவரித்தார்.

ஒவ்வொரு அன்னையும் தமது குழந்தைகளை மகத்தான தியாகத்தின் மூலம் வளர்க்கிறார்கள் என்றும், மேலும் அவருக்கு தமது குழந்தைகளை விட வேறு ஏதும் பெரிதல்ல என்பதை குறிப்பிட்ட திரு மோடி, தமது சொந்த அன்னையை சிறு வயதிலிருந்தே இந்த சூழலில் கண்டதாக பகிர்ந்து கொண்டார்.  வறுமை மற்றும் சிரமங்களை எதிர்கொண்டு, தமது குடும்பத்தையும், குழந்தைகளையும் வளர்த்தார் என்று அவர் தெரிவித்தார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, தமது தாயார் வீட்டின் கூரை மழை நீரால் கசியாமல் இருக்க முயன்றார் என்றும் இதன் மூலம்  அவருடைய குழந்தைகள் அமைதியாக உறங்க முடிந்தது என்று  அவர் நினைவு கூர்ந்தார். நோய்வாய்ப்பட்டிருந்தாலும், ஒரு நாள் ஓய்வெடுத்தால் கூட, தமது குழந்தைகள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதை அறிந்து அவர் வேலைக்குச் சென்றதாக அவர் கூறினார். தமது குழந்தைகளுக்கு இரண்டு ஆடைகளை தைக்க ஒவ்வொரு பைசாவையும் சேமித்து, தமக்கென என்றுமே ஒரு புதிய புடவையை வாங்கவில்லை அவர் குறிப்பிட்டார். ஒரு ஏழை தாய் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்து தமது குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வலுவான மதிப்புகளை அளித்தார் என்று பிரதமர் தெரிவித்தார். அதனால்தான் ஒரு தாயின் இடம் தெய்வங்களுக்கு மேலாகக் கருதப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். பீகாரின் கலாச்சார நெறிமுறைகள் பற்றிய ஒரு வசனத்தை சுட்டிக்காட்டிய அவர், எதிர்க்கட்சி மேடையில் இருந்து வீசப்படும் குற்றச்சாட்டு தமது தாயை நோக்கி மட்டுமல்ல, இது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அன்னையர்களுக்கு அவமதிப்பு என்று திரு மோடி கூறினார்.

ஏழைத்தாயின் தியாகம் மற்றும் அவரது மகனின் வலி பற்றி மன்னர் பரம்பரைகளில் பிறந்தவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்று கூறிய திரு மோடி, இவர்கள், வெள்ளி மற்றும் தங்கக் கரண்டிகளுடன் பிறந்தவர்கள். தங்களின் குடும்ப பாரம்பரியமாக பீகார் மீதும், ஒட்டுமொத்த தேசத்தின் மீதும் அவர்கள் குறி வைத்துள்ளனர் என்றார். அதிகாரத்தின் இருக்கை தங்களின் பிறப்புரிமை என்று  அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், ஏழைத் தாயின் மகனை, கடின உழைப்புக் கொண்ட ஒருவரை பிரதமராக்க இந்திய மக்கள் ஆசீர்வதித்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இதனை அதிகார வர்க்கம் ஏற்றுக் கொள்வது கடினமானதாகும். சமூகத்தின் பின்தங்கியவர்களும் மிகவும் பின்தங்கியவர்களும் உயர்வதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை. கடுமையாக உழைப்பவர்களை அவமதிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இதனால், அவர்கள் அவமதிக்கின்றனர்.  பீகார் தேர்தலின் போது கூட, கவுரவக் குறைவான இழிவான மொழியில் தாம் விமர்சிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இது சம்பந்தப்பட்டவர்களின் மேட்டுக்குடி மனநிலையை வெளிப்படுத்தியது என்றார். இதே மனநிலையில் தான் இப்போதும் அவர்கள் உள்ளதால், மறைந்த தனது தாய்மீது அவதூறு பேசுகிறார்கள் என்று அவர் கூறினார்.

தாய்மார்களையும், சகோதரிகளையும் இழிவாக பேசும் மனநிலை என்பது பெண்கள்  பலவீனமானவர்கள், அவர்களை பொருட்களாக சுரண்டலாம், ஒடுக்கலாம் என்பதைக் காட்டுகிறது என பிரதமர் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் அதிகாரத்திற்கு வரும் போது, பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த உண்மையை பீகார் மக்களைவிட நன்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. பீகாரில் எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்த போது குற்றங்களும், குற்றவாளிகளும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. கொலையும், பணம் பறித்தலும், பாலியல் பலாத்காரமும், சர்வ சாதாரணமாக இருந்தன. முந்தைய அரசில் இருந்தவர்கள், கொலைகாரர்களுக்கும், பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கும் பாதுகாப்பாக இருந்தனர். பீகாரின் பெண்கள் அந்த ஆட்சியை எதிர்க்க முடியாமல் தாங்கிக் கொண்டார்கள். காரணம் பெண்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியே வருவது பாதுகாப்பானதாக இருக்கவில்லை. குடும்பங்கள் நிலையான அச்சத்தில் இருந்தன. அவர்களின் கணவர்களும், மகன்மகளும் வெளியே வந்தால் மாலையில் உயிருடன் திரும்புவதற்கு நிச்சயமில்லாத நிலை இருந்தது என்று திரு மோடி கூறினார். தங்களின் குடும்பங்களை இழப்பது பிணையம் கொடுக்க தங்களின் ஆபரணங்களை விற்பது மாஃபியா கும்பலால் கடத்தப்படுவது அல்லது தங்களின் மகிழ்ச்சியை இழப்பது என்ற அச்சுறுத்தலின் கீழ், பெண்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பது பற்றி அவர் விவரித்தார். அந்த இருளிலிருந்து வெளியே வர பீகார் நீண்ட போராட்டத்தை நடத்தியது என்று கூறிய அவர், எதிர்க்கட்சியினரை அதிகாரத்திலிருந்து அகற்றுவதிலும் மீண்டும் மீண்டும் தோற்கடிப்பதிலும் பீகார் பெண்களின் பங்கினை பாராட்டினார். இதனால் தான் எதிர்க்கட்சிகள் இப்போது, பீகார் பெண்களுக்கு எதிராக கோபமடைந்துள்ளனர். இந்தக் கட்சிகள் பழிவாங்கவும், பெண்களை தண்டிக்கவும் விரும்புகின்றன என்ற அவற்றின் எண்ணத்தை தெளிவாக பீகார் பெண்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார்.

குறிப்பிட்ட எதிர்க்கட்சிகள் பெண்கள் முன்னேற்றத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இதனால் தான் மகளிருக்கான இடஒதுக்கீடு குறித்த முன்முயற்சிகளை அவை கடுமையாக எதிர்த்தன. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் முக்கியமான இடத்திற்கு உயர்ந்தால், அவர்களின் விரக்தி கண்கூடாக தெரிந்துவிடுகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் குடியரசுத்தலைவரான திருமதி திரௌபதி முர்முவை, பழங்குடி சமூகத்தின் மகளை, பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்தவரை எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் அவமதிப்பதை அவர் உதாரணமாக எடுத்துக் காட்டினார். இத்தகைய வெறுப்பு அரசியலை, பெண்களுக்கு எதிரான கருத்துள்ளவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இன்னும் 20 நாட்களில் நவராத்திரி தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து 50 நாட்களில் சத் புனித பண்டிகை தொடங்க உள்ளது. இதில்  சத்தி மையாவுக்கு  வழிபாடு செய்யப்படும். தமது தாயை அவமதித்தவர்களை தாம் மன்னிக்கலாம் ஆனால் தாய்மார்களை அவமதிப்பவர்களை இந்திய மண் ஒருபோதும் மன்னிக்காது. எதிர்க்கட்சிகள் தங்களின் செயல்களுக்காக சத்பாஹினி மற்றும் சத்தி மையாவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்திய பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது நமது அரசின் உயர் முன்னுரிமையாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், மக்கள் தொடர்ந்து தங்கள் அரசுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுதந்திர தினத்தில் இல்லம் தோறும் மூவண்ணக் கொடி  என்ற முழக்கம் கிராமங்களிலும் வீதிகளிலும் எதிரொலித்தது போல் தற்போதைய தேவை இல்லம் தோறும் சுதேசி, இல்லத்திற்கு இல்லம் சுதேசி என்பதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தப் புதிய மந்திரம் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் அதிகாரம் அளிக்கவும், தற்சார்பு இந்தியாவை கட்டமைக்கவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.  கடைகாரர்களும், வணிகர்களும், இது சுதேசி பொருள் என்ற அறிவிப்புப் பலகைகளை பெருமிதத்தோடு காட்சிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், துணை முதலமைச்சர்கள், திரு சாம்ராட் சௌதரி, திரு விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

*****

 

(Release ID: 2163021)

AD/IR/SMB/KPG/RJ/KR/DL


(Release ID: 2163170) Visitor Counter : 5