பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 23 FEB 2024 11:14AM by PIB Chennai

மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மனோகர் ஜோஷி 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மக்களவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மகாராஷ்டிர முதலமைச்சராக பதவி வகித்த மனோகர் ஜோஷி மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்ததாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்களவைத் தலைவராக மனோகர் ஜோஷி பதவி வகித்த காலத்தில், நமது நாடாளுமன்ற நடைமுறைகளை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்ற பாடுபட்டார் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

"மனோகர் ஜோஷியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. பல ஆண்டுகள் பொது சேவையில் ஈடுபட்ட ஒரு மூத்த தலைவராக அவர் இருந்தார். உள்ளாட்சி, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மகாராஷ்டிர முதலமைச்சராக அவர் இருந்தபோது, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். மத்திய அமைச்சராகவும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். மக்களவைத் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில், நமது நாடாளுமன்ற நடைமுறைகளை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்ற அவர் பாடுபட்டார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பெருமையைப் பெற்ற மனோகர் ஜோஷி, அவரது பணிகளுக்காகவும் விடாமுயற்சிக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி."

***

ANU/PKV/PLM/KV

 



(Release ID: 2008298) Visitor Counter : 67