பிரதமர் அலுவலகம்

கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்

"கடமை மற்றும் பொறுப்பின் பாதை என்னை இங்கே இருக்க வழிவகுத்தது, ஆனால் என் இதயம் மோர்பி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது"
"சர்தார் படேலின் வலுவான உறுதியிலிருந்து முழு நாடும் உத்வேகம் பெறுகிறது"
"சர்தார் படேலின் ஜெயந்தி, ஒற்றுமை தினம் ஆகியவை நமக்கு நாட்காட்டியில் உள்ள தேதிகள் மட்டுமல்ல, அவை இந்தியாவின் கலாச்சார வலிமையின் பிரமாண்டமான கொண்டாட்டங்கள்"
"அடிமை மனப்பான்மை, சுயநலம், ஒரு சாராரைத் திருப்திப்படுத்தல், சுற்றத்தாருக்கு காட்டும் ஆதரவு, பேராசை, ஊழல் ஆகியவை நாட்டை பிளவுபடுத்துவதுடன் பலவீனப்படுத்தும்"
"பிரிவினையின் விஷத்தை நாம் ஒற்றுமையின் அமிர்தத்தால் எதிர்கொள்ள வேண்டும்"
"அரசு திட்டங்கள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடையும் அதே நேரத்தில் கடைசி நபரை பாரபட்சமின்றி இணைக்கின்றன"
"உள்கட்டமைப்பிற்கு இடையிலான இடைவெளி சிறியதாக இருந்தால், ஒற்றுமை வலுவாகும்"
"நாட்டின் ஒற்றுமைக்காக தங்கள் உரிமைகளை தியாகம் செய்த அரச குடும்பங்களின் தியாகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஏக்தா நகரில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்

Posted On: 31 OCT 2022 10:54AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சர்தார் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் தேசிய ஒற்றுமை தினம் தொடர்பான நிகழ்ச்சிகளில் இன்று அவர் பங்கேற்றார்.

தொடக்கத்தில், மோர்பியில் நடந்த விபத்தில்  உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.  கெவாடியாவில் தாம் இருந்தாலும், மோர்பியில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தமது இதயம் இணைந்திருப்பதாக அவர் கூறினார். "ஒருபுறம், துக்கத்தால் நிறைந்த இதயம் உள்ளது, மறுபுறம் பொறுப்பு மற்றும் கடமைப் பாதை உள்ளது," என்று அவர் கூறினார். தேசிய ஒற்றுமை தினத்தில், கடமை மற்றும் பொறுப்பின் பாதையே தம்மை இங்கு அழைத்து வந்திருப்பதாக அவர் கூறினார். நேற்றைய விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் அரசு தோளோடு தோள் நிற்கும் என்று உறுதியளித்தார். மாநில அரசு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இராணுவம் மற்றும் விமானப்படையின் குழுக்களைத் தவிர மற்ற மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை  குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு உதவி வழங்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். குஜராத் முதலமைச்சர் மோர்பிக்கு சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மீட்புப் பணிகளில் எந்தக் குறையும் இருக்காது என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் உறுதியளித்தார். இந்த சோக நிகழ்வின் காரணமாக கலாச்சார நிகழ்ச்சி  ரத்து செய்யப்பட்டது.

"இது நமது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்த ஆண்டு, நாம் புதிய தீர்மானங்களுடன் முன்னேறி வருகிறோம்." என்று 2022 ஆம் ஆண்டில் தேசிய ஒற்றுமை தினத்தின்  முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். குடும்பம், சமூகம் அல்லது தேசம் என ஒவ்வொரு கட்டத்திலும் ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் கூறினார். இந்த உணர்வு நாடு முழுவதும் 75,000 ஒற்றுமை ஓட்டங்களில் வெளிப்படுகிறது என்றார். “சர்தார் படேலின் வலுவான உறுதியிலிருந்து முழு நாடும் உத்வேகம் பெறுகிறது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் ஒற்றுமைக்காகவும், ‘ஐந்து உறுதிமொழிகளை’ செயல்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்”, என்றார் அவர்.

சர்தார் படேல் போன்ற தலைவர்களால் நமது சுதந்திரப் போராட்டம் நடத்தப்படாவிட்டால்,  சூழ்நிலையை கற்பனை செய்வது கடினம் என்று பிரதமர் கூறினார். 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இணைக்கப்படாவிட்டால் என்ன நடந்திருக்கும்? “நமது சமஸ்தானங்கள் ஆழ்ந்த தியாக உணர்வையும் நம்பிக்கையையும் அன்னை இந்தியாவின் மீது காட்டாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?” என்று பிரதமர் கேட்டார். இந்த அசாத்தியமான பணியை சர்தார் படேல் செய்து முடித்தார். “சர்தார் படேலின் ஜெயந்தி மற்றும் ஒற்றுமை தினம் ஆகியவை நமக்கு நாட்காட்டியில் உள்ள தேதிகள் மட்டுமல்ல, அவை இந்தியாவின் கலாச்சார வலிமையின் பிரமாண்டமான கொண்டாட்டங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, ஒற்றுமை ஒரு கட்டாயம் அல்ல, அது எப்போதும் நம் நாட்டின் ஒரு அம்சமாக இருந்தது. ஒற்றுமையே நமது  தனித்துவம்” என்று பிரதமர் எடுத்துக் காட்டினார். நேற்று மோர்பியில் நடந்தது போன்ற ஒரு பேரிடரில், முழு நாடும் ஒன்றாக முன்னோக்கி வருகிறது, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மக்கள் பிரார்த்தனை மற்றும் உதவிகளை வழங்குகிறார்கள். தொற்றுநோய் பரவிய காலத்தில், மருந்து, ரேஷன் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றில் ஒத்துழைக்கும் உணர்வுபூர்வமான ஒற்றுமையில் இது முழுமையாக வெளிப்பட்டது. விளையாட்டு வெற்றிகளின் போதும், திருவிழாக்களிலும், நமது எல்லைகள் அச்சுறுத்தப்படும்போதும், நமது வீரர்கள் அவர்களைப் பாதுகாக்கும்போதும் இதே உணர்வுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இந்தியாவின் ஒற்றுமையின் ஆழத்தை உணர்த்துவதாக பிரதமர் கூறினார். இந்த ஒற்றுமை பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்களின் பக்கங்களில் ஒரு முள்ளாக இருந்தது, அவர்கள் பிரிவினையை விதைப்பதன் மூலம் அதை நீர்த்துப்போகச் செய்ய முயன்றனர், இருப்பினும், அவர்களின் வடிவமைப்புகள் நமது நனவில் நேரடி நீரோட்டமாக  இருந்த ஒற்றுமையின் அமிர்தத்தால் தோல்வியடைந்தன. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்ளும் சக்திகள் இன்னும் உள்ளதாலும், சாதி, பிரதேசம், மொழி, வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினையை தூண்டும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாலும் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். நாட்டைப் பிளவுபடுத்தும் மற்றும் பலவீனப்படுத்தும் அடிமை மனப்பான்மை, சுயநலம், சமரசம், உறவினர்களுக்கு உதவுதல், பேராசை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவும் அவர் எச்சரித்தார். "பிரிவினையின் விஷத்தை நாம் ஒற்றுமையின் அமிர்தத்தால் எதிர்கொள்ள வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“ஒற்றுமை தின விழாவில், சர்தார் சாகேப் ஒப்படைத்த பொறுப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டார். தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவது குடிமக்களின் பொறுப்பு என்றும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புணர்வுடன் கடமைகளைச் செய்யத் தயாராக இருந்தால் மட்டுமே இது நடக்கும் என்றும் அவர் கூறினார். "இந்த பொறுப்புணர்வுடன், அனைவரும் இணைந்து முயற்சித்து உயருவோம் என்பதை சாத்தியமாக்க முடியும். இதனால், இந்தியா வளர்ச்சிப் பாதையில் மேலும் முன்னேறும்" என்று பிரதமர் கூறினார். பாரபட்சமின்றி, நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசின் கொள்கைகள் சென்றடைந்து வருவதாக அவர் கூறினார். குஜராத்தின் சூரத்தில் உள்ள மக்களைப் போலவே அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சியாங் மக்களுக்கும் இலவச தடுப்பூசிகள் எளிதாகக் கிடைக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பிரதமர் எடுத்துரைத்தார். எய்ம்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்களை கோரக்பூரில் மட்டுமல்லாமல், பிலாஸ்பூர், தர்பங்கா, குவஹாத்தி, ராஜ்கோட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் காணலாம். தமிழகம் மட்டுமின்றி உத்தரப் பிரதேசத்திலும் பாதுகாப்பு வழித்தடங்கள் மேம்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், வரிசையில் நிற்கும் கடைசி நபரை இணைக்கும் போது, அரசின் திட்டங்கள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் அடிப்படைத் தேவைகளைப் பெற பல தசாப்தங்களாக எப்படிக் காத்திருந்தார்கள் என்பதை விளக்கிய பிரதமர், “உள்கட்டமைப்புக்கு இடையே உள்ள இடைவெளி சிறியதாக இருந்தால், ஒற்றுமை பலமாகிறது” என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு திட்டத்தின் பலனும் ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம். அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் டிஜிட்டல் இணைப்பு, அனைவருக்கும் சுத்தமான சமையல், அனைவருக்கும் மின்சாரம் போன்ற திட்டங்களை பிரதமர் பட்டியலிட்டார். 100% குடிமக்களை சென்றடையும் நோக்கம் ஒரே மாதிரியான வசதிகளுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒன்றுபட்ட இலக்குகள், ஒன்றுபட்ட வளர்ச்சி மற்றும் ஒன்றுபட்ட முயற்சியின் பொதுவான நோக்கத்தை வலியுறுத்துவதாக பிரதமர் கூறினார். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள், நாட்டின் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் சாமானியர்களின் நம்பிக்கைக்கு ஒரு ஊடகமாக மாறி வருவதாகக் கூறிய பிரதமர், சாமானியர்களின் நம்பிக்கைக்கான ஊடகமாக அது செயல்படுவதை சுட்டிக்காட்டினார். சர்தார் படேலின் இந்தியாவின் தொலைநோக்கு பார்வை இது என்று குறிப்பிட்ட பிரதமர், “ஒவ்வொரு இந்தியருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும், சமத்துவ உணர்வு இருக்கும். அந்த எண்ணம் நிறைவேறுவதை இன்று நாடு காண்கிறது”

கடந்த 8 ஆண்டுகளில், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் நாடு முன்னுரிமை அளித்துள்ளது என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், பழங்குடியினரின் பெருமைகளை நினைவுகூரும் வகையில் பழங்குடியின பெருமை தினத்தை கொண்டாடும் பாரம்பரியத்தை நாடு தொடங்கியுள்ளது என்றார். நாட்டின் பல மாநிலங்களில் பழங்குடியினர் அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மான்கர் தாம் மற்றும் ஜம்புகோடாவின் வரலாற்றை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் நடத்தப்பட்ட பல படுகொலைகளை எதிர்கொண்டு சுதந்திரம் அடையப்பட்டது என்று அவர் கூறினார். அப்போதுதான் சுதந்திரத்தின் மதிப்பையும் ஒற்றுமையின் மதிப்பையும் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

ஏக்தா நகர் உலகிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் முன்மாதிரி நகரமாக உருவாகி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் மற்றும் நகரத்தின் ஒற்றுமையே பொதுப் பங்கேற்பு ஆற்றலுடன் வளர்ச்சியடைந்து வருவதாகவும், அதற்கு ஒரு மகத்தான நிலைப்பாட்டை மட்டுமல்ல, தெய்வீக நிலைப்பாட்டை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். "ஒற்றுமை சிலை வடிவில் உலகின் மிகப்பெரிய சிலைக்கான உத்வேகம் நம்மிடையே உள்ளது" என்று திரு மோடி மேலும் கூறினார்.

ஏக்தா நகரின் வளர்ச்சி மாதிரியை எடுத்துரைத்த பிரதமர், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாடல், நாட்டை ஒளிரச் செய்யும் எல்இடி கொண்ட மின்சார சேமிப்பு மாதிரி, சூரிய சக்தியில் இயங்கும் சுத்தமான போக்குவரத்து அமைப்பு பற்றி மக்கள் பேசும்போது நகரம் முன்னணியில் இருக்கும்  என்றார். பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்புக்கான மியாவாக்கி வனம் மற்றும் பிரம்ம சக்தி தோட்டத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததை பிரதமர் நேற்று நினைவு கூர்ந்தார். ஒற்றுமை  வளாகம் , ஒற்றுமை  நர்சரி, வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் உலக காடுகள், ஒற்றுமை படகு, ஒற்றுமை ரயில் நிலையம் உள்ளிட்ட  இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த உத்வேகம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

நிறைவாக, சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் ஒற்றுமையில் சர்தார் சாகேப் ஆற்றிய பங்கை எடுத்துரைத்தார். பல நூற்றாண்டுகளாக ஆட்சியில் இருந்த அரச குடும்பங்கள், சர்தார் படேலின் முயற்சியால் நாட்டின் ஒற்றுமைக்கான புதிய அமைப்பிற்கு தங்கள் உரிமைகளை தியாகம் செய்ததாக பிரதமர் தெரிவித்தார். இந்த பங்களிப்பு சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. “இப்போது அந்த அரச குடும்பங்களின் தியாகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஏக்தா நகரில் கட்டப்படும். இது நாட்டின் ஒற்றுமைக்காக தியாகம் செய்யும் பாரம்பரியத்தை புதிய தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும்” என்று கூறி பிரதமர்தமது உரையை நிறைவு செய்தார்.

**************

(Release ID: 1872155)

  PK/SM/RS/KRS



(Release ID: 1872250) Visitor Counter : 160