பிரதமர் அலுவலகம்
இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் முப்பரிமாண மின்னொளி சிலைத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
23 JAN 2022 10:36PM by PIB Chennai
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது அமைச்சரவை சகாக்கள் திரு.அமித் ஷா, திரு.ஹர்தீப் சிங் பூரி, மற்றும் இதர அமைச்சர்களே, இந்திய தேசிய ராணுவ அறங்காவலர்களே, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் உறுப்பினர்களே, நடுவர் குழு உறுப்பினர்களே, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோரக் காவல்படை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர்களே, பேரிடர் மேலாண்மை விருது வென்ற வெற்றியாளர்களே, முக்கியப் பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே !
இந்தியத் தாயின் வீரப் புதல்வர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளில், ஒட்டுமொத்த தேசத்தின் சார்பில், எனது தலைதாழ்ந்த மரியாதையை அவருக்கு உரித்தாக்குகிறேன். இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்கது, இந்த காலகட்டம் மற்றும் நாம் அனைவரும் கூடியிருக்கும் இந்த இடமும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை தான். இந்திய ஜனநாயகத்தின் அடையாளச் சின்னமாகத் திகழும் நமது நாடாளுமன்றம், துணிச்சல்மிக்க நமது தியாகிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நமக்கு அருகிலுள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் மற்றும் பல்வேறு கட்டடங்கள், நமது செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கான நமது அர்ப்பணிப்பு உணர்வை பிரதிபலிக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, தற்போது நாம் இந்தியா கேட் பகுதியில் நமது சுதந்திர தினப் பெருவிழாவைக் கொண்டாடி வருவதோடு, சுதந்திரமான, இறையான்மை கொண்ட இந்தியாவை அடைவோம் என்ற நம்பிக்கையை நமக்கு அளித்த நேதாஜி சுகாஷ் சந்திர போஸுக்கு மரியாதை கலந்த அஞ்சலியை செலுத்திக் கொண்டிருக்கிறோம். ‘‘சுதந்திரம் கோரி நான் பிச்சையெடுக்க மாட்டேன், நான் அதை அடைந்தே தீருவேன்‘‘ என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களிடம் பெருமிதத்துடன் கூறியவர் அவர். இந்திய மண்ணில், முதல் சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி-யின் பிரம்மாண்ட சிலை, இந்தியா கேட் அருகே டிஜிட்டல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முப்பரிமாண மின்னொளி சிலை, விரைவில் பிரம்மாண்ட கிராணைட் சிலையாக மாற்றியமைக்கப்படும். தலைசிறந்த மாவீரரான நேதாஜி சுபாஷுக்கு, நன்றியுள்ள தேசம் செலுத்தும் மரியாதையே இந்த சிலை. நேதாஜி சுபாஷின் இந்த சிலை, நமது ஜனநாயக அமைப்புகள் மற்றும் வருங்கால சந்ததியினர், தேசத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை நினைவுபடுத்துவதோடு, தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் அமையும்.
நண்பர்களே,
கடந்த ஆண்டு முதல், நேதாஜி-யின் பிறந்த நாள் பராக்கிரம தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, இன்று சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுகள் வழங்கப்படுகிறது. நேதாஜி-யின் வாழ்க்கையிலிருந்து பெற்ற ஊக்கத்தால், இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. 2019 முதல் 2022 வரை இந்த விருதைப் பெறும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
2014-லிருந்து, பேரிடர் மேலாண்மையை திறம்பட மேற்கொள்ள ஏதுவாக, எங்களது அரசு, தேசிய அளவில் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிவாரணம், மீட்பு, மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். நாடு முழுவதும் தேசிய பேரிடர் மீட்புப் படையை வலுப்படுத்தி, நவீனப்படுத்தி, விரிவுபடுத்தியுள்ளோம். விண்வெளி தொழில்நுட்பத்தின் அடிப்படையில், திட்டமிடல் மற்றும் மேலாண்மையில் நாங்கள் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். நமது தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பாதுகாப்புப் படையினர், தங்களது உயிரைப் பணயம் வைத்து ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றி வருகின்றனர். எனவே, இந்த நேரத்தில், அவர்ள் அனைவருக்கும் நமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
‘அனைவரும் முயற்சிப்போம்‘ என்பது பற்றி நான் குறிப்பிடும்போது, அது அனைத்து மட்டத்திலும் மேற்கொள்ளப்படும் முழுமையான அணுகுமுறையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறேன். பேரிடர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், நமது பாடத் திட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளோம். கட்டிடப் பொறியியல் மற்றும் கட்டிட வடிவமைப்பில், பேரிடர் மேலாண்மையை ஒரு பாடமாக வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணைகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அணைகள் பாதுகாப்பு சட்டத்தையும் எங்களது அரசு கொண்டு வந்துள்ளது.
நண்பர்களே, உலகின் எந்தப் பகுதியில் எப்போது பேரழிவு ஏற்பட்டாலும், துயரமளிக்கும் உயிரிழப்புகள் மற்றும் வெளியேற்றங்களுடன், பெருமளவிலான பொருளாதார இழுழப்பு பற்றியியும் விவாதங்கள் நடைபெறுகிறது. ஆனால், பேரிடர் காலத்தில் கட்டமைப்புக் குறைபாடு, கற்பனைக்கும் அப்பாற்பட்டது. எனவே தான், பேரிடர் காலங்களிலும் தாக்குப்பிடிக்கக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில், இந்தியா வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நிலநடுக்க அபாயமுள்ள இடங்கள், வெள்ளப்பெருக்கு அல்லது புயல் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
நண்பர்களே,
நேதாஜி எதையாவது செய்ய வேண்டுமென்று நினைத்துவிட்டால், அவரை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ‘செய்ய முடியும், செய்து காட்டுவோம்‘ என்ற நேதாஜி சுபாஷின் உறுதியிலிருந்து ஊக்கம் பெற்று, நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சித்தால், நேதாஜி கனவுகண்ட இந்தியாவை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். பராக்கிரம தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றிகள் பல!
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792046
*****
(Release ID: 1792627)
Visitor Counter : 158
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam