பிரதமர் அலுவலகம்

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் தொடங்கி வைத்தார்

“இந்தியாவின் சுதந்திரத்திற்கு நுழைவு வாயில் என்று நேதாஜி கூறிய வடகிழக்கு பிராந்தியம் புதிய இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் நுழைவு வாயிலாக மாறி வருகிறது”

“வடகிழக்கின் சாத்தியக் கூறுகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபட்டு வருகிறோம்”

“இன்று நாட்டின் இளைஞர்கள் மணிப்பூர் விளையாட்டு வீரர்களிடமிருந்து ஊக்கம் பெற்று வருகின்றனர்”

“முற்றுகை மாநிலம் என்ற நிலையிலிருந்து மணிப்பூர் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மாநிலமாக மாறியுள்ளது”

“மணிப்பூரில் ஸ்திரத்தன்மையை பராமரித்து வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இரட்டை எஞ்சின் அரசினால் மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியும் ”

Posted On: 04 JAN 2022 3:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இன்று ரூ.1,850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களைத் தொடங்கி வைத்து ரூ.2,950 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  சாலை உள்கட்டமைப்பு குடிநீர் விநியோகம், பொருளாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகள் சம்பந்தமானவை இந்தத் திட்டங்கள்.

ரூ.1,7500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட ஐந்து நெடுஞ்சாலைத் திட்ட கட்டுமானங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை 37-ல் பராக் நதியின் குறுக்கே ரூ.75 கோடியில் கட்டப்பட்ட இரும்புப் பாலத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்தப் பாலம் சில்சார் மற்றும் இம்பால் இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்ட 2,387 கைபேசி கோபுரங்களையும் மணிப்பூர் மக்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.

இம்பால் நகரத்துக்கு குடிநீர் வழங்க வகை செய்யும், ரூ.280 கோடி மதிப்பிலான தவ்பார் பன்னோக்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.51 கோடியில் கட்டப்பட்ட சேனாபதி மாவட்ட தலைமையக குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் டாமன்கிளாங்க் மாவட்டத்தின் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பான குடிநீர் இதன் மூலம் வழங்கப்படும்.

இம்பாலில் ரூ.160 கோடி செலவில் தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சியில் கட்டப்பட உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய
புற்றுநோய் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். டிஆர்டிஓ ஒத்துழைப்புடன் ரூ.37 கோடி செலவில் கியாம்கியில் கட்டப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட கொவிட் மருத்துவமனையையும் அவர் திறந்து வைத்தார்.  ரூ.170 கோடி செலவிலான இம்பால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மூன்று திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். 

புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கம் மற்றும் பயிற்சிக்கான மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் ரூ.200 கோடியில் கட்டப்பட உள்ளது. ஹரியானா மாநிலம் குர்கானில் ரூ.240 கோடியில் உருவாக்கப்பட உள்ள மணிப்பூர் கலைத்திறன் நிறுவனத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் திரண்டு இருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், ஜனவரி 21-ம் தேதி மணிப்பூர் மாநில அந்தஸ்து பெற்ற 50-வது ஆண்டு வரப்போவதாகவும், இது 75 ஆண்டு அமிர்தப் பெருவிழாவுடன் இணைவது குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் துணிச்சலைப் பாராட்டிய பிரதமர், மணிப்பூரில் மொய்ராங்க் பூமியில்தான் நேதாஜி சுபாஷின் ராணுவம் முதல் முறையாக தேசியக் கொடியை பறக்க விட்டதை நினைவுகூர்ந்தார். இந்தியாவின் சுதந்திரத்திற்கு நுழைவு வாயில் என்று நேதாஜி கூறிய வடகிழக்கு பிராந்தியம் புதிய இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் நுழைவு வாயிலாக மாறி வருகிறது.  இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் முன்னேற்றத்திற்கு ஆதாரம் என தாம் நம்புவதாகவும், இன்று இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி கண்கூடாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

இன்று தொடங்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்காக மணிப்பூர் மக்களை வாழ்த்தியுள்ள  பிரதமர், முழு பெரும்பான்மையுடன் நடைபெறும் நிலையான ஆட்சியை  தந்ததற்காக மணிப்பூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.  இந்த நிலைத்தன்மையால் மணிப்பூர் மக்கள் பல நன்மைகளை அடைந்துள்ளதாகவும், ஆறு லட்ச விவசாய குடும்பங்கள், கிசான் சம்மான் நிதியின் கீழ், ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை பெற்று வருவதாகவும், பிஎம் கரீஃப் கல்யாண் திட்டத்தின் கீழ், ஆறு லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயனடைந்து வருவதாகவும் அவர் கூறினார். பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் 80,000 வீடுகள். ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் 4.25 லட்சம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, 1.5 லட்சம் எரிவாயு இணைப்புகள், 1.3 லட்சம் இலவச மின் இணைப்புகள், 30,000 கழிவறைகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச தடுப்பூசி டோஸ்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும்  ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை நனவாகியுள்ளன. 

தாம் பிரதமராவதற்கு முன்பாக பலமுறை மணிப்பூருக்கு பயணம் செய்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். மணிப்பூர் மக்களின் வலியை உணர்ந்த காரணத்தால் 2014-ஆம் ஆண்டுக்கு பின்னர் தில்லி அரசை உங்கள் வீட்டு வாயிலுக்கு கொண்டு வந்தேன்” என்று அவர் கூறினார். ஒவ்வொரு அதிகாரியும், அமைச்சரும் இந்தப் பகுதிக்குச் சென்று மக்களின் தேவைகளை அறிந்து  தொண்டாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மத்திய அமைச்சரவையில் இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஐந்து முக்கிய முகங்கள், முக்கிய இலாக்காக்களில் உள்ளதை  அவர் சுட்டிக்காட்டினார்.

அரசின் 7 ஆண்டுகால கடினமான உழைப்பு, வடகிழக்கு பிராந்தியம் முழுவதிலும் குறிப்பாக மணிப்பூரில் தென்படுகிறது என்று பிரதமர் கூறினார். மணிப்பூர் இன்று புதிய பணிக் கலாச்சாரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் மணிப்பூரின் கலாச்சாரம் மற்றும் கவனத்துக்குரியவை. இந்த மாற்றத்திற்கு  இணைப்புக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கப்பட்டதும் காரணம் என்று அவர் கூறினார். சாலை இணைப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் சாலை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக விளக்கிய பிரதமர், சிஐஐடி பகுதி இளைஞர்களின் புத்தாக்க எழுச்சிக்கும் படைப்பாற்றலுக்கும் முக்கிய பங்களிக்கும் என்று கூறினார். நவீன புற்றுநோய் மருத்துவமனை , மணிப்பூர் கலைத்திறன் நிறுவனம் ஆகியவை மக்களுக்கு பெரும் பயனளிக்கக் கூடியவை என்று அவர் தெரிவித்தார்.

தமது அரசு வடகிழக்கு பிராந்தியத்திற்காக, கிழக்கு நோக்கி’ கொள்கையை கடைப்பிடித்து வருவதாகவும், ஏராளமான இயற்கை வளங்களையும், ஆற்றலையும் இந்த பிராந்தியத்திற்கு கடவுள் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார். வளர்ச்சி மற்றும் சுற்றுலாவுக்கு இங்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை வடகிழக்கில் பயன்படுத்த இப்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தியாவின் வளர்ச்சி  நுழைவு வாயிலாக வடகிழக்கு மாறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலம் அரிய ரத்தினங்களை நாட்டுக்கு வழங்கியிருப்பதாக பிரதமர் கூறினார். இளைஞர்கள் குறிப்பாக பெண்கள், நாட்டை உலக அளவில் பெருமை அடையச் செய்திருப்பதாக அவர் கூறினார். மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களிடமிருந்து இன்று நாட்டு இளைஞர்கள் உத்வேகம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரட்டை எஞ்சின் அரசின் தொடர் முயற்சிகளால் இந்த பிராந்தியத்தில் தீவிரவாத நெருப்போ, பாதுகாப்பற்ற நிலையோ இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக கூறிய பிரதமர், அவற்றுக்கு பதிலாக அமைதி ஒளியும்,  வளர்ச்சியும் நிறைந்துள்ளதாக கூறினார். வடகிழக்கைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், ஆயுதங்களை கைவிட்டு வளர்ச்சியின்  தேசிய நீரோட்டத்தில் சேர்ந்துள்ளனர். பல பத்தாண்டுகளாக நிலுவையில் உடன்படிக்கைகள் இருந்த நிலையில், நடப்பு அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. முற்றுகை மாநிலம் என்ற நிலையிலிருந்து மணிப்பூர் இப்போது சர்வதேச வர்த்தகத்திற்கு வழிசேர்த்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டின் இந்தப் பத்தாண்டு மணிப்பூருக்கு மிக முக்கியமானதாகும் என்று அவர் கூறினார். கடந்த  காலத்தில் ஏற்பட்ட கால விரயத்தை அவர் சாடினார். “மணிப்பூரில் நாங்கள் ஸ்தரதன்மையை பராமரித்துள்ளோம்,  மேலும் அதனை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இரட்டை எஞ்சின் அரசால்தான் இந்தப் பணியை செய்ய முடிந்துள்ளது” என்று அவர் கூறினார்.

--------



(Release ID: 1787448) Visitor Counter : 223