பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் பல வகை திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார், அடிக்கல் நாட்டினார்


ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சியாகவும் இந்தப் பிராந்தியத்தின் விவசாயிகளுக்கு உதவி செய்யவும் ‘பனாஸ் பால்வளத் தொகுப்பிற்குப்‘ பிரதமர் அடிக்கல் நாட்டினார்

உத்தரப்பிரதேசத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புதாரர்களுக்கு ஊரகக் குடியிருப்பு உரிமைகள் ஆவணம் ‘ கரவ்னியைப்‘ பிரதமர் விநியோகித்தார்.

வாரணாசியில் ரூ.870 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 22 வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார் மற்றும் தொடங்கி வைத்தார்

விவசாயிகள் தினத்தில் சௌத்ரி சரண் சிங்கிற்குப் புகழாரம் சூட்டினார்

“இந்தியாவின் பால்வளத்துறையை வலுப்படுத்துவது எமது அரசின் உயர் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது”

“எருமைகளைப் பரிகாசம் செய்கின்றவர்கள் இத்தகைய கால்நடைப் பராமரிப்பு மூலம் நாட்டின் 8 கோடி குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்”

“உத்தரப்பிரதேசம் இன்று நாட்டில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக மட்டுமின்றி பால் வளத்துறை விரிவாக்கத்திலும் கணிசமான அளவு முன்னேறி உள்ளது”

“பால் வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு, வெண்மைப் புரட்சிக்கான புதிய உந்து

Posted On: 23 DEC 2021 3:11PM by PIB Chennai

வாரணாசியின் கர்க்கியானில் உள்ள உத்தரப்பிரதேச அரசின் தொழில் மேம்பாட்டு ஆணையப் பூங்காவில் ‘பனாஸ் பால்வளத் தொகுப்புக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இந்தப் பால்பண்ணை ரூ.475 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இது நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பாலினைப் பதப்படுத்தும் வசதி கொண்டது. பனாஸ் பால்பண்ணையோடு தொடர்புடைய 1.7 லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.35 கோடியையும் பிரதமர் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்தார். வாரணாசியின் ராம் நகரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தொழிற்சாலைக்கு சாண எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தித் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் உதவியுடன் இந்திய தர நிர்ணய குழுவால் உருவாக்கப்பட்ட இணையப் பக்கத்தை தொடங்கி வைத்த பிரதமர், பால் பொருட்களின் மதிப்பீட்டு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அடையாள சின்னத்தை வெளியிட்டார்.

அடித்தள நிலையில் காணப்படும் நில உரிமைப் பிரச்சனைகளைக் குறைக்கும் மற்றுமொரு முயற்சியாக உத்தரப்பிரதேசத்தின் 20 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புதாரர்களுக்கு மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் உரிமைத் திட்டத்தின் கீழ் ஊரகக் குடியிருப்பு உரிமைகள் ஆவணம் கவ்ரானியை பிரதமர் இணையவழி விநியோகித்தார்.

வாரணாசியில் ரூ.870 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 22 வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார் மற்றும் தொடங்கி வைத்தார். வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முழுமையான மாற்றத்தை இது மேலும் வலுப்படுத்தும்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படும் முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் புகழாரம் சூட்டினார்.

கால்நடைகளின் முக்கியத்துவத்தைப் பிரதமர் கோடிட்டுக் காட்டினார். “பசுக்கள் பற்றிய பேச்சு சிலருக்கு குற்றமாக இருக்கலாம். பசுக்கள் நம்மால் தாயாக மதிக்கப்படுகிறது.  எருமைகளைப் பரிகாசம் செய்கின்றவர்கள் இத்தகைய கால்நடைப் பராமரிப்பு மூலம் நாட்டின் 8 கோடி குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள் என்று அவர் கூறினார். “இந்தியாவின் பால்வளத்துறையை வலுப்படுத்துவது எமது அரசின் உயர் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக பனாஸ் காசி தொகுப்புக்கு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதுஎன்று அவர் மேலும் கூறினார். கால்நடைகளுக்கு உருவாகும் கோமாரி நோய்த் தடுப்புத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவது பற்றியும் அவர் பேசினார். 6-7 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் நாட்டின் பால் உற்பத்தி 45 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் 22 சதவீதம் இன்று இந்தியாவில் உற்பத்தியாகிறது. “உத்தரப்பிரதேசம் இன்று நாட்டில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக மட்டுமின்றி பால் வளத்துறை விரிவாக்கத்திலும் கணிசமான அளவு முன்னேறி உள்ளதுஎன்று பிரதமர் கூறினார்.

பால் வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு, வெண்மைப் புரட்சிக்கான புதிய உந்துதல் ஆகியவை விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெரிய பங்கு வகிக்கிறது என்பதில் பிரதமர் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். முதலாவதாக நாட்டில் 100 மில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையில் உள்ள சிறு விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் அளிக்கும் மாபெரும் ஆதாரமாக கால்நடைப் பராமரிப்பு உள்ளது என்று அவர் கூறினார். இரண்டாவதாக இந்தியாவில் பால் பொருட்கள் வெளிநாட்டில் மிகப் பெரிய சந்தையைப் பெற்றுள்ளது என்றும், வளர்ச்சிக்கு ஏராளமான திறனை அது கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மூன்றாவதாக பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் அவர்களின் தொழில் முனைவை ஊக்கப்படுத்தவும், கால்நடைப் பராமரிப்பு மகத்தான வழியாகும் என்று பிரதமர் கூறினார். நான்காவதாக கால்நடை என்பது சாண எரிவாயுக்கும், ஆர்கானிக் வேளாண்மைக்கும், இயற்கை வேளாண்மைக்கும் பெரும் அடிப்படையாக உள்ளது. இந்தியத் தர நிர்ணயக் குழு நாட்டிற்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறையை வழங்கி உள்ளது. காமதேனு பசுக்களை கொண்ட ஒருங்கிணைந்த அடையாள சின்னத்தை சான்றிதழுக்காக அளித்துள்ளது. இந்த அடையாள சின்னம் தூய்மையை எளிதாக அடையாளம் காண உதவும். இந்தியாவில் பால் பொருட்கள் குறித்த நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.

இயற்கை வேளாண்மை குறித்த வலியுறுத்தலை தொடர்ந்த பிரதமர், காலப்போக்கில் இயற்கை வேளாண்மை மீதான நம்பிக்கைக் குறைந்து ரசாயன வேளாண்மை ஆதிக்கம் செலுத்தியது. “பூமித்தாயை புத்தாக்கம் செய்யவும் நமது மண் வளத்தைப் பாதுகாக்கவும் வருகின்ற தலைமுறைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நாம் மீண்டும் ஒருமுறை இயற்கை வேளாண்மைக்கு திரும்பியாக வேண்டும்என்று அவர் கூறினார். இயற்கை வேளாண்மையையும், ஆர்கானிக் பயிர்களையும் ஏற்குமாறு விவசாயிகளுக்கு  பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். நமது வேளாண்மையை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு இது சிறந்த வழியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தின் 20 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புதாரர்களுக்கு மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் உரிமைத் திட்டத்தின் கீழ் ஊரகக் குடியிருப்பு உரிமைகள் ஆவணம் கவ்ரானியை பிரதமர் இணையவழி விநியோகித்தார். ஊரக ஏழைகளுக்கு வளர்ச்சி மற்றும் கௌரவத்தின் புதிய வழிகளை இது திறக்கும் என்று கூறிய அவர், வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாக அவர்களை மாற்றும் என்றார். வளர்ச்சியின் மாதிரியாக வாரணாசி விரைந்து மாற்றம் பெறுகிறது என்று அவர் கூறினார். புதிய திட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வசதியை வாரணாசி மக்களுக்குக் கொண்டு வருகின்றன என்று அவர் கூறினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் தொடர்பான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தும்.

உத்தரப்பிரதேசத்தின் அரசியலை சாதி, சமயம், மதம் என்ற முப்பட்டைக் கண்ணாடி மூலம் பார்ப்பவர்கள் இரட்டை என்ஜின், இரட்டை ஆற்றல் என்ற பேச்சால் பிரமித்துப் போயுள்ளனர் என்று பிரதமர் கூறினார். இத்தகையவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள், குடிநீர், ஏழைகளுக்கு வீட்டுவசதி, எரிவாயு இணைப்புகள், கழிப்பறைகள் ஆகியவற்றை மேம்பாட்டின் ஒரு பகுதியாக கருதவில்லையென்று அவர் குறிப்பிட்டார். “உத்தரப்பிரதேசத்தின் மக்கள் ஏற்கனவே பெற்றதற்கும் இன்று நமது அரசின் மூலம் பெறுவதற்கும் இடையேயான வேறுபாட்டை தெளிவாக அறிவார்கள். உத்தரப்பிரதேசத்தின் பாரம்பரியத்தை நாங்கள் விரிவுபடுத்துகிறோம். அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்திற்கு வளர்ச்சியையும் செய்கிறோம்என்று குறிப்பிட்டு பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

கல்வித் துறையில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில் ரூ.107 கோடி செலவில் கட்டப்பட்ட மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆசிரியர்கள் கல்வி மையம், ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட திபெத்தியர்களின் உயர்கல்விக்கான மத்திய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் பயிற்சி மையம் ஆகியவையும் அடங்கும். மேலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் குடியிருப்பு அடுக்ககங்கள், ஊழியர் குடியிருப்புகள் கரவ்ண்டி ஐடிஐ ஆகியவையும் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.

சுகாதாரத் துறையில் மகாமனா பண்டிட் மதன்மோகன் மாளவியா புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரூ.130 கோடி மதிப்பிலான மருத்துவர்கள் விடுதி, செவிலியர்கள் விடுதி, தங்கும் விடுதி ஆகியவையும் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன. பத்ராசியில் 50 படுக்கை கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை அவர் தொடங்கி வைத்தார். ஆயுஷ் இயக்கத்தின் கீழ் பிந்த்ரா வட்டத்தில் ரூ.49 கோடி மதிப்பிலான அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

சாலைத் துறையில் பிரயாக்ராஜ் மற்றும் பதோஹி சாலைகளை 4 வழி மற்றும் 6 வழி சாலைகளாக விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது வாரணாசிக்கான போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்தும். மேலும் அந்த நகரத்தின் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை நோக்கிய ஒரு செயல்பாடாகவும் இருக்கும்.

இந்தப் புனித நகரின் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாரணாசியில் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி ஆலயம், கோவர்தன் தொடர்பான முதல்கட்ட சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். வாரணாசியில் உள்ள தெற்காசிய பிராந்திய மையத்தின், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தி்ல் வேகமான பயிர் வளர்ச்சி ஆய்வமைப்பு, பயாக்பூர் கிராமத்தில் மண்டல தரங்கள் ஆய்வகம், பிந்த்ரா வட்டத்தில் வழக்கறிஞர் கட்டிடம் ஆகியவையும் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட பிற திட்டங்களாகும்.

******



(Release ID: 1784620) Visitor Counter : 191