பிரதமர் அலுவலகம்

ஐநா சபையின் 26-வது பருவநிலை மாற்ற உறுப்பினர்கள் மாநாட்டின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள திரு அலோக் சர்மா பிரதமரை சந்தித்தார்

Posted On: 16 FEB 2021 7:01PM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் சபையின் 26-வது பருவநிலை மாற்ற உறுப்பினர்கள் மாநாட்டின் (காப்26) தலைவராக பொறுப்பேற்கவுள்ள மாண்புமிகு திரு அலோக் சர்மா எம் பி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற கூட்டத்திற்கான கட்டமைப்பு குறித்து முடிவெடுக்கும் அமைப்பாக காப் விளங்குகிறது. இதன் 26-வது அமர்வை 2021 நவம்பரில் கிளாஸ்கோவில் இங்கிலாந்து நடத்துகிறது.

காப்26-க்கு முன்னதாக, பருவநிலை மாற்றம் குறித்த விஷயங்களில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கிடையேயான கூட்டு குறித்து பிரதமரும், திரு அலோக் சர்மாவும் ஆலோசித்தனர். பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்தவும், காப்26-இன் வெற்றிக்காக ஆக்கப்பூர்வமான முறையில் பணியாற்றவும் இந்தியா உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 2020 டிசம்பரில் நடைபெற்ற பருவநிலை லட்சிய மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையை திரு சர்மா அன்புடன் நினைவு கூர்ந்தார்.

இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சனுடன் இணைந்து பணியாற்றவும், இந்திய-இங்கிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் தாம் ஆவலாக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

--------



(Release ID: 1698520) Visitor Counter : 157