பிரதமர் அலுவலகம்

கோவிட்-19 தடுப்பு மருந்து அளிப்பதற்கான உத்திகள் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை


உள்நாட்டில் தயாரிக்கப்படும் மூன்று தடுப்பு மருந்துகள் உள்பட 8 தடுப்பு மருந்துகள் இந்தியாவில் பல்வேறு கட்டங்களில் பரிசோதனை நிலையில் இருக்கின்றன: பிரதமர்

அடுத்த சில வாரங்களில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: பிரதமர்

பாதுகாப்பான, குறைந்த விலையிலான தடுப்பு மருந்து தயாரிப்புக்கு உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ளன: பிரதமர்

Posted On: 04 DEC 2020 4:19PM by PIB Chennai

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்து அளிப்பதற்கான உத்திகள் குறித்து காணொலி மூலம் நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். விரிவான தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். பாதுகாப்பான, குறைந்த விலையிலான தடுப்பு மருந்தை உருவாக்க உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ளன என்று அவர் கூறினார்.

கோவிட் தடுப்பு மருந்து அளிக்க தயார் நிலையில் இந்தியா

ஆமதாபாத், புனே, ஹைதராபாத் நகரங்களில் தடுப்பு மருந்து உற்பத்தி மையங்களுக்குச் சென்று வந்த அனுபவங்களைப் பிரதமர் இந்தக் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார். இப்போது எட்டு தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்டப் பரிசோதனையில் உள்ளதாகவும், அவை இந்தியாவில் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதில் மூன்று மருந்துகள் உள்நாட்டு மருந்துகளாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்னும் சில வாரங்களில் தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார். விஞ்ஞானிகளின் ஒப்புதல் கிடைத்ததும் இந்தியாவில் தடுப்பு மருந்து அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். தடுப்பு மருந்தை முதலில் யாருக்கு அளிக்கலாம் என்பதை அடையாளம் காண்பதற்காக, மாநில அரசுகளுடன் மத்திய அரசு நெருக்கமாக ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

தடுப்பு மருந்து அளிப்பதில் இந்தியாவுக்கு அதிக அனுபவம் இருப்பதை கோடிட்டுக் காட்டிய பிரதமர்அனுபவமிக்க அலுவலர்களும், நெட்வொர்க் வசதியும் இருப்பதை சுட்டிக்காட்டினார். கோவிட் தடுப்பு மருந்து அளிப்பதில் இந்த வசதிகளும், அனுபவங்களும் நமக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். கூடுதல் குளிர்பதன வசதியையும், மருந்து சேமிப்பு தேவைகளுக்கான வசதிகளையும் உருவாக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும் என்றும் அவர் கூறினார்.

தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்திற்கு தேசிய நிபுணர் குழு அமைப்பு

தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், தொழில்நுணுக்க நிபுணர்களைக் கொண்ட தேசிய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேசிய, பிராந்திய அளவிலான தேவைகளுக்கு ஏற்ப இந்தக் குழு முடிவுகளை எடுக்கும்.

மிகுந்த உறுதியுடன் பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா நடவடிக்கைகள் எடுத்தது

இந்தியர்கள், இந்தப் பெருந்தொற்று நோய்க்கு எதிராக மிகுந்த உறுதியுடன் செயல்பட்டார்கள் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இந்தியர்கள் தற்காப்பாக இருந்தது, தைரியம், பலம் ஆகியவை வேறு எவருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கும் இருந்தது என்றும் அவர் கூறினார். இந்தியர்களைக் காப்பாற்றுவதற்கு உதவியது மட்டுமின்றி, மற்ற நாடுகளின் குடிமக்களைக் காக்கவும் நாம் முயற்சிகள் எடுத்தோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான நடைமுறையால் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்றும், அதனால் நோய் பாதிப்பு விகிதம் குறைந்தது மட்டுமின்றி, கோவிட் நோயால் ஏற்படும் மரணங்களின் விகிதமும் குறைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

தடுப்பு மருந்து குறித்து வதந்திகள் பரவும் என்று எச்சரிக்கை விடுத்த அவர், பொது மக்களுக்கும், தேச நலனுக்கும் எதிரானவையாக அவை இருக்கும் என்று கூறினார். நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இது போன்ற வதந்திகள் பரவாமல் தடுக்க அனைத்து தலைவர்களும் முன்வர வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

கோவிட் நோய்க்கு எதிரான செயல்பாடுகளில் மதிப்பு மிக்க பங்களிப்புகள் செய்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்த வைரஸ் பாதிப்புக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் யாரும் அலட்சியம் காட்டிவிடாமல், தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேச்சு

இந்திய தேசிய காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், சிவசேனா, டி.ஆர்.எஸ்., பிஎஸ்பி, எஸ்பி, அஇஅதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன. வேகமாக, சிறப்பாக தடுப்பு மருந்து அளிப்பதை உறுதி செய்வதற்கு முழு ஆதரவு அளிப்பதாக கட்சிகளின் தலைவர்கள் உறுதியளித்தனர். பெருந்தொற்று நோயை சமாளிப்பதில் பிரதமரின் செயல்பாடுகளுக்கு தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முயற்சிகள் மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகளுக்கும், தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுக்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

*******



(Release ID: 1678356) Visitor Counter : 224