சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்தை எட்டி இந்தியா புதிய மைல்கல்; பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையும் 2000ஐ தாண்டியது

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2020 11:11AM by PIB Chennai

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. தேசிய அளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதம் இன்று 90 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62,077 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில்,  50,129 பேருக்கு புதிதாக நோய்தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றினால் தற்போது 6,68,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நோயால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 8.50 சதவீதமாகும். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 70,78,123 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக குணமடைந்தவர்கள் 75 சதவீதத்தினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டில்லி, அசாம், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. தற்போது 7 லட்சத்திற்கும் குறைவாக 6,80,680 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 8.71 சதவீதமாகும்.

மத்திய அரசின் வியூகத்தின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றினால், நாள்தோறும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. குணமடைந்தோருக்கும்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றோருக்குமான இடைவெளி 64 லட்சத்தைத் தாண்டி 64,09,969 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. கடந்த 2ஆம் தேதி முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1100க்கும் குறைவாக பதிவாகி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 578 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையிலும் இந்தியா மற்றுமொரு சாதனை புரிந்துள்ளது. நாட்டில் உள்ள பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 2000 தாண்டி 2003ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 1126 அரசு பரிசோதனை மையங்களும், 877 தனியார் மையங்களும் ஆகும்.

          மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667425

------ 


(வெளியீட்டு அடையாள எண்: 1667482) வருகையாளர் எண்ணிக்கை : 234