பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து குறித்த திட்டமிடுதல் மற்றும் தயார் நிலை பற்றி ஆய்வு செய்ய பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்


இந்த தேசிய முயற்சிக்கான அடிப்படையை உருவாக்கும் நான்கு வழிகாட்டிக் கொள்கைகளை பிரதமர் பட்டியலிட்டார்.

Posted On: 30 JUN 2020 2:52PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றுக்குத் தடுப்பு மருந்து அவசியமாகத் தேவைப்படும் நிலையில், அது குறித்தத் திட்டமிடுதல் மற்றும் தயார்நிலை பற்றி ஆய்வு செய்வதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

மிகப்பெரிய, பல தரப்பட்ட மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் தடுப்பு மருந்து, மருத்துவ விநியோகச் சங்கிலி மேலாண்மை, பாதிப்புக்குள்ளானோருக்கு முன்னுரிமை, இந்த நடைமுறையில் சம்பந்தப்பட்ட பல்வேறு முகமைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த தேசிய முயற்சியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் மக்கள் சமுதாயப் பங்கேற்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த தேசிய முயற்சிக்கான அடிப்படையை, நான்கு வழிகாட்டுக் கொள்கைகள் உருவாக்கும் என்று பிரதமர் விளக்கினார்; முதலாவதாக, பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புள்ள பிரிவினர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முதலில் தடுப்பு மருந்து அளிக்கப்பட வேண்டும், உதாரணமாக, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியல்லாத முன்களப் பணியாளர்கள், மக்களில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பிரிவினர்; இரண்டாவதாக, எல்லா இடத்திலும் உள்ள அனைவருக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும், அதாவது, தடுப்பு மருந்து பெறுவதற்கு வசிப்பிடம் சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடாது; மூன்றாவதாக, தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்- யாரும் விடுபடக்கூடாது; நான்காவதாக, தடுப்பு மருந்துத் தயாரிப்புக்கான முழு நடைமுறையும் கண்காணிக்கப்படுவதுடன், தொழில்நுட்பப் பயன்பாட்டு ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் சிறந்த முறையில், உரிய காலத்திற்குள் தடுப்பு மருந்து கிடைக்கச் செய்யும் தேசிய முயற்சிக்கு உறுதுணையாக, தொழில்நுட்ப வாய்ப்புகளை விரிவான வகையில் மதிப்பீடு செய்யுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இத்தகைய பெரிய அளவில் தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான விரிவான திட்டமிடுதல் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில், தடுப்பு மருந்து உருவாக்குவதற்கான தற்போதைய நிலவரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கோவிட்-19-க்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் சுட்டிக்காட்டினார்.



(Release ID: 1635396) Visitor Counter : 222