சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத் தகவல்கள்

இந்தியாவின் முதல் மொபைல் தொற்று – பரிசோதனை நிலையத்தை (ஐ-லேப்) டாக்டர் ஹர்ஷ் வர்தன் துவக்கி வைத்தார்
குணமடையும் விகிதம் 52.96 விழுக்காடாக அதிகரிப்பு

Posted On: 18 JUN 2020 4:10PM by PIB Chennai

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொவிட்-19 தொற்றுக்கான பரிசோதனை வசதி, தொலைத் தூரப் பகுதிகளுக்கும் சென்றடைவதற்காக இந்தியாவின் முதல் மொபைல் ஐ-லேபை (தொற்று நோய்களுக்கான பரிசோதனை நிலையம்) துவக்கி வைத்துள்ளார். இந்தப் பரிசோதனை நிலையத்தை, எளிதில் செல்ல முடியாத தொலைத் தூரப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று பரிசோதனை செய்யலாம். இந்த
ஐ-லேப் நாளொன்றுக்கு 25 கொவிட்-19 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளையும், 300 எலிசா பரிசோதனைகளையும், காசநோய், எச்ஐவி-க்கான கூடுதல் பரிசோதனைகளையும், சிஜிஎச்எஸ் (மத்திய அரசின் சுகாதாரத் திட்டம்) கட்டண விகிதத்தில் செய்ய வல்லது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயிரி தொழில்நுட்பத் துறை இந்த ஐ-லேபுக்கு உதவி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 7390 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 1,94,324 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.  குணமடையும் விகிதம் 52.96 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது 1,60,384 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

அரசு பரிசோதனைச் சாலைகள் 699 ஆகவும், தனியார் பரிசோதனைச் சாலைகள் 254 ஆகவும் (மொத்தம் 953) அதிகரித்துள்ளன.

நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 540 (அரசு : 349 + தனியார் : 191), ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 340 (அரசு : 325 + தனியார் : 15),  CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 73 (அரசு  : 25 + தனியார் : 48) ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில், 1,65,412 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 62,49,668 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

••••••



(Release ID: 1632340) Visitor Counter : 180