பிரதமர் அலுவலகம்

தான்சானியா ஐக்கியக் குடியரசின் அதிபர் டாக்டர்.ஜான் போம்பே ஜோசப் மேகுஃபுலியுடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை.

Posted On: 12 JUN 2020 8:29PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திரமோடி இன்று (12 ஜுன், 2020) தான்சானியா ஐக்கியக் குடியரசின் அதிபர் டாக்டர்.ஜான் போம்பே ஜோசப் மேகுஃபுலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஜுலை, 2016-இல், தாம் தர்-ஏஸ்-சலாம் பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்த பிரதமர், தான்சானியாவுடனான நட்புறவுக்கு இந்தியா, பாரம்பரியமாக முக்கியத்துவம் அளித்து வருவதைச் சுட்டிக் காட்டினார்

தான்சானியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கு வகிப்பதென்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், தான்சானியா அரசு மற்றும் அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளுக்கேற்ப இந்தியா செயல்படும் என்றும் தெரிவித்தார்.  

கோவிட்-19 பாதிப்பு காரணமாக, தான்சானியாவில் சிக்கிக் கொண்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு, தான்சானிய அதிகாரிகள் அளித்த ஒத்துழைப்புக்காக, அதிபர் டாக்டர். மேகுஃபுலி-க்கு பிரதமர் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.  

இரு தலைவர்களும், ஒட்டு மொத்த இரு தரப்பு உறவுகள் குறித்தும் விவாதித்தனர். இந்தியா தான்சானியா இடையே, வளர்ச்சிப் பணிகளில் அதிகரித்து வரும் ஒத்துழைப்பு, கல்வி இணைப்புகள், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து மனநிறைவு தெரிவித்ததுடன், இந்த நிலையை மேலும் விரைவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்

தான்சானியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை யொட்டிஅதிபர் மேகுஃபுலி மற்றும் தான்சானிய மக்களுக்குத் தமது நல்வாழ்த்துக்களையும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.  



(Release ID: 1631350) Visitor Counter : 249