பிரதமர் அலுவலகம்

இந்திய-ஆஸ்திரேலிய மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரதமர் அவர்களின் உரை

Posted On: 04 JUN 2020 12:21PM by PIB Chennai

மேதகு பிரதமர் அவர்களே, வணக்கம்!

முதலாவதாக, கொரோனா தாக்குதலினால் ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எனது சார்பிலும் இந்தியா முழுவதன் சார்பிலும் எனது மனப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உலகத்திலுள்ள அனைத்து வகையான அமைப்புகளையுமே உலகளாவிய இந்தப் பெருந்தொற்று கடுமையாக பாதித்துள்ளது. இதுபோன்ற விளைவுகளுக்கான ஓர் உதாரணம்தான் நமது இரு நாடுகளின் உச்சி மாநாடு டிஜிட்டல் வடிவத்தில் இப்போது நடைபெறுவதாகும்.

மேதகு பிரதமர் அவர்களே, இந்த டிஜிட்டல் வடிவத்தின் மூலமாக உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்றாலும் ஓரளவிற்கு ஏமாற்றமும் அடைந்திருக்கிறேன். ஏனென்றால் உங்களை இந்திய மண்ணில் அன்போடு வரவேற்பதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. முதலில் இந்த ஆண்டு ஜனவரியிலும் பின்பு கடந்த மாதமும் நீங்கள் இந்தியாவிற்கு வருகை தருவீர்கள் என்று நாங்கள் காத்திருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உங்களின் இந்த இரண்டு பயணங்களையுமே நாங்கள் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நமது இன்றைய மெய்நிகர் சந்திப்பு நீங்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வதற்கு மாற்றாக இருக்க முடியாது. நிலைமை ஓரளவிற்கு மேம்பட்ட பிறகு உங்கள் குடும்பத்துடன் இந்தியாவிற்கு வருவதற்கான ஒரு பயணத்திட்டத்தை வகுக்குமாறு ஒரு நண்பன் என்ற வகையில் நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

மேதகு பிரதமர் அவர்களே, இந்திய-ஆஸ்திரேலிய உறவுகள் என்பது மிகவும் பரவலானவை மட்டுமின்றி ஆழமானதும் கூட. பகிர்ந்து கொள்ளப்பட்ட நமது மதிப்பீடுகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட நமது பரஸ்பர நலன்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட பூகோள அமைப்பு, பகிர்ந்து கொள்ளப்பட்ட நோக்கங்கள் ஆகியவற்றிலிருந்தே நமது உறவுகளின் இந்த ஆழம் வெளிப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நமது ஒத்துழைப்பும் குவியாற்றலும் வேகமெடுத்துள்ளன. நமது உறவுக்கான கடிவாளத்தின் ஒரு பகுதி உங்களைப் போன்ற வலுவான, தொலைநோக்கு மிக்க ஒரு தலைவரின் கைகளில் உள்ளது. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த இதுவே மிகவும் பொருத்தமான நேரம், பொருத்தமான வாய்ப்பு என்று தான் நான் நம்புகிறேன்.
 

நமது நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் நம்மிடம் ஏராளமாக உள்ளன. இந்த வாய்ப்புகள் அவற்றோடு சவால்களையும் அழைத்துக் கொண்டு வருகின்றன. இந்த உள்ளார்ந்த ஆற்றலை நடைமுறைக்குரியதாக எப்படி மாற்றுவது என்பதில்தான் சவால்கள் உள்ளன. அதன் மூலம்தான் நம் இருநாடுகளின் மக்கள், வர்த்தகங்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் போன்ற பல தரப்பினரிடையே நிலவிவரும் உறவுகள் மேலும் வலுப்படும். நமது பகுதியின், நமது உலகத்தின் நிலைத்தன்மைக்கு நமது உறவுகள் எப்படி ஓர் அம்சமாக இருக்க முடியும்? உலகத்தின் நன்மைக்காக நாம் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும்? என்பது போன்ற இந்த அம்சங்கள் அனைத்துமே நமது கவனத்திற்குரியவை ஆகும்.

மேதகு பிரதமர் அவர்களே, இன்றைய உலகில் நாடுகள் ஒவ்வொன்றும் மற்றவற்றிடமிருந்தும், நமது நாட்டின் குடிமக்கள் நம்மிடமிருந்தும் கோரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஜனநாயகப்பூர்வமான மதிப்பீடுகளை நம்மிடையே நாம் பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த எதிர்பார்ப்புகளுக்கு உரியவர்களாக இருக்கவேண்டிய கடமை நம் இருவருக்குமே இருக்கிறது. எனவே, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம், பரஸ்பர மரியாதை, சர்வதேச நிறுவனங்களின் மீதான மரியாதை, வெளிப்படைத்தன்மை போன்ற உலகளாவிய நலன்களுக்கான மதிப்பீடுகளை உயர்த்திப்பிடிக்கவும், அவற்றை பாதுகாக்கவும் வேண்டிய புனிதமான பொறுப்பு நமக்குள்ளது. ஒரு வகையில் பார்த்தால் அது நமது எதிர்காலத்திற்கான நமது பாரம்பரியமும் ஆகும். இந்த மதிப்பீடுகள் பல்வேறு வழிகளில் இன்று சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதன் மூலமே அவற்றை நம்மால் வலுப்படுத்த முடியும்.

மேதகு பிரதமர் அவர்களே, ஆஸ்திரேலியாவுடனான தனது உறவுகளை முழுமையான வகையிலும் துரிதமாகவும் விரிவுபடுத்திக் கொள்வதில் இந்தியா மிகவும் உறுதிப்பாட்டோடு இருக்கிறது. நம் இருநாடுகளுக்கு மட்டுமே இது முக்கியமானது மட்டுமல்ல; இந்திய - பசிஃபிக் பிரதேசம் மற்றும் உலகத்திற்கும் கூட இது முக்கியமானதாகும். நம் இருநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் நிறுவன ரீதியான பேச்சுவார்த்தைகள் நமது உறவுகளுக்கு மேலும் உரமூட்டுவதாக விளங்குகின்றன என்பது குறித்தும் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அதைப் போன்றே நம் இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம்  மற்றும் முதலீடுகளும் கூட அதிகரித்து வருகின்றன. எனினும் இந்த அதிகரிப்பு மற்றும் அதன் வேகம் குறித்து நான் திருப்தி அடைந்துள்ளதாக என்னால் கூற முடியாது. எமது நட்பு நாட்டை உங்களைப் போன்ற ஒரு தலைவர் தலைமையேற்று நடத்தும் போது நமது உறவுகளின் வளர்ச்சியின் வேகத்திற்கான அடிப்படையும் கூட மிகுந்த விருப்பத்திற்குரியதாக இருக்க வேண்டும். நம் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை முழுமையான கேந்திர ரீதியான கூட்டணி அளவிற்கு இன்று நாம் மேம்படுத்துவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

நமது முழுமையான கேந்திர ரீதியான கூட்டணியின் பங்கு என்பது உலகளாவியப் பெருந்தொற்றுத் தாக்குதல் நிகழ்ந்து வரும் இக்காலப்பகுதியில் மேலும் முக்கியமானதாக அமைகிறது. இந்தப் பெருந்தொற்றின் பொருளாதார ரீதியான, சமூகரீதியான பின்விளைவுகளில் இருந்து வெளியேறுவதற்கு ஒருங்கிணைப்பு மிக்க, ஒத்துழைப்பு மிக்க அணுகுமுறைதான் இன்று உலகிற்குத் தேவைப்படுகிறது.

இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாகவே காண்பது என எமது அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் முழுமையான அளவில் சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அடிமட்ட அளவில் இதன் பலன்களை மிக விரைவிலேயே காணவும் முடியும். இந்தச் சிக்கலானதொரு தருணத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது, குறிப்பாக இந்திய மாணவர்கள் மீது உரிய கவனம் செலுத்திப் பாதுகாத்தமைக்காக எனது நன்றியறிதலையும் இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.


 

***



(Release ID: 1630485) Visitor Counter : 220