ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

325000க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் மருந்தகங்களை கண்டுபிடித்துச் செல்வதற்கு ”ஜன்ஔஷதி சுகம்” என்ற மொபைல் செயலியை பயன்படுத்துகின்றனர்

Posted On: 30 APR 2020 11:52AM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய பொது முடக்கத்தின் போது மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பிரதம மந்திரி மக்கள் மருந்தகங்களைக்  கண்டறியவும் குறைவான செலவில் பொதுப்பெயர் மருந்துப் பொருட்களை விலையுடன் தெரிந்து கொள்ளவும் ”ஜன்ஔஷதி சுகம்” என்ற மொபைல் செயலி மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. 

325000 க்கும் மேற்பட்ட மக்கள் “ஜன்ஔஷதி சுகம்” செயலியைப் பயன்படுத்தி அதன் மூலம் பலன்கள் பெற்று வருகின்றனர்.  நுகர்வோர்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் பிரதம மந்திரி பாரதிய மக்கள் மருந்தக பரியோஜனா திட்டத்துக்காக இந்த மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.  இந்தச் செயலியை இந்திய அரசின் வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்து பொருட்கள் துறையின் கீழ் செயல்படுகின்ற இந்திய மருந்துப் பொருள் உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்களின் வாரியம் உருவாக்கி உள்ளது.  பொதுமக்களுக்கு அவர்களது விரல் நுனியில் டிஜிட்டல் சேவைகளை வழங்க இது உதவுகிறது.  பயனாளர் தங்களுக்கு அருகில் உள்ள மக்கள் மருந்தகத்தை கண்டுபிடித்தல் அந்த மக்கள் மருந்தகத்தை கூகுள் மேப் மூலமாக சென்றடைதல், மக்கள் மருந்தகத்தில் கிடைக்கக் கூடிய பொதுப்பெயர் மருந்துகளை தேடியறிதல், பொதுப்பெயர் மருந்து மற்றும் பிராண்ட் பெயர் மருந்துகளுக்கு இடையிலான சில்லறை விலை வித்தியாசம், சேமிப்பாகும் மொத்த பணம் முதலானவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் இந்தச் செயலி உள்ளது.

ஜன்ஔஷதி சுகம் மொபைல் செயலியானது ஆன்ராய்ட் மற்றும் ஐ போன்களில்  கிடைக்கிறது.  பயனாளர் இதனை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசு சுகாதார பராமரிப்பு அமைப்பின் அடிப்படையையே புரட்சிகரமாக மாற்றி வருகிறது.  நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைந்த செலவில் 900க்கும் அதிகமான தரம் வாய்ந்த பொதுப்பெயர் மருந்துகளையும் 154 அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் நுகர்பொருட்களையும் வழங்குகின்ற பிஎம்பிஜேபீ போன்ற குறிப்பிடத்தக்க திட்டங்கள் வாயிலாக அரசு இதனைச் செய்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 726 மாவட்டங்களில் 6300க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.  இந்த பொது முடக்கக் காலகட்டத்தில் பிஎம்பிஜேபீ தனது தகவல் பதிவுகளின் மூலமாக சமூக ஊடகங்களில் கொரோனா வைரசில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் தெரிவித்து உதவி வருகிறது.



(Release ID: 1619689) Visitor Counter : 138