மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் திறன்மிகு கல்வியை வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லும் தனித்துவ முறைக்கு முன்முயற்சி மேற்கொண்டுள்ளது

Posted On: 14 APR 2020 3:06PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சவாலான நிலையில் கல்வி பயில்பவர்கள் பாதிக்காமல் இருக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு புதிய மற்றும் தனித்துவமான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் கீழ்,      தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்) கல்வியை அணுக முடியாதவர்களின் வீட்டு வாசலில் அதனைக் கொண்டு சேர்க்கும் தனித்துவமான முறையை கையாண்டுள்ளது. தரமான கல்வி என்னும் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ' சுவயம்’ மூக் என்னும் தளத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பல்வேறு பாடங்கள்  கிடைக்கப்பெறுகின்றன. சுயமாகக் கற்கும் பாடங்களுடன், சுவயம் வலைதளம், காணொலி உரைகள், சுயமதிப்பீட்டு வசதி ஆகியவற்றை வழங்குகிறது. விவாத மேடை வழியாக கற்கும் மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடைகள், விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

இத்துடன், இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்காக, இந்தக் காணொலி உரைகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சுவயம் பிரபா தொலைக்காட்சி சேனல்களில் ,ஆசிரியர்கள் மற்றும் பாடங்களின் நிபுணர்களுடன் கலந்துரையாடும் நேரலை நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.



(Release ID: 1614465) Visitor Counter : 248