பிரதமர் அலுவலகம்
இம்பால், மணிப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2025 6:26PM by PIB Chennai
பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
மணிப்பூர் மாநில ஆளுநர் திரு. அஜய் பல்லா அவர்களே, மாநில நிர்வாகத்தின் மற்ற அதிகாரிகளே மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று மணிப்பூரின் வளர்ச்சிக்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், இங்குள்ள உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, மணிப்பூர் மண்ணின் மைந்தர்களாகிய இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே,
இன்று தொடங்கப்பட்ட பணிகளில் இரண்டு திட்டங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ரூ.3,600 கோடிக்கும் அதிகச் செலவில் மேற்கொள்ளப்படும் 'மணிப்பூர் நகர்ப்புற சாலைத் திட்டம்', மற்றொன்று ரூ.500 கோடிக்கும் அதிக மதிப்பிலான 'மணிப்பூர் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம்'. இத்திட்டங்கள் இம்பால் நகரின் சாலை உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, மணிப்பூரின் ஒளிமயமான எதிர்காலத்திற்குப் புதிய ஆற்றலை வழங்கும். இந்த வளர்ச்சி முன்னெடுப்புகளுக்காக மணிப்பூர் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
விடுதலைக்குப் பிறகு, நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டன. அங்கு பல கனவுகள் நனவாகின, இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது, இந்த 21-ம் நூற்றாண்டு கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளுக்குச் சொந்தமானது. அதனால்தான் இந்திய அரசு மணிப்பூரின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.
இதன் விளைவாக, மணிப்பூரின் வளர்ச்சி விகிதம் சீராக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பாக, மணிப்பூரின் வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று மணிப்பூர் முன்னெப்போதையும் விடப் பல மடங்கு வேகத்தில் முன்னேறி வருகிறது. மணிப்பூரில் உட்கட்டமைப்பு கட்டுமானத்தின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைக் கட்டுமானப் பணிகள் இங்குப் பன்மடங்கு அதிகரித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலம் முழுவதிலும் உள்ள கிராமங்களைச் சாலைகளால் இணைப்பதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே,
இம்பால் நகரம் எண்ணற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்த ஒரு நகரமாகும். நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி, தேசத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் 'வளர்ச்சியடைந்த இந்தியாவின்' முக்கிய நகரங்களில் ஒன்றாக இம்பாலை நான் பார்க்கிறேன். இந்த தொலைநோக்குப் பார்வையுடன், பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் இங்குப் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே,
இம்பால் மட்டுமின்றி மணிப்பூரின் பிற பகுதிகளிலும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைகளுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இங்குள்ள 'தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலம்' இந்தச் சாத்தியக்கூறுகளை மேலும் வலுப்படுத்தும். இந்த மண்டலத்தின் முதல் கட்டிடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் புதிய சிவில் செயலகக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இப்போது அந்தக் கட்டிடமும் தயாராகிவிட்டது. இது 'நாக்ரிக் தேவோ பவ' (நாகரிகமே தெய்வம், குடிமக்களே கடவுள்) என்ற உயரிய உணர்வை மேலும் வலுப்படுத்தும்.
நண்பர்களே,
மணிப்பூரைச் சேர்ந்த நமது மக்கள் அடிக்கடி கொல்கத்தா மற்றும் டெல்லிக்குச் சென்று வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு மலிவு விலையில் தங்குமிடங்களை உறுதி செய்யும் வகையில், இரு நகரங்களிலும் 'மணிப்பூர் பவன்கள்' கட்டப்பட்டுள்ளன. இந்த பவன்கள் குறிப்பாக மணிப்பூரின் மகள்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். குழந்தைகள் அங்குப் பாதுகாப்பாக இருக்கும்போது, இங்குள்ள பெற்றோர்களின் கவலையும் குறையும்.
நண்பர்களே,
உங்கள் வாழ்க்கையில் உள்ள இன்னல்களைக் குறைக்க எமது அரசு முழு உணர்வுடன் பாடுபட்டு வருகிறது. மணிப்பூரின் பல பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கின்றன என்பதை நான் அறிவேன். இந்தச் சவாலை எதிர்கொள்ளவும் அரசு எண்ணற்ற திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நண்பர்களே,
மணிப்பூர் மாநிலமானது, தாய்மார்களும் சகோதரிகளும் பொருளாதாரத்தின் முன்னணியில் இருக்கும் ஒரு மாநிலமாகும். இதற்கு 'இமா கெய்தல்' (Ima Keithel) பாரம்பரியமே மிகச்சிறந்த சாட்சியமாகும். பெண்களின் சக்தியே நாட்டின் வளர்ச்சிக்கும், 'ஆத்மநிர்பார் பாரத்' (சுயசார்பு இந்தியா) இலக்குக்கும் அச்சாணி என்று நான் கருதுகிறேன். அந்த உத்வேகத்தை நாம் இங்கேயே மணிப்பூரில் காண்கிறோம். எங்களது அரசு அமைந்த பிறகு, பெண்களுக்காகப் பிரத்யேகச் சந்தைகளான 'இமா சந்தை'களைக் கட்டத் தொடங்கினோம். இன்று நான்கு இமா சந்தைகள் தொடங்கி வைக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இச்சந்தைகள் மணிப்பூர் சகோதரிகளுக்குப் பெரும் பயனை அளிக்கும்.
நண்பர்களே,
ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்குவதே எங்களது நோக்கம். மணிப்பூருக்குப் பொருட்களைக் கொண்டு வருவதே மிகவும் கடினமாக இருந்த நாட்களை இந்த மாநிலம் கண்டுள்ளது. அன்றாடப் பொருட்கள் சாதாரணக் குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக இருந்தன. கடந்த சில ஆண்டுகளில், எங்களது அரசு மணிப்பூரை அந்தப் பழைய சிக்கல்களிலிருந்து விடுவித்துள்ளது. உங்களுக்கு இன்னொரு நற்செய்தியையும் நான் கொண்டு வந்துள்ளேன். உங்கள் சேமிப்பை அதிகரிக்கவும், உங்கள் வாழ்க்கையை இன்னும் எளிதாக்கவும் எங்களது அரசு விரும்புகிறது. அதனால்தான், தற்போது ஜிஎஸ்டி கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மணிப்பூர் மக்களுக்கு இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கும். சோப்பு, ஷாம்பு, தலைமுடி எண்ணெய், ஆடைகள், காலணிகள் போன்ற அன்றாடத் தேவைகளுக்கானப் பொருட்களின் விலை குறையும். சிமெண்ட் மற்றும் வீடு கட்டப் பயன்படும் பொருட்களின் விலையும் வீழ்ச்சியடையும். மேலும், உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கான ஜிஎஸ்டி வரியையும் அரசு பெருமளவு குறைத்துள்ளது. இது தங்கும் விடுதி உரிமையாளர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், தாபா உரிமையாளர்கள் ஆகியோருக்குப் பயனளிப்பதுடன், இங்குள்ள சுற்றுலாவையும் மேம்படுத்த உதவும்.
நண்பர்களே,
மணிப்பூர் ஆயிரக்கணக்கான ஆண்டுகாலப் பழமையான பாரம்பரியத்தைக் கொண்டது. அதன் கலாச்சார வேர்கள் மிகவும் வலுவானவை மற்றும் ஆழமானவை. பாரத அன்னையின் மகுடத்தை அலங்கரிக்கும் விலைமதிப்பற்ற ரத்தினம் மணிப்பூர். எனவே, மணிப்பூரின் வளர்ச்சிப் பிம்பத்தை நாம் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். மணிப்பூரில் நிகழும் எந்தவொரு வன்முறையும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய வன்முறைகள் நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையினருக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். எனவே, நாம் அனைவரும் இணைந்து அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் மணிப்பூரை முன்னோக்கி வழிநடத்த வேண்டும்.
பாரதத்தின் விடுதலைப் போராட்டத்திலும், தேசப் பாதுகாப்பிலும் மணிப்பூர் அளித்த பங்களிப்பிலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். மணிப்பூர் மண்ணில்தான் இந்தியத் தேசிய ராணுவம் முதன்முதலில் பாரதத்தின் கொடியை ஏற்றியது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் மணிப்பூரை' இந்திய சுதந்திரத்தின் நுழைவாயில்' என்று வர்ணித்தார். இந்த மண் வீரத் திருமகன்களின் எண்ணற்ற தியாகங்களைச் சந்தித்துள்ளது. மணிப்பூரின் இத்தகைய மாபெரும் ஆளுமைகளிடமிருந்து உத்வேகம் பெற்று எங்களது அரசு முன்னேறி வருகிறது.
மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள 'மவுண்ட் ஹாரியட்' என்ற சிகரத்திற்கு, 'மவுண்ட் மணிப்பூர்' என எமது அரசு மறுபெயரிட்டுள்ளது. இது மணிப்பூர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 140 கோடி இந்தியர்கள் செலுத்தும் வீரவணக்கமாகும்.
இன்றும், மணிப்பூரின் எண்ணற்ற வீரத் திருமகன்களும் திருமகள்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாரத அன்னையைப் பாதுகாத்து வருகின்றனர். 'ஆபரேஷன் சிந்தூரின்' மூலம் பாரத ராணுவத்தின் வீரத்தை உலகமே கண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நிலைகுலைந்து போகும் வகையில் நமது வீரர்கள் அத்தகைய ஆற்றலை வெளிப்படுத்தினார்கள். பாரதத்தின் இந்த வெற்றியில், மணிப்பூரைச் சேர்ந்த பல வீர மைந்தர்களின் துணிச்சலும் சமமாகப் பங்களித்துள்ளது. இன்று, அத்தகைய ஒரு வீரத் தியாகியான தீபக் சிங்ககம் அவர்களின் வீரத்திற்கு நான் தலைவணங்குகிறேன். 'ஆபரேஷன் சிந்தூரின் போது அவர் செய்த மிக உயரிய தியாகத்தை இந்த தேசம் எப்போதும் நினைவில் கொள்ளும்.
நண்பர்களே,
கடந்த 2014-ஆம் ஆண்டு நான் இங்கு வந்தபோது ஒன்றைச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. "மணிப்பூர் கலாச்சாரம் இல்லாமல் இந்தியக் கலாச்சாரம் முழுமையடையாது; மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் இல்லாமல் இந்திய விளையாட்டுகளும் முழுமையடையாது" என்று நான் கூறியிருந்தேன். மூவர்ணக் கொடியின் பெருமைக்காகத் தங்களது அனைத்தையும் அர்ப்பணிப்பவர்களே மணிப்பூர் இளைஞர்கள். வன்முறையின் நிழலில் இந்த அடையாளம் நசுக்கப்பட நாம் அனுமதிக்கக் கூடாது.
நண்பர்களே,
விளையாட்டுத் துறையில் பாரதம் இன்று உலகளாவிய சக்தியாக உருவெடுத்து வரும் வேளையில், மணிப்பூர் இளைஞர்களின் பொறுப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. அதனால்தான், நாட்டின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை அமைக்க இந்திய அரசு மணிப்பூரைத் தேர்வு செய்தது. 'கேலோ இந்தியா' மற்றும் ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு திட்டத்தின் மூலம் மணிப்பூரைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் இன்று ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மணிப்பூர் இளைஞர்களுக்காக நவீன விளையாட்டு உட்கட்டமைப்புகளும் இங்கு உருவாக்கப்பட்டு வருகின்றன. போலோ விளையாட்டை ஊக்குவிக்க, உலகின் மிக உயரமான போலோ சிலையுடன் கூடிய 'மார்ஜிங் போலோ வளாகம்' இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணின் ஒலிம்பிக் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் 'ஒலிம்பியன் பூங்கா' ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் அரசு 'கேலோ பாரத் நீதி' என்ற தேசிய விளையாட்டுக் கொள்கையை அறிவித்தது. வரும் ஆண்டுகளில் மணிப்பூர் இளைஞர்கள் இதன் மூலம் பெரும் பயன் அடைவார்கள்.
நண்பர்களே,
மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், முகாம்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் எமது அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்காக 7,000 புதிய வீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், மத்திய அரசு மணிப்பூருக்காக சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்பை அறிவித்துள்ளது. இதில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ ரூ.500 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதி செய்வதே எங்களது முதன்மையான முன்னுரிமையாகும். புதிதாகக் கட்டப்பட்டுள்ள மணிப்பூர் காவல்துறையின் தலைமையகமும் இந்த விஷயத்தில் உங்களுக்குப் பெரிதும் உதவும்.
நண்பர்களே,
மணிப்பூரின் இந்தப் புனித மண்ணிலிருந்து, இன்று நேபாளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளிடமும் சில வார்த்தைகளைப் பேச விரும்புகிறேன். இமயமலையின் மடியில் வீற்றிருக்கும் நேபாளம், பாரதத்தின் உற்ற நண்பன் மற்றும் நெருங்கிய தோழன். நாம் பகிரப்பட்ட வரலாறு மற்றும் நம்பிக்கையால் பிணைக்கப்பட்டுள்ளோம்; நாம் இணைந்து முன்னேறிச் செல்கிறோம். நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி. சுஷிலா அவர்களுக்கு, 140 கோடி இந்தியர்களின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பிற்கான வழியை அவர் அமைப்பார் என்று நான் நம்புகிறேன். நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக அவர் பொறுப்பேற்பது பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்று, அரசியல் ஸ்திரமற்ற சூழலிலும் ஜனநாயக விழுமியங்களுக்கு மேலான இடமளித்த நேபாளத்தின் ஒவ்வொரு குடிமகனையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.
நண்பர்களே,
நேபாளத்தின் சமீபத்திய நிகழ்வுகளில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் உள்ளது, அது பலரது கவனத்தை ஈர்க்கவில்லை. கடந்த இரண்டு மூன்று நாட்களாக, நேபாளத்தின் இளைஞர்களும் இளம்பெண்களும் தூய்மை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அந்நாட்டு வீதிகளைச் சுத்தம் செய்தும், வண்ணம் தீட்டியும் கடினமாக உழைப்பதைக் காண முடிகிறது. சமூக ஊடகங்களில் நானும் அவர்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். அவர்களின் நேர்மறையான சிந்தனையும், நேர்மறையான செயல்களும் ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல், நேபாளத்தின் புதிய விடியலுக்கான தெளிவான அறிகுறியுமாகும். நேபாளத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த 21-ம் நூற்றாண்டில், நமது நாடு 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற ஒற்றை இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த இலக்கை அடைய மணிப்பூரின் வளர்ச்சியும் சம அளவில் அவசியமானது. நமது மணிப்பூர் எல்லையற்ற ஆற்றல் கொண்டது. வளர்ச்சியின் பாதையிலிருந்து ஒரு அடியைக் கூட நாம் பின்வைக்காமல் இருப்பது நமது கடமையாகும். மணிப்பூரிடம் எந்தத் திறமைக்கும் குறைவில்லை; நமக்குத் தேவையானது என்னவென்றால், நாம் பேச்சுவார்த்தைக்கானப் பாதையைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும், மலைப்பகுதிகளுக்கும் சமவெளிப் பகுதிகளுக்கும் இடையே நல்லிணக்கத்தின் வலுவான பாலத்தை உருவாக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சியில் மணிப்பூர் ஒரு வலுவான மையமாக உருவெடுக்கும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது, என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்:
பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
மிக்க நன்றி.
*
(Release ID: 2166321)
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2250506)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam