பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2025 6:11PM by PIB Chennai
"மா திரிபுர சுந்தரிக்கு ஜே! பேணேஷ்வர் தாமுக்கு ஜே! மாண்கர் தாமுக்கு ஜே! உங்கள் அனைவருக்கும் ஜே குரு! ராம்-ராம்!"
மாண்புமிகு ஆளுநர் ஸ்ரீ ஹரிபாவு பாகடே அவர்களே, முதலமைச்சர் ஸ்ரீ பஜன்லால் சர்மா அவர்களே, முன்னாள் முதலமைச்சர் சகோதரி வசுந்தரா ராஜே அவர்களே, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் எனது சகாக்களான பிரல்ஹாத் ஜோஷி அவர்களே, கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே மற்றும் ஜோத்பூரில் இருந்து இணைந்திருக்கும் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, பிகானேரில் இருந்து இணைந்திருக்கும் ஸ்ரீ அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, துணை முதலமைச்சர்கள் பிரேம் சந்த் பைர்வா அவர்களே மற்றும் தியா குமாரி அவர்களே, இராஜஸ்தான் பிஜேபி மாநிலத் தலைவர் ஸ்ரீ மதன் ரத்தோர் அவர்களே, இராஜஸ்தான் அரசின் அமைச்சர்களே, இங்கு கூடியிருக்கும் மற்ற முக்கிய பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே,
நவராத்திரியின் இந்த நான்காம் நாளில், மா திரிபுர சுந்தரியின் புண்ணிய பூமியான பான்ஸ்வாராவுக்கு வரும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. காந்தல் மற்றும் வாகட் பகுதிகளின் கங்கை என்று கருதப்படும் மா மஹியின் தரிசனத்தையும் நான் பெற்றேன். மாஹி ஆற்றின் நீர், நமது பழங்குடியின சகோதர சகோதரிகளின் போராட்டத்தையும், மீண்டெழும் சக்தியையும் குறிக்கிறது. மாபெரும் வீரரான கோவிந்த் குருஜியின் ஊக்கமளிக்கும் தலைமை ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது; அந்த மாபெரும் காவியத்திற்கு இந்த மாஹி ஆற்றின் புனித நீர் சாட்சியாக நிற்கிறது. மா திரிபுர சுந்தரிக்கும் மா மஹிக்கும் என் மரியாதைக்குரிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
பக்திக்கும் வீரத்திற்கும் சொந்தமான இந்த பூமியில் இருந்து, மகாராணா பிரதாப் மற்றும் ராஜா பன்சியா பீல் ஆகியோருக்கு மரியாதையுடன் கூடிய அஞ்சலியைச் செலுத்தி வணங்குகிறேன்.
நண்பர்களே,
நவராத்திரி காலத்தில், நாம் சக்தியின் ஒன்பது வடிவங்களை வணங்குகிறோம். அதே சக்தியுடன் தொடர்புடைய, அதாவது மின்சார உற்பத்தியுடன் தொடர்புடைய இவ்வளவு பிரம்மாண்டமான நிகழ்வு இன்று இங்கு நடைபெறுகிறது. மின் துறைக்கான பாரதத்தின் ஆற்றலில் ஒரு புதிய அத்தியாயம் இன்று ராஜஸ்தானின் மண்ணில் இருந்து எழுதப்படுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இன்று 90,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மின் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 90,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைப்பது, நாடு விரைவாக முன்னேறிச் செல்கிறது என்பதையும், நாட்டின் ஒவ்வொரு பகுதியும் இந்த முன்னேற்றத்தில் பங்கேற்கிறது என்பதையும் காட்டுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இங்கும், ராஜஸ்தானில் தூய்மையான எரிசக்தி திட்டங்கள் மற்றும் மின்பகிர்வு தடங்களுக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டுள்ளன. பான்ஸ்வாராவில் ராஜஸ்தான் அணுமின் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி திட்டமும் இங்கே தொடங்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், சூரிய சக்தியில் இருந்து அணுசக்தி வரை, நாட்டின் மின் உற்பத்தி திறன் புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நண்பர்களே,
இன்று, தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையின் சகாப்தத்தில், வளர்ச்சிப் பயணம் மின்சாரத்தால் மட்டுமே நகர்கிறது. மின்சாரம் இருந்தால் ஒளி! மின்சாரம் இருந்தால் வேகம்! மின்சாரம் இருந்தால் முன்னேற்றம்! மின்சாரம் இருந்தால் தூரம் குறைகிறது! மேலும், மின்சாரம் இருந்தால் உலகம் நமது கைக்குள்ளேயே வந்துவிடுகிறது.
ஆனால், என் சகோதர சகோதரிகளே,
நமது நாட்டில் இருந்த காங்கிரஸ் மின்சாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை. 2014-ல் நீங்கள் எனக்குச் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கி நான் பொறுப்பேற்றபோது, நாட்டில் 2.5 கோடி வீடுகளில் மின் இணைப்பு இல்லாமலிருந்தது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்த பின்னரும், நாட்டில் 18,000 கிராமங்களில் ஒரு மின் கம்பம் கூட இல்லை. பெரிய நகரங்களிலேயே மணிக்கணக்கில் மின்வெட்டு இருந்தது. கிராமங்களில், 4 முதல் 5 மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.
அந்தக் காலத்தில் மக்கள் கேலி பேசுவார்கள் – மின்சாரம் போனது செய்தி அல்ல; மின்சாரம் வந்ததுதான் செய்தி! ஒரு மணி நேரம் மின்சாரம் இருந்தாலும் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். நிலைமை அப்படித்தான் இருந்தது. மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் இயங்க முடியவில்லை, புதிய தொழில்களும் தொடங்க முடியவில்லை. இராஜஸ்தான் மற்றும் நாடு முழுவதும் இதுதான் நிலைமை.
சகோதர சகோதரிகளே,
2014-ல், எங்களுடைய இந்த நிலைமைகளை மாற்ற ஒரு உறுதியை எடுத்தது. நாங்கள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரத்தைக் கொண்டு சென்றோம். 2.5 கோடி வீடுகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கினோம். எங்கு கம்பி சென்றடைந்ததோ, அங்கு மின்சாரமும் சென்றடைந்தது. அதனால் வாழ்க்கை எளிதானது, புதிய தொழில்கள் உருவாகின.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டில், வேகமாக வளர விரும்பும் எந்த நாடும் அதன் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதிலும், தூய்மையான எரிசக்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகள்தான் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அதனால்தான், எங்கள் தூய்மையான எரிசக்தி இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது.
நாங்கள் வீடுகளின் கூரைகளில் சூரிய மின்தகடுகளை நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய பிரதமரின் சூரியசக்தி இலவச மின்சார வீடு திட்டத்தை (PM Surya Ghar: Muft Bijli Yojana) தொடங்கினோம். இந்தத் திட்டத்தின் கீழ், நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரண்டிலும் கூரைகளில் சூரிய சக்தி தகடுகள் நிறுவப்பட்டு வருகின்றன. நமது விவசாயிகளுக்கு மலிவான விலையில் மின்சாரத்தை வழங்குவதற்காக, விவசாயிகளின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பிரதமரின் (PM-KUSUM Yojana) திட்டத்தின் கீழ் வயல்களில் சூரிய சக்தி பம்புகள் நிறுவப்படுகின்றன.
இன்று, இந்தத் திசையில் பல மாநிலங்களில் சூரிய சக்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும். அதாவது, வீட்டில் இலவச மின்சாரத்திற்கு 'பிரதமரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய இல்லத் திட்டம், மற்றும் வயல்களுக்கு இலவச மின்சாரத்திற்கு விவசாயிகளின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பிரதமரின் திட்டம்'. சிறிது நேரத்திற்கு முன்பு கூட, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள இந்த திட்ட பயனாளிகளான விவசாயிகளுடன் நான் பேசினேன். அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தன. சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் இலவச மின்சாரம் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.
இன்று இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற வேகமாக செயல்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தானுக்கும் ஒரு பெரிய பங்கு உள்ளது. இன்று, ராஜஸ்தான் மக்களுக்காக 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களும் இங்கே தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. நீர், மின்சாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான இந்தத் திட்டங்கள் உங்கள் அனைவருக்கும் வசதிகளை அதிகரிக்கும். நான் வந்தே பாரத் ரயில் உட்பட மூன்று புதிய ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன்.
இந்த நேரத்தில், நாடு முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு பெரிய இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இன்று ராஜஸ்தானைச் சேர்ந்த 15,000 இளைஞர்கள் அரசு வேலைகளுக்கான பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் அனைவருக்கும் அவர்களது வாழ்க்கையின் இந்தப் புதிய பயணத்திற்காக எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக ராஜஸ்தான் மக்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று ராஜஸ்தானின் பிஜேபி அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக முழு நேர்மையுடன் செயல்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜஸ்தானைக் கொள்ளையடித்து காங்கிரஸ் ஏற்படுத்திய காயங்களை எங்கள் அரசு ஆற்றி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் ராஜஸ்தான் தேர்வுகளுக்கான கேள்வித்தாள் கசியும் மையமாக மாறியது. 'ஜல் ஜீவன் இயக்கம்' கூட ஊழலுக்கு பலியாக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உச்சத்தில் இருந்தன, மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பான்ஸ்வாரா, துங்கர்பூர் மற்றும் பிரதாப்கர் போன்ற பகுதிகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது குற்றங்களும், சட்டவிரோத மது வர்த்தகமும் அதிகரித்தன.
ஆனால் நீங்கள் இங்கு பிஜேபி-வுக்கு வாய்ப்பளித்தபோது, நாங்கள் சட்டம் ஒழுங்கை பலப்படுத்தினோம், திட்டங்களை விரைவுபடுத்தினோம், மேலும் பெரிய திட்டங்களைத் தொடங்கினோம். இன்று, இராஜஸ்தான் முழுவதும் நெடுஞ்சாலைகளும் விரைவுச் சாலைகளும் அமைக்கப்படுகின்றன. இன்று, பிஜேபி அரசு ராஜஸ்தானை, குறிப்பாக தெற்கு ராஜஸ்தானை, விரைவான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறது.
தற்போது பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாள். அவர் நமக்கு அந்த்யோதயா என்ற கொள்கையை வழங்கினார். அந்த்யோதயா என்றால், சமூகத்தின் கடைசிப் படியில் நிற்கும் மனிதனின் முன்னேற்றம் என்பதாகும். அவருடைய அந்த தொலைநோக்குப் பார்வைதான் இன்று நமது இலக்காக மாறியுள்ளது. ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் நலனுக்காக சேவை மனப்பான்மையுடன் நாங்கள் உழைத்து வருகிறோம். 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' (Sabka Saath, Sabka Vikas) என்ற மந்திரத்தின் வழிகாட்டுதலுடன் நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே,
காங்கிரஸ் கட்சி எப்போதும் பழங்குடியின சமூகத்தை புறக்கணித்து விட்டது. அவர்களின் தேவைகளை அது ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. பழங்குடியினரின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, அதற்கென்று ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியது பிஜேபி அரசாங்கம்தான். அடல்ஜி ஆட்சிக்கு வந்தபோதுதான், முதல் முறையாகப் பழங்குடியினர் நல அமைச்சகம் நிறுவப்பட்டது. அதற்கு முன்பு பல தசாப்தங்கள் கடந்துவிட்டன, பெரிய தலைவர்கள் வந்து சென்றார்கள், ஆனால் பழங்குடியின சமூகங்களுக்காகத் தனி அமைச்சகம் எதுவும் அமைக்கப்படவில்லை. அடல்ஜி வந்தபோது, பிஜேபி அரசின் கீழ் மட்டுமே இது நடந்தது.
காங்கிரஸ் காலத்தில், பழங்குடியினப் பகுதிகளில் இவ்வளவு பெரிய திட்டங்களைப் பற்றி யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது! ஆனால், பிஜேபி அரசின் கீழ், இவை அனைத்தும் சாத்தியமாகி உள்ளன. சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பழங்குடியினப் பகுதியான தாரில், ஒரு பெரிய பிரதமர் மித்ரா பூங்காவை (PM MITRA Park) நாங்கள் தொடங்கி வைத்தோம். இது பழங்குடியின விவசாயிகளுக்கு, குறிப்பாகப் பருத்தி பயிரிடும் விவசாயிகளுக்கு, மிகப் பெரிய அளவில் பயனளிக்கும்.
நண்பர்களே,
பிஜேபி-யின் முயற்சிகளால்தான் இன்று ஒரு ஏழை பழங்குடியினக் குடும்பத்தைச் சேர்ந்த மகள், மரியாதைக்குரிய திரௌபதி முர்மு அவர்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக ஆகியுள்ளார். மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியின சமூகங்களின் பிரச்சினைகளை குடியரசுத்தலைவர் முர்மு அவர்களே எடுத்துரைத்தார். அவரின் உந்துதலால், நாங்கள் பழங்குடியின மக்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் மற்றும் பிற தேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பிரதமரின் ஜன்மன் திட்டத்தைத் தொடங்கினோம். இத்திட்டத்தின் கீழ், மிகவும் விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினக் குழுக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இன்று, மண்ணின் மைந்தன் பழங்குடியின கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியின கிராமங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. பகவான் பிர்சா முண்டாவை மக்கள் 'தர்தி ஆபா' (மண்ணின் மைந்தன்) என்று அறிவார்கள். இந்த இயக்கம் 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்குப் பயனளிக்கும். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. மேலும், வனப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் வன உரிமைகளையும் நாங்கள் அங்கீகரித்துள்ளோம்.
நண்பர்களே,
நமது பழங்குடியினச் சகோதர சகோதரிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வன வளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். இந்த வன வளங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கான ஒரு வழியாக மாற வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே, நாங்கள் ‘வன வளத் திட்டத்தைத் தொடங்கினோம். வனப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நாங்கள் அதிகரித்தோம். மேலும், பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தையுடன் இணைத்தோம். இதன் விளைவாக, நாடு முழுவதும் வனப் பொருட்களின் உற்பத்தியில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
நண்பர்களே,
பழங்குடியின சமூகம் கௌரவத்துடன் வாழும் வாய்ப்பைப் பெறுவதே எங்கள் உறுதிப்பாடு. அவர்களின் நம்பிக்கையையும், சுயமரியாதையையும், கலாச்சாரத்தையும் பாதுகாப்பதே எங்கள் புனிதமான சபதம்.
நண்பர்களே,
சாதாரண குடிமகனின் வாழ்க்கை எளிதாகும்போது, அவரே நாட்டின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் தலைமை வகிக்கிறார். நினைவூட்டிப் பார்த்தால், 11 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை நீங்கள் நினைவு கூரலாம். ஏன் அது மோசமாக இருந்தது? ஏனென்றால், காங்கிரஸ் நாட்டின் குடிமக்களைச் சுரண்டுவதிலும், அவர்களைக் கொள்ளையடிப்பதிலும் ஈடுபட்டிருந்தது. அந்த நேரத்தில், வரிகளும் பணவீக்கமும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருந்தன. நீங்கள் மோடிக்கு ஆசீர்வாதம் அளித்து, எங்கள் ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸின் அந்தக் கொள்ளைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்தோம்.
நண்பர்களே,
சரியாக இந்த காரணத்தால்தான், இந்த நாட்களில் அவர்களுக்கு என் மீது இவ்வளவு கோபம்!
நண்பர்களே,
2017-ம் ஆண்டில், ஜி.எஸ்.டி-ஐ அமல்படுத்தியதன் மூலம், வரி மற்றும் சுங்கக் கட்டணங்களின் சிக்கலில் இருந்து நாட்டை விடுவித்தோம். இந்த நவராத்திரியின் முதல் நாளிலிருந்தே, ஜி.எஸ்.டி-யில் மீண்டும் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இன்று நாடு முழுவதும் ஜி.எஸ்.டி 'பணச் சேமிப்பு' (Bachat) திருவிழாவைக் கொண்டாடி வருகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. இங்கு ஏராளமான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கூடியுள்ளனர். நான் ஜீப்பில் வந்தபோது, அனைத்து தாய்மார்களும் சகோதரிகளும் ஆசீர்வாதங்களை வழங்கினார்கள். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வீட்டுச் செலவுகள் குறைந்துள்ளன.
நண்பர்களே,
2014-ம் ஆண்டுக்கு முன், நீங்கள் சோப்பு, ஷாம்பூ, பற்பசை அல்லது பல் பொடி போன்ற அன்றாடப் பொருட்களை 100 ரூபாய் மதிப்பில் வாங்கினால், நீங்கள் உண்மையில் 131 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. பொருளின் விலை 100 ரூபாய், ஆனால் நீங்கள் 131 ரூபாய் கொடுக்க வேண்டும். நான் இன்று 'வெற்று அறிக்கைப் போர்வீரர்கள்' எல்லாவிதமான பொய்களையும் பரப்பிய 2014-க்கு முந்தைய காலத்தைப் பற்றிப் பேசுகிறேன். 100 ரூபாய் கொள்முதலுக்கு காங்கிரஸ் 31 ரூபாய் வரி வசூலித்தது.
2017-ம் ஆண்டில், நாங்கள் முதன்முதலில் ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியபோது, அதே 100 ரூபாய் பொருள் வெறும் 118 ரூபாய்க்கு கிடைத்தது. அதாவது, காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது, பிஜேபி அரசின் கீழ் மக்கள் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 13 ரூபாயைச் சேமித்தனர்.
இப்போது, செப்டம்பர் 22-ம் தேதி நாங்கள் அறிமுகப்படுத்திய புதிய ஜி.எஸ்.டி சீர்திருத்தத்திற்குப் பிறகு, முன்னர் 131 ரூபாய் இருந்த அதே 100 ரூபாய் பொருளின் விலை இப்போது வெறும் 105 ரூபாய் மட்டுமே. 5 ரூபாய் மட்டுமே வரி! 31 ரூபாய் வரியிலிருந்து இப்போது 5 ரூபாய் வரி மட்டுமே! இதன் பொருள் என்னவென்றால், காங்கிரஸ் காலத்துடன் ஒப்பிடும்போது, இன்று நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் 26 ரூபாயைச் சேமிக்கிறீர்கள். தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மாதாந்திர வரவுசெலவுத் திட்டத்தை மிகவும் கவனமாக நிர்வகிப்பீர்கள். இந்த கணக்கீட்டின் மூலம், நீங்கள் இப்போது ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான ரூபாயைச் சேமிப்பீர்கள்.
நண்பர்களே,
காலணி என்பது அனைவருக்கும் அத்தியாவசியத் தேவை. காங்கிரஸ் ஆட்சியில், நீங்கள் 500 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜோடி காலணிகளை வாங்கினால், அதற்கு 575 ரூபாய் செலவாகும். அதாவது, 500 ரூபாய் காலணிக்கு காங்கிரஸ் 75 ரூபாய் வரியாக வசூலித்தது. நாங்கள் ஜி.எஸ்.டி-ஐ அமல்படுத்தியபோது, வரியை 15 ரூபாய் குறைத்தோம்.
இப்போது, புதிய ஜி.எஸ்.டி சீர்திருத்தத்திற்குப் பிறகு, அதே ஒரு ஜோடி காலணிக்கு நீங்கள் மேலும் 50 ரூபாயைச் சேமிப்பீர்கள். முன்னதாக, 500 ரூபாய்க்கு மேல் உள்ள காலணிகளுக்கு இன்னும் அதிக வரி விதிக்கப்பட்டது. நாங்கள் அந்த 500 ரூபாய் வரியை நீக்கிவிட்டோம். இப்போது, 500 ரூபாய் வரையிலான காலணிகளுக்கு வரி விதிப்பதற்குப் பதிலாக, 2,500 ரூபாய் மதிப்புள்ள காலணிகள் வரை வரியை குறைத்துள்ளோம்.
நண்பர்களே,
ஒரு சாதாரணக் குடும்பம் ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இதுகூட எட்டாக்கனியாக இருந்தது. 60,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு மோட்டார் சைக்கிளுக்கு, காங்கிரஸ் 19,000 ரூபாய்க்கு மேல் வரி விதித்தது. சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்! 60,000 ரூபாய்க்கு, 19,000 ரூபாய்க்கும் மேல் வரி. 2017-ல் நாங்கள் ஜி.எஸ்.டி-யைக் கொண்டு வந்தபோது, இந்த வரி 2,000 முதல் 2,500 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இப்போது, செப்டம்பர் 22-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த புதிய ஜி.எஸ்.டி விகிதங்களுக்குப் பிறகு, 60,000 ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளுக்கான வரி வெறும் 10,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டு உள்ளது. 2014-உடன் ஒப்பிடும்போது, இதன் மூலம் கிட்டத்தட்ட 9,000 ரூபாய் இலாபம் கிடைக்கிறது.
நண்பர்களே,
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், வீடு கட்டுவதும் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. 300 ரூபாய் மதிப்புள்ள ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு, காங்கிரஸ் 90 ரூபாய்க்கு மேல் வரி வசூலித்தது. 2017-ல் ஜி.எஸ்.டி வந்த பிறகு, இது சுமார் 10 ரூபாய் குறைந்தது. இப்போது, செப்டம்பர் 22-ஆம் தேதி நாங்கள் செய்த சீர்திருத்தத்தின் மூலம், அதே சிமெண்ட் மூட்டைக்கான ஜி.எஸ்.டி வரி சுமார் 50 ரூபாய் மட்டுமே. அதாவது, 2014-உடன் ஒப்பிடும்போது, இன்று ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 40 ரூபாய் மிச்சமாகிறது.
சுருக்கமாகச் சொன்னால், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் கொள்ளை மட்டுமே இருந்தது; ஆனால் பிஜேபி அரசின் கீழ் இன்று சேமிப்பு மட்டுமே உள்ளது. அதனால்தான், நாடு முழுவதும் ஜி.எஸ்.டி சேமிப்புத் திருவிழாவை நாம் கொண்டாடி வருகிறோம்.
ஆனால் சகோதர சகோதரிகளே,
ஜி.எஸ்.டி சேமிப்புத் திருவிழா ஒருபுறம் நடந்தாலும், எங்களுக்கு மற்றொரு இலக்கும் உள்ளது. அதுதான் 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா). நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது என்பது இப்போது மிகவும் அவசியமாகிறது. அதற்கான பாதை சுதேசி என்ற மந்திரத்தில் உள்ளது. எனவே, சுதேசி என்ற மந்திரத்தை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.
நான் உங்கள் அனைவருக்கும், மேலும் ராஜஸ்தான் முழுவதிலும் மற்றும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கும், குறிப்பாக எனது கடைக்கார மற்றும் வர்த்தக நண்பர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்: நாம் விற்பவை அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும்!
மேலும், எனது சக குடிமக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: நாம் வாங்குபவையும் சுதேசியாக இருக்க வேண்டும்! நாம் கடைக்காரரிடம் கேட்க வேண்டும், "சகோதரரே, இது சுதேசியா இல்லையா என்று சொல்லுங்கள்?"
சுதேசி குறித்த எனது வரையறை மிகவும் எளிமையானது: நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம், வணிகக்குறி (பிராண்ட்) எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம், ஆனால் அந்தப் பொருள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்; நமது இளைஞர்களின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்; நமது மக்களின் வியர்வையும் மண்ணின் நறுமணமும் கலந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, அதுதான் சுதேசி.
அதனால்தான் நான் அனைத்து வர்த்தகர்களிடமும் சொல்கிறேன்: உங்கள் கடைகளில், "இது சுதேசி" என்று பெருமையுடன் ஒரு பலகையை வையுங்கள். நீங்கள் சுதேசியை வாங்கும்போது, அந்தப் பணம் நமது சொந்த நாட்டிலுள்ள ஒரு கைவினைஞருக்கோ, ஒரு தொழிலாளிக்கோ, ஒரு வர்த்தகருக்கோ செல்கிறது. அந்தப் பணம் வெளிநாடுகளுக்குச் செல்லாமல், தேசத்தின் வளர்ச்சிக்காக இங்கேயே தங்கி விடுகிறது. அது புதிய நெடுஞ்சாலைகள், புதிய சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஏழைகளுக்கான வீடுகளைக் கட்டுகிறது.
எனவே, நண்பர்களே, சுதேசியை நமது பெருமையாக மாற்ற வேண்டும். இந்தத் திருவிழாக் காலத்தில், சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்குவோம் என்று நீங்கள் அனைவரும் உறுதியெடுத்துக் கொள்ளுமாறு நான் வலியுறுத்துகிறேன்.
இந்த உறுதிமொழியுடன், மீண்டும் ஒருமுறை, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான இந்த அனைத்துத் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
முழு ஆற்றலுடன் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்: பாரத் மாதா கீ ஜே! உங்கள் கைகளை உயர்த்தி மா பாரதிக்கு வணக்கம் செலுத்துங்கள். பாரத் மாதா கீ ஜே! பாரத் மாதா கீ ஜே! பாரத் மாதா கீ ஜே! மிக்க நன்றி!
----
(Release ID: 2171309)
AD/VK/KR
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
(Release ID: )
***
AD/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2250502)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam