பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – கனடா தலைவர்களின் கூட்டறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 02 MAR 2026 5:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பை ஏற்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னி 2026 பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இந்தியாவின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். கனடா பிரதமராகப் பொறுப்பேற்ற பின் திரு கார்னியின் இந்தியாவுக்கான முதலாவது பயணம் இதுவாகும். மேலும், 2018-க்கு பின் கனடா பிரதமர் ஒருவர் இந்தியாவில் பயணம் மேற்கொள்வதும் இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு கார்னியுடன், கனடாவின் மூத்த அமைச்சர்கள், மாகாணத் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட உயர்நிலைக்குழுவும் இந்தியா வந்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இந்தியா – கனடா உத்திசார் கூட்டாண்மைக்கான வழிகாட்டு கட்டமைப்பாக இந்தியாவின் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கோட்பாட்டை இருதலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்தியாவின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கும் கனடாவின் வலுவான கனடாவை கட்டமைப்போம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்த அவர்கள், வளர்ச்சி, புத்தாக்கம், எரிசக்தி பரிமாற்றம், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, நம்பிக்கையான டிஜிட்டல் சூழல் அமைப்புகள், உறுதியான வழங்கல் தொடர்கள், மக்களை மையப்படுத்திய வளர்ச்சி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் உறுதியேற்றனர்.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கோட்பாட்டின்படி, சில முன்னுரிமை துறைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்த இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அதன்படி, தூய்மை எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்திற்கு தேவையான தொழில்துறைகளில், முதலீட்டு ஆதரவை வலுப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். அரிய கனிமங்கள், எரிசக்தி பரிமாற்ற வழித்தடங்கள் ஆகியவற்றில் ஒத்துழைக்கவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

தொழில்துறை, முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்க 2026-ல் இந்தியா – கனடா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சேகரிப்பு உச்சிமாநாட்டை நடத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர். சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் உறுப்பினராக தொடர்வதென்று கனடாவின் முடிவை இந்தியா வரவேற்றுள்ளது. இந்த முடிவு சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இருநாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவுகளை  அதிகரிக்கவும் கலை, பாரம்பரியம், இசை, படைப்பாக்க தொழில்துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இருதலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

அண்மையில், புதுதில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சிமாநாட்டிற்கு இடையே நடைபெற்ற ஆஸ்திரேலியா- கனடா- இந்தியா தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கக் கூட்டாண்மைக்கான சந்திப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். இருதரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் 4.65 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடியும் என்று இருதலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்திய அரசு மற்றும் மக்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த கனடா பிரதமர் திரு கார்னி, விரிவான இந்தக் கூட்டாண்மையை முன்னோக்கி கொண்டு செல்வதில் கனடாவின் உறுதிப்பாட்டையும் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234572&reg=3&lang=1    

***

TV/SMB/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2234637) வருகையாளர் எண்ணிக்கை : 21