பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையின் போது வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
Posted On:
15 AUG 2025 10:32AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி 12-வது முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து ஆற்றிய தமது சுதந்திர தின உரையில், இந்தியாவின் அடுத்த எழுச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த 79-வது சுதந்திர தினத்தன்று, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு தேசத்திற்குத் தேவையான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப்பை உருவாக்குவது முதல் ஜெட் என்ஜின்களை உருவாக்குவது வரை, பத்து மடங்கு அணுசக்தி விரிவாக்கம் முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டம் வரை, அவரது சுதந்திர தின உரை உறுதியாக இருந்தது. பாரதம் சொந்தமாக தனது இலக்கை நிர்ணயித்து 2047-க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதை அவரது உரை வெளிப்படுத்தியது.
முக்கிய அறிவிப்புகள்:
- செமிகண்டக்டர்: முன்பு குறைக்கடத்தி தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவே இல்லை. அதே நேரத்தில் மற்ற நாடுகள் அதில் செழித்தன என்பதை நினைவு கூர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா இப்போது இதில் தீவிரமாக இயங்குவதாக தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள், நம் நாடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சிப்பை வெளியிடும் என அவர் கூறினார்.
- 2047-ம் ஆண்டுக்குள் அணுசக்தித் திறன் பத்து மடங்கு அதிகரிக்கும்:
அடுத்த 20 ஆண்டுகளில் அணு மின் உற்பத்தி திறனை பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்கும் இந்தியாவின் பணியின் ஒரு பகுதியாக, 10 புதிய அணு உலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
- தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்: அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் தீபாவளியன்று வெளியிடப்படும். அது அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உள்ளூர் விற்பனையாளர்கள், நுகர்வோர் ஆகியோருக்குப் பயனளிக்கும்.
- சீர்திருத்தப் பணிக்குழு: அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒரு பிரத்யேக சீர்திருத்த பணிக்குழுவை உருவாக்குவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். இது பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், நடைமுறை சிக்கல்களைக் குறைத்தல், நிர்வாகத்தை நவீனப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
- ₹1 லட்சம் கோடி மதிப்பில் பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டம்: பிரதமர் திரு நரேந்திர மோடி ₹1 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரு பெரிய வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்குவதாக அறவித்தார். இதன் கீழ் புதிதாகப் பணியில் இணையும் இளைஞர்கள் ₹15,000 பெறுவார்கள். இந்தத் திட்டம் 3 கோடி இளம் இந்தியர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உயர் அதிகாரம் கொண்ட மக்கள்தொகை ஆய்வுப் பணி: எல்லைப் பகுதிகளில் ஊடுருவல், சட்டவிரோத இடப்பெயர்வு ஆகியவை காரணமாக மக்கள்தொகை ஏற்றத்தாழ்வின் ஆபத்துகளை பிரதமர் திரு நரேந்தர மோடி எடுத்துரைத்தார். இந்த தேசிய பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ளவும், நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, உரிமைகள் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் உயர் அதிகாரம் கொண்ட மக்கள்தொகை ஆய்வு இயக்கத்தைத் தொடங்குவதாக அவர் அறிவித்தார்.
- எரிசக்தி சுதந்திரம் - ஆழ்கடல் இயக்கம்: பட்ஜெட்டில் பெரும் பங்கு இன்னும் பெட்ரோல், டீசல், எரிவாயு இறக்குமதிக்கு செல்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். சூரிய சக்தி, ஹைட்ரஜன், நீர் மின்சக்தி, அணுசக்தி ஆகியவற்றில் பெரிய விரிவாக்கங்களுடன், கடல் வளங்களைப் பயன்படுத்த தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டம் தொடங்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
- இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெட் இன்ஜின்கள்: கொவிட் காலத்தில் தடுப்பூசிகள் தயாரித்தது போலவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ உருவாக்கப்பட்டது போலவும், சொந்தமாக ஜெட் இன்ஜின்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு வியத்தகு அறிவிப்பை வெளியிட்டார். நமது விஞ்ஞானிகள், இளைஞர்கள் அதை நேரடி சவாலாக எடுத்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
***
(Release ID: 2156703)
AD/PLM/ RJ
(Release ID: 2156774)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Nepali
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam