ரெயில்வே அமைச்சகம்
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வே முடிவு
Posted On:
13 JUL 2025 4:02PM by PIB Chennai
பயணிகள் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை சோதனை முறையில் நிறுவியதன் அடிப்படையில், அதில் கிடைத்த நேர்மறையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தும். குற்றவாளிகள், திட்டமிட்ட குற்றங்களைச் செய்யும் கும்பல்களின் மோசடிச் சம்பவங்கள் கணிசமாகக் குறையும். பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாக்க, கதவுகளுக்கு அருகிலுள்ள பொதுவான இயக்கப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்.
ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் ஆய்வு செய்தனர். 2025 ஜூலை 12 சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விரிவான பாதுகாப்பு:
இது தொடர்பாக வடக்கு ரயில்வேயின் ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகளில் வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 74,000 ரயில் பெட்டிகளிலும் 15,000 லோகோமோடிவ்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 டோம் வகை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஒவ்வொரு நுழைவு வழியிலும் 2 கேமராவும் ஒவ்வொரு ரயில் இன்ஜினிலும் 6 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும். இதில் ரயில் இன்ஜினின் முன்புறம், பின்புறம் என இருபுறமும் தலா 1 கேமரா பொருத்தப்படும். ரயில் இன்ஜினின் ஒவ்வொரு பெட்டியிலும் (முன் மற்றும் பின்புறம்) 1 டோம் சிசிடிவி கேமரா மற்றும் 2 மேசையில் பொருத்தப்பட்ட மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
நவீன முறை கண்காணிப்பு:
சிசிடிவி கேமராக்கள் நவீனமானவையாக இருக்கும் என்றும், எஸ்டிக்யூசி சான்றிதழ் பெற்றவை என்றும் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். மத்திய ரயில்வே அமைச்சர், சிறந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில்களிலும், குறைந்த வெளிச்ச நிலைகளிலும் கூட உயர்தர காட்சிப் பதிவுகள் கிடைக்கும் வகையில் கேமராக்களை பொருத்துமாறு ரயில்வே அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார். சிசிடிவி கேமராக்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஆராயுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தரவு தனியுரிமைக்கு முக்கியத்துவம்:
பயணிகள் பகுதிகளில் கேமராக்களை பொருத்துவதன் நோக்கம் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும். தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், இந்த கேமராக்கள் குற்றவாளிகளை அடையாளம் காண உதவும். இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் முயற்சிகள், பாதுகாப்பான பயணத்தையும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்.
*****
(Release ID: 2144363)
AD/TS/PLM/SG
(Release ID: 2144378)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam