பிரதமர் அலுவலகம்
சைப்ரஸ் அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்
Posted On:
18 JUN 2025 9:32AM by PIB Chennai
மாண்புமிகு சைப்ரஸ் அதிபர் அவர்களே,
இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்புப் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
முதலில், அன்பான வரவேற்பு மற்றும் அன்பான விருந்தோம்பலுக்காக மாண்புமிகு அதிபர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று நான் சைப்ரஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்து, சைப்ரஸ் அதிபரும் இந்த நாட்டு மக்களும் காட்டிய அரவணைப்பும் பாசமும் உண்மையிலேயே என் இதயத்தைத் தொட்டுள்ளன.
சிறிது நேரத்திற்கு முன்பு, சைப்ரஸ் எனக்கு ஒரு மதிப்புமிக்க கௌரவத்தை வழங்கியது. இந்தப் பாராட்டு எனக்கு மட்டும் உரியது அல்ல. இது 140 கோடி இந்தியர்களுக்கும் ஒரு மரியாதை. இது இந்தியாவிற்கும் சைப்ரஸுக்கும் இடையிலான நீடித்த நட்பைக் குறிக்கிறது. இந்த கௌரவத்திற்காக மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
சைப்ரஸுடனான உறவுகளுக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகளுக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பின் வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது. இந்தியாவிற்கும் சைப்ரஸுக்கும் இடையிலான நட்பு சூழ்நிலைகளிலிருந்து உருவான ஒன்றல்ல, எல்லைகளால் வரையறுக்கப்பட்டதல்ல.
இது காலத்தின் சோதனையை தாண்டி உறுதியாக நிற்கிறது. ஒவ்வொரு சகாப்தத்திலும், ஒத்துழைப்பு, மரியாதை, பரஸ்பர ஆதரவின் உணர்வை நாங்கள் நிலைநிறுத்தி வருகிறோம். ஒருவருக்கொருவர் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்கிறோம்.
நண்பர்களே,
இருபது ஆண்டுகளுக்கு பிறகு சைப்ரஸுக்கு ஒரு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் வருகை இதுவாகும். இந்தப் பயணம் நமது இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. இன்று, சைப்ரஸ் அதிபரும், நானும் நமது ஒத்துழைப்பில் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவான விவாதங்களை நடத்தினோம்.
சைப்ரஸின் "தொலைநோக்குப் பார்வை 2035" என்ற கொள்கைக்கும் "வளர்ச்சியடைந்த பாரதம் 2047" என்ற நமது தொலைநோக்குப் பார்வைக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. எனவே, நமது பகிரப்பட்ட எதிர்காலத்தை வடிவமைக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது ஒத்துழைப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு உறுதியான செயல் திட்டத்தை நாம் உருவாக்குவோம்.
நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தில் கவனம் செலுத்தப்படும். இணையதள, கடல்சார் பாதுகாப்பு குறித்து தனித்தனி உரையாடல்கள் தொடங்கப்படும்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு சைப்ரஸ் தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் நாங்கள் சைப்ரஸுக்கு நன்றி கூறுகிறோம். பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராட, அந்தந்த நிறுவனங்களுக்கிடையில் உடனடி தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு வழிமுறை நிறுவப்படும். இருதரப்பு வர்த்தகத்தையும், முதலீட்டையும் மேம்படுத்துவதில் மகத்தான ஆற்றல் உள்ளது என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.
நேற்று, மாண்புமிகு சைப்ரஸ் அதிபருடனான எனது உரையாடலின் போது, எங்கள் பொருளாதார உறவுகள் குறித்து வணிக சமூகத்திற்கிடையே மிகுந்த உற்சாகத்தை உணர்ந்தேன். இந்த ஆண்டு இறுதிக்குள் பரஸ்பர நன்மை பயக்கும் இந்திய-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
இந்த ஆண்டு, "இந்தியா-சைப்ரஸ்-கிரீஸ் வணிக - முதலீட்டு கவுன்சில்" தொடங்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் நமது நாடுகளுக்கு இடையே இருதரப்பு வர்த்தகத்தையும், முதலீட்டையும் அதிகரிக்கும்.
தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள், சுகாதாரம், விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலையில் அக்கறை போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவான விவாதங்களை நடத்தினோம். சைப்ரஸில் யோகா, ஆயுர்வேதம் ஆகியவை பிரபலமடைந்து வருவதால் நாங்கள் ஊக்கமடைந்துள்ளோம்.
சைப்ரஸ் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடமாகும். அவர்களின் பயணத்தை எளிதாக்க நேரடி விமான இணைப்பை ஏற்படுத்த நாங்கள் பாடுபடுவோம். போக்குவரத்து ஒப்பந்தத்தை இறுதி செய்வதை விரைவுபடுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
நண்பர்களே,
ஐரோப்பிய யூனியனில், சைப்ரஸ் எங்கள் நம்பகமான நாடு அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவிக்கு வரவிருக்கும் சைப்ரஸுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் தலைமையின் கீழ், இந்திய-ஐரோப்பிய யூனியன் உறவுகள் புதிய உயரங்களை எட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்களின் அவசியம் குறித்து இரு நாடுகளும் பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் முயற்சியை ஆதரித்ததற்காக சைப்ரஸுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
மேற்கு ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் நடந்து வரும் மோதல்கள் குறித்து நாங்கள் கவலை தெரிவித்துள்ளோம். இந்த மோதல்களின் பாதகமான தாக்கம் அந்தந்த பிராந்தியங்களுக்கு மட்டும் ஏற்படுவதல்ல. இது போரின் சகாப்தம் அல்ல என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம்.
பேச்சுவார்த்தை மூலம் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்.. மத்திய தரைக்கடல் பிராந்தியத்துடன் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் இந்த பிராந்தியத்தின் அமைதிக்கும், செழிப்புக்கும் வழி வகுக்கும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம்.
மாண்புமிகு சைப்ரஸ் அதிபர் அவர்களே,
இந்தியாவுக்கு வருகை தருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். உங்களை விரைவில் இந்தியாவில் வரவேற்கும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்.
மீண்டும் ஒருமுறை, உங்கள் சிறந்த விருந்தோம்பலுக்கும், மரியாதைக்கும் மனமார்ந்த நன்றி.
***
(Release ID: 2137068)
VJ/PLM/AG/KR
(Release ID: 2137344)