பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் தாஹோத்தில் ரூ.24,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் 140 கோடி இந்தியர்கள் ஒன்றுபட்டுள்ளனர்: பிரதமர்
நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு நமக்குத் தேவையான அனைத்தும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட வேண்டும்: பிரதமர்

பழங்குடி சமூகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: பிரதமர்

ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது இந்தியர்களான நம் மதிப்புகள் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடு: பிரதமர்

Posted On: 26 MAY 2025 2:42PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று குஜராத்தின் தாஹோத்தில் ரூ.24,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த பல திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், 2014-ம் ஆண்டு மே 26ந் தேதி, பிரதமராக முதன்முதலில் பதவியேற்ற நாளாகக் கருதப்படுவதால், இந்த நாள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். தேசத்தை வழிநடத்தும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்த குஜராத் மக்களின் அசைக்க முடியாத ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.  இந்த நம்பிக்கையும் ஊக்கமும் நாட்டிற்கு இரவும் பகலும் சேவை செய்வதற்கான தமது அர்ப்பணிப்பைத் தூண்டியுள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். பல ஆண்டுகளாக, இந்தியா, கற்பனை செய்ய முடியாத முடிவுகளை எடுத்து, பல தசாப்தங்களாக நிலவிய பழமையான தடைகளிலிருந்து விடுபட்டு, ஒவ்வொரு துறையிலும் முன்னேறியுள்ளது. இன்று, நாடு விரக்தி மற்றும் இருள் நிறைந்த சகாப்தத்திலிருந்து பிரகாசமான, நம்பிக்கையின் புதிய யுகத்திற்கு எழுந்துள்ளது என்று அவர்  கூறினார்.

140 கோடி இந்தியர்கள் ஒரு வளர்ச்சியடைந்த  பாரதத்தை உருவாக்குவதில் ஒன்றுபட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவிற்குள் அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தன்னம்பிக்கை என்பது காலத்தின் தேவை என்று திரு  மோடி குறிப்பிட்டார்.  உலகளாவிய உற்பத்தித் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியா இப்போது ஸ்மார்ட்போன்கள், ஆட்டோமொபைல்கள், பொம்மைகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியா ரயில் மற்றும் மெட்ரோ தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், உலகளவில் ஏற்றுமதி செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பெரிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ள இந்த முன்னேற்றத்திற்கு தாஹோத் ஒரு பிரதான உதாரணம் என்று  குறிப்பிட்ட திரு. மோடி, தாஹோத் மின்சார ரயில் என்ஜின் (லோகோமோட்டிவ்)  தொழிற்சாலையை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக எடுத்துரைத்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்த அவர், முதல் மின்சார லோகோமோட்டிவ் இப்போது வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டதில் பெருமை தெரிவித்தார். குஜராத் மற்றும் முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணமாக, லோகோமோட்டிவ் இன்ஜினை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூடுதலாக, குஜராத் அதன் ரயில்வே வலையமைப்பை 100% மின்மயமாக்கியுள்ளது என்று அறிவித்தார்  இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறிய அவர், இந்த சாதனைக்காக குஜராத் மக்களை வாழ்த்தினார்.

தாஹோத் உடனான தமது நீண்டகாலத் தொடர்பைப் பற்றி நினைவு கூர்ந்த பிரதமர், இந்தப் பகுதியுடன் தொடர்புடைய பல எண்ணங்களை நினைவு கூர்ந்தார். பல தசாப்தங்களாக தாஹோத்துக்குச் சென்று வருவதாகவும், தமது ஆரம்ப ஆண்டுகளில், அடிக்கடி மிதிவண்டியில் அந்தப் பகுதியை சுற்றி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த அனுபவங்கள் தாஹோத்தின் சவால்கள் மற்றும் ஆற்றலைப் புரிந்துகொள்ள அனுமதித்ததாக அவர் எடுத்துரைத்தார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகும், அவர் தொடர்ந்து பல முறை அந்தப் பகுதிக்குச் சென்று அதன் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தாஹோத்தில் நடைபெறும் ஒவ்வொரு வளர்ச்சி முயற்சியும் தமக்கு மிகுந்த திருப்தியைத் தருவதாகவும், இன்று தமக்கு இன்னொரு அர்த்தமுள்ள நாளாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10-11 ஆண்டுகளில் இந்தியாவின் ரயில்வே துறையின் விரைவான வளர்ச்சியை எடுத்துரைத்த திரு. மோடி, மெட்ரோ சேவைகளின் விரிவாக்கம் மற்றும் அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்துதல், நாடு முழுவதும் இணைப்பை மாற்றியமைத்தல் ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.  வந்தே பாரத் ரயில்கள் இப்போது கிட்டத்தட்ட 70 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன என்றும், இது இந்தியாவின் போக்குவரத்து வலையமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அகமதாபாத் மற்றும் வேரவல் இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடங்கப்படுவதாக அவர் அறிவித்தார். இந்தியாவில் நவீன ரயில்களின் எழுச்சிக்கு நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றமே காரணம் என்று திரு. மோடி மேலும் கூறினார். ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் இப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன, இதனால் இறக்குமதியை நம்பியிருப்பது குறைகிறது என்றும் அவர் கூறினார். இந்தியா ரயில்வே உபகரணங்களின் முன்னணி ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது என்று திரு. மோடி கூறினார், இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு மெட்ரோ பெட்டிகளையும் இங்கிலாந்து, சவுதி அரேபியா மற்றும் பிரான்சுக்கு ரயில் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்கிறது என்று குறிப்பிட்டார். மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் இந்தியாவில் இருந்து ரயில்வே தொடர்பான கூறுகளை இறக்குமதி செய்கின்றன என்று அவர் மேலும் கூறினார். மொசாம்பிக் மற்றும் இலங்கையில் இந்திய பயணிகள் ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' ரயில் எஞ்சின்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் திரு மோடி தெரிவித்தார். இது 'மேக் இன் இந்தியா' முயற்சியின் தொடர்ச்சியான விரிவாக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்றும், இது தேசிய பெருமையை வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

“வலுவான ரயில் வலையமைப்பு வசதியை மேம்படுத்துவதுடன்,  தொழில்கள் மற்றும் விவசாயத்தையும் மேம்படுத்துகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகள் முதல் முறையாக ரயில் இணைப்பைப் பெற்றுள்ளன என்பதை எடுத்துக்காட்டினார். குஜராத்தில் பல பகுதிகளில் முன்பு சிறிய, மெதுவாக நகரும் ரயில்கள் மட்டுமே இருந்தன.  ஆனால் இப்போது பல குறுகிய பாதை வழித்தடங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். தாஹோத் மற்றும் வல்சாத் இடையேயான புதிய எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து மற்றும்  பல ரயில் பாதைகளைத் திறந்து வைத்த பிரதமர், தொழிற்சாலைகள் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறினார். தாஹோத்தின் ரயில் தொழிற்சாலை 9,000 குதிரைத்திறன் கொண்ட என்ஜின்களை உற்பத்தி செய்யும் என்றும், இது இந்தியாவின் ரயில்களின் சக்தியையும் திறனையும் கணிசமாக அதிகரிக்கும் என்றும், தாஹோத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு என்ஜினும் நகரத்தின் பெயரைத் தாங்கியிருக்கும் என்றும் குறிப்பிட்டார். வரும் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான என்ஜின்கள் தயாரிக்கப்படும் என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு கணிசமான வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் தொழிற்சாலை ரயில்வே உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் சிறு தொழில்களையும் ஆதரிக்கும் என்றும், இது சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். வேலைவாய்ப்புகள் தொழிற்சாலைக்கு அப்பால் விரிவடைந்து, விவசாயிகள், கால்நடை உரிமையாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பயனளித்து, பரவலான பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.

கல்வி, தகவல் தொழில்நுட்பம், செமி கண்டக்டர்கள்  மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் குஜராத் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார்.  பல்வேறு தொழில்களில் மாநிலம் தன்னை ஒரு முன்னோடியாக  நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதை அவர் கூறினார். குஜராத்தில் ஆயிரக்கணக்கான கோடி முதலீட்டில் ஒரு பெரிய செமி கண்டக்டர்  ஆலை அமைக்கப்படுவதாகவும், இது உலகளாவிய செமி கண்டக்டர் துறையில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சிகள் குஜராத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும் அவர் கூறினார்.

தாஹோத், வதோதரா, கோத்ரா, கலோல்,  ஹலோல் ஆகியவை கூட்டாக குஜராத்தில் உயர் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் உற்பத்தி வழித்தடத்தை நிறுவியுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், வதோதரா விமான உற்பத்தியில் வேகமாக முன்னேறி வருவதாகவும், சில மாதங்களுக்கு முன்பு ஏர்பஸ் அசெம்பிளி லைன் திறக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். வதோதரா இந்தியாவின் முதல் விரைவு சக்தி பல்கலைக்கழகத்திற்கும் தாயகமாகும் என்று அவர் குறிப்பிட்டார். சவ்லி ஏற்கனவே ஒரு பெரிய ரயில்-கார் உற்பத்தி தொழிற்சாலையைக் கொண்டுள்ளது என்றும், அதே நேரத்தில் தாஹோத் இப்போது இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த என்ஜின்களை - 9,000 குதிரைத்திறன் கொண்ட என்ஜின்களை - உற்பத்தி செய்யும் வசதியைக் கொண்டுள்ளது என்றும், இது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் தருணத்தைக் குறிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். கோத்ரா, கலோல் மற்றும் ஹலோல் ஆகியவை உற்பத்தி அலகுகள், சிறு தொழில்கள் மற்றும் குறு, சிறு ,நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளன. அவை குஜராத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன என்றும் பிரதமர் கூறினார். குஜராத்தின் இந்தப் பகுதி மிதிவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் முதல் ரயில் என்ஜின்கள் மற்றும் விமானங்கள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்வதற்குப் பெயர் பெற்ற ஒரு எதிர்காலத்தைப் பற்றிக் குறிப்பிட்ட  பிரதமர், இதுபோன்ற உயர் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் உற்பத்தி வழித்தடம் உலகளவில் அரிதானது என்றும், குஜராத் ஒரு தொழில்துறை சக்தி மையமாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

“வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு பழங்குடியினப் பகுதிகளின் வளர்ச்சி அவசியம்” என்று திரு மோடி வலியுறுத்தினார், பழங்குடி சமூகங்களை மேம்படுத்த கடந்த 11 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், குஜராத்தின் பழங்குடிப் பகுதிகளில் பணியாற்றிய தமது நீண்ட அனுபவம் தேசிய அளவிலான முயற்சிகளுக்கு பங்களித்துள்ளது என்று  குறிப்பிட்டார். குஜராத்தில் உள்ள பழங்குடி குழந்தைகள் அறிவியல் படிப்பில் சவால்களை எதிர்கொண்ட காலத்தை திரு மோடி நினைவு கூர்ந்தார். இன்று, முழு பழங்குடிப் பகுதியும் தரமான கல்வியை அணுக முடியும் என்றும், நல்ல கல்லூரிகள், ஐடிஐக்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இரண்டு அர்ப்பணிப்புள்ள பழங்குடி பல்கலைக்கழகங்கள் இந்த சமூகங்களுக்கு சேவை செய்கின்றன என்றும் அவர் எடுத்துரைத்தார். கடந்த 11 ஆண்டுகளில் ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகளின் வலையமைப்பு கணிசமாக வலுப்பெற்றுள்ளது என்றும், பழங்குடி மாணவர்களுக்கு சிறந்த கல்வி வாய்ப்புகளை உறுதி செய்கிறது என்றும் கூறிய திரு மோடி, தாஹோத் நகரில் பல ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகள் உள்ளன என்றும், அவை பழங்குடி கல்வியை மேலும் வலுப்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் பழங்குடி சமூகங்களின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, பழங்குடி கிராமங்களை மேம்படுத்த ஒரு பெரிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 'பழங்குடியினர் கிராம வளர்ச்சி இயக்கம்' ஒரு மைல்கல் முயற்சி என்றும், இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு சுமார் ரூ 80,000 கோடி முதலீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ், குஜராத் உட்பட நாடு முழுவதும் 60,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்தக் கிராமங்களில் மின்சாரம், தண்ணீர், சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். பழங்குடி குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலைமைகளை உறுதி செய்வதற்காக, உறுதியான வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மிகவும் ஒதுக்கப்பட்ட பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை திரு மோடி விளக்கினார்.  மேலும் தமது அரசு நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறினார். பல தசாப்தங்களாக அத்தியாவசிய வசதிகள் இல்லாமல் தவிக்கும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களை ஆதரிப்பதற்காக, பிரதமர் ஜன்மன் திட்டத்தை முதன்முறையாக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  இந்தத் திட்டத்தின் கீழ், பழங்குடி கிராமங்களில் புதிய உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்தச் சமூகங்களுக்கு அதிகப் பொருளாதார மற்றும் சமூக உள்ளடக்கத்தை உறுதி செய்வதாகவும் திரு. மோடி குறிப்பிட்டார். பழங்குடி சமூகங்களை அரிவாள் செல் ரத்த சோகையிலிருந்து விடுவிப்பதற்கான தேசிய இயக்கத்தைத் தொடங்கி வைத்த பிரதமர், இந்த முயற்சியின் கீழ் கோடிக்கணக்கான பழங்குடி மக்கள் ஏற்கனவே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார். பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறிய  அவர், 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் முன்னர் பின்தங்கியவையாக வகைப்படுத்தப்பட்டிருந்தன, அவற்றில் பல பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் என்று குறிப்பிட்டார். தாஹோத் அத்தகைய மாவட்டங்களில் ஒன்றாகும் என்றும், ஆனால் இன்று, அது ஒரு லட்சிய மாவட்டமாக முன்னேறி வருகிறது, நவீன உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் வசதிகளுடன் மாற்றத்தை அடைந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தெற்கு தாஹோத் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டது, ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதனால் நர்மதா நதி நீர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைகிறது என்று பிரதமர் கூறினார்.  கடந்த ஆண்டுகளில், உமர்காம் முதல் அம்பாஜி வரையிலான 11 லட்சம் ஏக்கர் நிலம் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது பழங்குடி சமூகங்களுக்கு விவசாயத்தை எளிதாக்குகிறது என்று அவர் கூறினார்.

நாட்டையும் அதன் ஆயுதப் படைகளையும் கௌரவிக்க கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்களை வணங்கிய  திரு. மோடி, இந்தியப் பெண்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக தமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்தார். தாஹோத் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்த பூமி என்பதை அவர் எடுத்துரைத்தார், மகரிஷி தாதிச்சி துதிமதி நதிக்கரையில் படைப்பைப் பாதுகாக்க தமது உயிரைத் தியாகம் செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். நெருக்கடியான காலங்களில் சுதந்திரப் போராட்ட வீரர் தாத்யா தோபேவை இந்தப் பகுதி ஆதரித்ததாகவும், கோவிந்த் குரு மற்றும் நூற்றுக்கணக்கான பழங்குடி வீரர்களின் தியாகங்களின் அடையாளமாக மங்கர் தாம் நிற்கிறது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் கலாச்சார விழுமியங்கள் அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தேசம் அமைதியாக இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய திரு மோடி, ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் மதிப்புகள் மற்றும் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு என்றும் கூறினார். பயங்கரவாதிகளுக்கு அவர்களின் செயல்களின் விளைவுகள் பற்றி எதுவும் தெரியாது என்றும், ஒரு தந்தையை அவரது குழந்தைகள் முன்னிலையில் கொன்ற கொடூரத்தை அவர் நினைவு கூர்ந்தார்.  பயங்கரவாத தாக்குதல்கள், இன்னும் நாடு முழுவதும் கோபத்தைத் தூண்டுவதாகவும் அவர் கூறினார். நாட்டின் தலைவராக தமது பொறுப்பை நிறைவேற்றியதாக திரு மோடி அறிவித்தார். பின்னர் பல தசாப்தங்களாக காணப்படாத ஒரு நடவடிக்கையை மேற்கொண்ட இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்ததாக கூறினார். எல்லையைத் தாண்டிய ஒன்பது முக்கிய பயங்கரவாத மையங்களின் பதுங்குமிடங்கள்  22 நிமிடங்களில் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.  மேலும் பாகிஸ்தானின் ராணுவம் பழிவாங்க முயன்றது, ஆனால் இந்தியப் படைகளால் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஆயுதப் படைகளின் வீரத்திற்கு தமது  மரியாதையை திரு மோடி மீண்டும் தெரிவித்தார்.  தாஹோத்தின் புனித பூமியிலிருந்து அவர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பை வணங்கினார்.

பிரிவினைக்குப் பிறகு பிறந்த நாடு இந்தியா மீதான விரோதப் போக்கிலும், தீங்கு விளைவிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். மறுபுறம், இந்தியா வறுமையை ஒழிக்கவும், அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வளர்ச்சியை அடையவும் உறுதிபூண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். அதன் ஆயுதப் படைகள் மற்றும் பொருளாதாரம் இரண்டும் வலுவாக இருக்கும்போது மட்டுமே வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை கைகோர்த்துச் செல்வதை உறுதிசெய்து, இந்த திசையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தாஹோத்தின் மகத்தான ஆற்றலை எடுத்துரைத்த திரு மோடி, தாஹோத்தின் கடின உழைப்பாளி மக்கள் மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார், அவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தி தாஹோத்தை நாட்டின் மிகவும் வளர்ந்த மாவட்டங்களில் ஒன்றாக மாற்றுவார்கள் என்று வலியுறுத்தினார். தாஹோத் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் முன்னேற்றத்தில் தமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி, அவர்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்திமுரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்வில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு & மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை  அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னணி

இணைப்பை மேம்படுத்துவதற்கும் உலகத்தரம் வாய்ந்த பயண உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் தாஹோத்தில் இந்திய ரயில்வேயின் லோகோமோட்டிவ் என்ஜின் உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்தார். இந்த ஆலை உள்நாட்டு நோக்கங்களுக்காகவும் ஏற்றுமதிக்காகவும் 9000 குதிரை திறன் மின்சார லோகோமோட்டிவ்களை உற்பத்தி செய்யும். இந்த ஆலையில் இருந்து தயாரிக்கப்படும் முதல் மின்சார லோகோமோட்டிவையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த லோகோமோட்டிவ்கள் இந்திய ரயில்வேயின் சரக்கு ஏற்றும் திறனை அதிகரிக்க உதவும். இந்த லோகோமோட்டிவ்கள் மீளுருவாக்கம் செய்யும் பிரேக்கிங் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும், மேலும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் ஆற்றல் நுகர்வைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதன் பிறகு, தாஹோத்தில் ரூ.24,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் ரயில்வே திட்டங்கள் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு திட்டங்கள் அடங்கும். வேராவல் மற்றும் அகமதாபாத் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும், வல்சாத் மற்றும் தாஹோத் நிலையங்களுக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

***

(Release ID: 2131273)

AD/SM/PKV/KPG/DL


(Release ID: 2131426)