பிரதமர் அலுவலகம்
கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
21 NOV 2024 11:35PM by PIB Chennai
பேரவைத் தலைவர் மன்சூர் நாதிர் அவர்களே,
பிரதமர் மார்க் அந்தோணி பிலிப்ஸ் அவர்களே,
துணை அதிபர் பாரத் ஜக்தேவ் அவர்களே,
எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே,
அமைச்சர்களே,
நாடாளுமன்ற உறுப்பினர்களே,
நீதித்துறை வேந்தர் அவர்களே,
இதர பிரமுகர்களே,
பெரியோர்களே, தாய்மார்களே,
வரலாற்றுச் சிறப்புமிக்க கயானா நாடாளுமன்றத்தில் பங்கேற்குமாறு என்னை அன்புடன் அழைத்ததற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கயானா நேற்று அதன் மிக உயர்ந்த கௌரவத்தை எனக்கு வழங்கியது. இந்தக் கௌரவத்தைப் பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.
நண்பர்களே,
இந்தியா மற்றும் கயானா இடையேயான உறவு ஆழமானது. இது பகிரப்பட்ட மண், உழைப்பு, விடாமுயற்சி மூலம் உருவாக்கப்பட்ட இணைப்பாகும். சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இந்தியர் முதன்முறையாக கயானீஸ் மண்ணில் கால் பதித்தார். அப்போதிருந்து, நல்ல மற்றும் கடினமான தருணங்களில், இந்த உறவு, நெருக்கம், பரஸ்பர அன்பால் குறிக்கப்படுகிறது.
நண்பர்களே,
கடந்த இரண்டரை நூற்றாண்டுகளாக இந்தியாவும் கயானாவும் அடிமைத்தனம், போராட்டங்கள் மற்றும் நீடித்த சுதந்திர வேட்கை ஆகியவற்றில் ஒரே மாதிரியான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இரு நாடுகளிலும் எண்ணற்ற தனிநபர்கள் விடுதலைக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தனர். காந்திஜியின் நெருங்கிய சகாவான சி.எஃப்.ஆண்ட்ரூஸ் மற்றும் கிழக்கிந்திய சங்கத்தின் தலைவர் ஜங் பகதூர் சிங் போன்றவர்கள் நமது மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க ஒன்றுபட்டு போராடினார்கள். ஒன்றிணைந்து, நாம் சுதந்திரத்தை அடைந்தோம். இன்று இந்தியாவும், கயானாவும் உலக அரங்கில் ஜனநாயகத்தை வலுப்படுத்தி வருகின்றன. எனவே, கயானா நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு, உங்கள் அனைவருக்கும் 140 கோடி இந்தியர்களின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
ஜனநாயகத்தை வலுப்படுத்த நாம் பாடுபடும் அதே வேளையில், மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைகள் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவும் கயானாவும் சுதந்திரம் அடைந்தபோது, உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இருந்தது. தற்போது, 21-ம் நூற்றாண்டில், நாம் முற்றிலும் புதிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.
நண்பர்களே
நமது ஜனநாயக விழுமியங்கள் மிகவும் வலுவானவை. நாம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறும்போது ஒவ்வொரு சவாலையும் சமாளிக்க அவை நமக்கு ஆதரவளிக்கின்றன. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க ஜனநாயகம் மிகவும் பயனுள்ள வழிமுறையாக உள்ளது. ஒரு குடிமகனின் மதம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், ஜனநாயகம் அவர்களின் உரிமைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது மற்றும் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை வழங்குகிறது.
நண்பர்களே,
ஒவ்வொரு நாடும் அதன் குடிமக்களும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை நமது மனிதம் சார்ந்த அணுகுமுறை நமக்குக் கற்பிக்கிறது. இந்தத் தத்துவம் இந்தியாவின் உலகளாவிய பார்வையை வடிவமைத்துள்ளது.
நண்பர்களே,
"ஜனநாயகம் முதலில் - மனிதநேயம் முதலில்" என்ற உணர்வை உயர்த்திப் பிடித்து, இந்தியா ஒரு விஸ்வபந்து (உலகத்தின் நண்பன்) என்ற தனது பங்கைத் தொடர்ந்து நிறைவேற்றுகிறது. ஒவ்வொரு உலகளாவிய நெருக்கடியிலும், இந்தியா முதலில் உதவுபவராக இருக்க முயற்சிக்கிறது. பெருந்தொற்றுப் பரவலின் போது, நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்தியபோது, இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொண்டது. அந்தக் கடினமான நேரத்தில் கயானா மக்களுக்கு இந்தியா உதவ முடிந்தது என்பதை அறிந்து நான் மனநிறைவு அடைகிறேன்.
நண்பர்களே,
தற்போது, உலகளாவிய வளர்ச்சி மற்றும் அமைதிக்கு இந்தியா உறுதியாக ஆதரவளிக்கிறது. இந்த உணர்வுடன்தான் இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாக மாறியுள்ளது. உலகளாவிய தெற்கு கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க சிரமங்களைச் சந்தித்துள்ளது என்று இந்தியா நம்புகிறது. வரலாற்று ரீதியாக, இயற்கையுடன் இணக்கமாக, நமது கலாச்சார விழுமியங்களால் வழிநடத்தப்பட்டு நாம் முன்னேறினோம்.
நண்பர்களே,
இந்தியாவாக இருந்தாலும் சரி, கயானாவாக இருந்தாலும் சரி, வளர்ச்சிக்கான விருப்பங்களையும், நமது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க வேண்டும் என்ற கனவுகளையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம். இதை அடைவதற்கு, உலகளாவிய தெற்கின் ஒன்றுபட்ட குரல் முக்கியமானது. இது உலகளாவிய தெற்கிற்கான விழிப்புணர்வின் தருணம், நாம் ஒன்றிணைந்து ஒரு புதிய உலக ஒழுங்கை வடிவமைக்க ஒரு வாய்ப்பு. இந்த முயற்சியில் கயானாவின் மதிப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளான உங்கள் அனைவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன்.
நண்பர்களே,
இங்கு பல பெண் உறுப்பினர்கள் கூடியிருப்பதை நான் காண்கிறேன். உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், உலகளாவிய வளர்ச்சியை உந்துவதிலும் ஒரு முக்கியமான காரணியாக இருப்பது அதன் மக்கள்தொகையில் பாதியாக உள்ள பெண்கள் ஆவர். பல நூற்றாண்டுகளாக, உலகளாவிய முன்னேற்றத்திற்கு முழுமையாக பங்களிக்க பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு பல காரணிகள் பங்களித்தன, இது ஒரு தேசத்தின் அல்லது உலகளாவிய தெற்கின் கதை மட்டுமல்ல; இது ஒரு உலகளாவிய நிகழ்வுப்போக்காகும். இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டில், உலகளாவிய செழிப்பை உறுதி செய்வதில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இதை அங்கீகரித்து, ஜி-20 தலைமையின் போது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்தியா முன்னுரிமை அளித்தது.
----
(Release ID: 2088768)
TS/IR/KPG/KR
(Release ID: 2123408)