பிரதமர் அலுவலகம்

ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்


ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி, கர்னூல் ஐஐஎம் புத்த கயா, ஐஐஎம் ஜம்மு, ஐஐஎம் விசாகப்பட்டினம் மற்றும் கான்பூரில் உள்ள இந்திய திறன் நிறுவனம் (ஐஐஎஸ்) போன்ற பல முக்கிய கல்வி நிறுவனங்களின் வளாகங்களை தேசத்திற்கு அர்ப்பணித்தார்
நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அர்ப்பணித்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்

ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார்

ஜம்மு விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் மற்றும் ஜம்முவில் பெட்ரோலிய கிடங்கு மற்றும் பொது பயன்பாட்டு வசதி பணிமனைக்கு அடிக்கல் நாட்டினார்

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு குறிப்பிடத்தக்க சாலை மற்றும் ரயில் இணைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

ஜம்மு காஷ்மீர் முழுவதும் குடிமை மற்றும் நகர்ப்புற கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

"இன்றைய முன்முயற்சிகள் ஜம்மு-காஷ்மீரில் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும்"

"ஜம்மு காஷ்மீரை வளர்ச்சியடைய செய்வதை நாங்கள் உறுதி செய்வோம்

Posted On: 20 FEB 2024 2:15PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்முவில் இன்று ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவை சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறையின் திட்டங்கள் ஆகும். ஜம்மு காஷ்மீரில் புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த சுமார் 1500 அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் பிரதமர் வழங்கினார். 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

உஜ்வாலா திட்டத்தின் பலன்களை தான் பெற்றிருப்பதாகவும், இதனால் தனது வாழ்க்கை சிறப்பானதாகவும் தனக்கும் தனது குடும்பத்தினருக்காகவும் நேரம் ஒதுக்க உதவியுள்ளதாகவும் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த வீணா தேவி பிரதமரிடம் தெரிவித்தார். முன்பு, அவர் காடுகளில் இருந்து சமையலுக்காக விறகுகளை எடுத்து வந்தார். தனது குடும்பத்தினர் ஆயுஷ்மான் அட்டைகளை வைத்திருப்பதாகவும், அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் பிரதமரிடம் கூறினார். அவரும் அவரது குடும்பத்தினரும் நல்ல உடல் நலம் பெற பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பயனாளியான கத்துவாவைச் சேர்ந்த கீர்த்தி சர்மா, சுய உதவிக் குழுவில் இணைந்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார். 30,000 ரூபாய் கடனுடன் தனது நிறுவனத்தைத் தொடங்கிய அவர், பின்னர் 1 லட்சம் ரூபாய் இரண்டாவது கடனுடன் மூன்று மாடுகளுடன் தனது நிலையை மேம்படுத்திக் கொண்டார்.  தனது குழுவினருக்கு மட்டுமல்ல, முழு மாவட்டத்தின் பெண்களுக்கும் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். அவரது குழு வங்கிக் கடனை திருப்பிச் செலுத்திவிட்டது, இப்போது அவர்களிடம் 10 மாடுகள் உள்ளன. அவரும் அவரது குழு உறுப்பினர்களும் பல அரசாங்க திட்டங்களால் பயனடைந்துள்ளனர். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் பிரதமரின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு லால் முகமது, தனது மண் வீடு எல்லைப் பகுதியில் இருப்பதாகவும், எல்லையின் மறுபுறத்திலிருந்து ஷெல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார். தாம் தற்போது வசிக்கும் இடத்தில் ஒரு உறுதியான வீட்டைக் கட்டியதற்காக பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ரூ.1,30,000 பெற்றதற்காக பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அரசின் திட்டங்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் சென்றடைவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், லால் முகமதுவின் பாதுகாப்பான வீட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார். திரு லால் முகமது பிரதமரைப் பாராட்டி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கருப்பொருளில் ஒரு இரண்டடி பாடலையும் வாசித்தார்.

சுய உதவிக் குழு உறுப்பினரான பந்திபோராவைச் சேர்ந்த திருமதி ஷஹீனா பேகம், தான் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதாகவும், ஆனால் வேலையின்மை காரணமாக பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், அவர் சுய உதவிக் குழுவின் ஒரு பகுதியாக ஆனார் மற்றும் தேனீ வளர்ப்பு தொழிலைத் தொடங்க கடன் பெற்றார், பின்னர் தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் உதவியுடன் அதனை விரிவுபடுத்தினார், இதன் மூலம் அவர் துறையில் அங்கீகாரம் பெறவும் லட்சாதிபதி சகோதரி ஆனார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், தொலைதூர கிராமங்களில் உள்ள பெண்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி லட்சாதிபதி சகோதரிகளாக மாறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தமக்கு உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்தார். தனது கோழி வணிகத்திற்கு விவசாயக் கடன் அட்டை மூலம் பலன்களைப் பெறுவதையும் அவர் குறிப்பிட்டார். அவரது முதுகலை படிப்புக்காக அவரது பெற்றோரைப் பாராட்டிய பிரதமர், பணியில் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டினார். பெண்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் வகையில் அவர்களின் வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தல் குறித்து பேசிய பிரதமர், "மோடியின் ஆட்சியில் அனைத்தும் சாத்தியம்" என்றார்.

புல்வாமாவின் ரியாஸ் அகமது கோலி. ஜல் ஜீவன் இயக்கத்தின் பயனாளிகளுள் ஒருவர், தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது என்றும், இது அவரது குடும்பத்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிரதமரிடம் கூறினார். கிராமப் பெண்களின் ஆசீர்வாதத்தையும் பிரதமரிடம் அவர் தெரிவித்தார். 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, அவர் தனது நிலத்தின் சொத்து உரிமைகளைப் பெற்றார். அவரும் பழங்குடி சமூகத்தின் பிற உறுப்பினர்களும் இதனால் பெரிதும் பயனடைந்தனர். அரசியல் ஊழியராக இருந்த நாட்களை நினைவு கூர்ந்த பிரதமர், குஜ்ஜார் சமூகத்தினரின் விருந்தோம்பலைப் பாராட்டினார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ஜம்முவுக்கு தாம் மேற்கொண்ட முந்தைய பயணத்தையும், இன்றைய பிரம்மாண்டமான ஒருங்கிணைப்பையும் ஒப்பிட்டுப் பேசினார். பெரிய திரைகளில் இந்த நிகழ்ச்சியைக் காண ஜம்மு மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியுள்ள 3 வெவ்வேறு இடங்களைப் பற்றியும் அவர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வைப் பாராட்டிய திரு மோடி, இன்றைய நிகழ்ச்சி ஒரு ஆசீர்வாதம் என்று கூறினார். இன்றைய நிகழ்ச்சி வளர்ச்சியடைந்த பாரதம் இயக்கத்துடன் மட்டும் நின்றுவிடாமல், நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களும் இதில் பங்கேற்றுள்ளனர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 285 தொகுதிகளில் இந்த திட்டத்தை மக்கள் காண்கிறார்கள் என்றும் யூனியன் பிரதேச மக்களின் உணர்வைப் பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னுடன் கலந்துரையாடிய பயனாளிகள் அரசுத் திட்டங்களின் பலன்களை தெளிவாக எடுத்துரைத்ததற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் மற்றும் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உணர்வுக்காக ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வை பிரதமர் பாராட்டினார். ஒவ்வொரு பயனாளியின் வீட்டு வாசலையும் சென்றடைய வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், தகுதியான பயனாளிகள் எவரும் பின்தங்க மாட்டார்கள் என்று உறுதியளித்தார். "உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்களாட்சியை நிச்சயம் உருவாக்குவோம். 70 ஆண்டுகளாக நிறைவேறாமல் கிடந்த கனவுகள் மோடியால் விரைவில் நிறைவேற்றப்படும்" என்று பிரதமர் உறுதியளித்தார்.

விரக்தி மற்றும் பிரிவினைவாத நாட்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, வளர்ச்சியடைந்ததாக மாறுவோம் என்ற உறுதிமொழியுடன் ஜம்மு காஷ்மீர் முன்னேறி வருகிறது என்று பிரதமர் கூறினார். இன்றைய ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் கல்வி, திறன், வேலைவாய்ப்பு, சுகாதாரம், தொழில் மற்றும் இணைப்பு ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார். ஐஐஎம், ஐஐடி மற்றும் பணி நியமனங்களுக்காக நாட்டின் இளைஞர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் பல தலைமுறைகளாக வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு மக்களின் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது மற்றும் இளைஞர்கள் பெரும் இழப்புகளை சந்தித்தனர் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அத்தகைய அரசுகள் இளைஞர்களுக்கான கொள்கைகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டினார். "தங்கள் குடும்பங்களின் நலனைப் பற்றி சிந்திப்பவர்கள் சாதாரண மக்களைப் பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள்" என்று பிரதமர் மோடி கூறினார். யூனியன் பிரதேசத்தில் வாரிசு அரசியல் இப்போது முடிவுக்கு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை உருவாக்க ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் சக்தி ஆகியோர் மீது அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் வேகமாக கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கிய மையமாக மாறி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீரில் ஐஐடி மற்றும் ஐஐஎம் உருவாக்கப்படும் என்று 2013-ம் ஆண்டு இதே இடத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார். அந்த உத்தரவாதம் இன்று நிறைவேற்றப்படுகிறது என்றார். அதனால்தான் "மோடியின் உத்தரவாதம் என்பது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம்" என்று மக்கள் கூறுகிறார்கள்.

இன்றைய நிகழ்ச்சியில் கல்வி உள்கட்டமைப்புத் திட்டங்களை பட்டியலிட்ட பிரதமர் மோடி, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளை இந்த அளவுக்கு மேம்படுத்துவது என்பது பத்தாண்டுகளுக்கு முன்பு தொலைதூர யதார்த்தம் என்று குறிப்பிட்டார். ஆனால், இதுதான் புதிய இந்தியா" என்று கூறிய பிரதமர், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நவீன கல்விக்காக இன்றைய அரசு அதிகபட்ச செலவினங்களை மேற்கொள்கிறது என்பதை எடுத்துரைத்தார். கடந்த 10 ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீரில் 50 புதிய பட்டப்படிப்பு கல்லூரிகள் உட்பட சாதனை எண்ணிக்கையிலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நாடு கண்டுள்ளது என்று திரு மோடி தெரிவித்தார். பள்ளிக்குச் செல்லாத 45,000 புதிய குழந்தைகள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாணவிகள் கல்விக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை என்று மகிழ்ச்சி தெரிவித்தார். "ஒரு காலத்தில் பள்ளிகள் நடத்தப்பட்டன, ஆனால் இன்று பள்ளிகள் மேம்படுத்தப்படுகின்றன" என்று பிரதமர் மோடி கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவது பற்றி குறிப்பிட்ட பிரதமர், 2014-ல் 4 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 12-ஆக உயர்ந்துள்ளது என்றும், 2014-ல் 500 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை இப்போது 1300-க்கும் அதிகமான இடங்களாக அதிகரித்திருக்கிறது, மருத்துவ பட்டமேற்படிப்புக்கான இடங்கள் 2014-ல் இல்லைவே இல்லை. தற்போது 650-க்கும் மேற்பட்ட மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்கள் உள்ளன என்று  தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் 45 செவிலியர் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டது குறித்தும் அவர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அவற்றில் ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனை இன்று திறக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசிய பிரதமர், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதி சமச்சீரான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் கூறினார்.

யாரும் பின்தங்கிவிட மாட்டார்கள் என்ற இளைஞர்களின் நம்பிக்கையை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவர்கள் இப்போது ஒரு திறமையான அரசு இருப்பதை உணர முடியும் என்றார். வாரிசு மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலை கைவிடும் ஒரு புதிய அலை நாட்டில் உருவாகியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். "ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் வளர்ச்சியின் விசிலை ஊதி, தங்கள் எதிர்காலத்தை உருவாக்க முன்னேறி வருகின்றனர்" என்று குறிப்பிட்ட பிரதமர், யூனியன் பிரதேசத்தின் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றத்தைக் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை முந்தைய அரசுகள் புறக்கணித்தது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட முன்னாள் படைவீரர்களுக்கு பலன்களை அளிக்கும் வகையில், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற நீண்டகால கோரிக்கையை தற்போதைய அரசு நிறைவேற்றியுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சமூக நீதிக்கான அரசியலமைப்பு உறுதிமொழி இறுதியாக அகதிகளின் குடும்பங்கள், பால்மீகி சமூகத்தினர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களை சென்றடைந்தது என்று பிரதமர் கூறினார். பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியதன் மூலம் பால்மீகி சமூகம் எஸ்சி அந்தஸ்தை அடைந்தது. பதாரி, பஹாரி, கடா பிராமணர்கள் மற்றும் கோலிஸ் ஆகியோர் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு, பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை சுட்டிக்காட்டிய பிரதமர், "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மந்திரமே ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்" என்றார். 

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் காரணமாக பெண்கள் மிகவும் பயனடைந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் உறுதியான வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டுதல் மற்றும் ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிட்டார். "370 வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் பெண்களுக்கு முன்பு மறுக்கப்பட்ட அந்த உரிமைகள் பரிசாக கிடைத்துள்ளன" என்று அவர் மேலும் கூறினார்.

ட்ரோன் விமானிகளாக மாறுவதற்கு அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் நமோ ட்ரோன் சகோதரி திட்டம் குறித்தும் பிரதமர் பேசினார். ஆயிரக்கணக்கான சுய உதவிக் குழுக்களுக்கு விவசாயம் மற்றும் தோட்ட வேலைக்கு உதவுவதற்காக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ட்ரோன்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். உரம் அல்லது பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் பணி மிகவும் எளிதாகிவிடும், அதே நேரத்தில் அவர்களுக்கு கூடுதல் வருமானத்தையும் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று நாடு முழுவதும் வளர்ச்சிப் பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஜம்மு காஷ்மீருக்கான போக்குவரத்து அதிகரித்திருப்பதையும் குறிப்பிட்டார். ஜம்மு விமான நிலைய விரிவாக்கப் பணிகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் மூலம் இணைக்கும் திட்டம், ஸ்ரீநகரிலிருந்து சங்கல்தான் மற்றும் சங்கல்தான் முதல் பாரமுல்லா வரை செல்லும் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தல் ஆகியவற்றைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். காஷ்மீரில் இருந்துப் ரயிலில் நாடு முழுவதும் மக்கள் பயணிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். நாட்டில் ரயில்வேயை மின்மயமாக்கும் மிகப்பெரிய இயக்கம் நடைபெற்று வருவது குறித்து பேசிய பிரதமர், இன்று முதல் மின்சார ரயிலைப் பெற்றதற்காக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ரயில்களின் ஆரம்ப வழித்தடங்களில் ஜம்மு காஷ்மீர் தேர்வு செய்யப்பட்டது என்றார். ஜம்மு-காஷ்மீரில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருவதாகவும், மாதா வைஷ்ணோ தேவிக்கான அணுகல் மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்பகுதியில் உள்ள சாலை திட்டங்களை பிரதமர் மோடி பட்டியலிட்டார். இன்றைய திட்டங்களில், ஸ்ரீநகர் வட்டச் சாலையின் இரண்டாம் கட்டம் மானஸ்பல் ஏரி மற்றும் கீர் பவானி கோயிலுக்கான அணுகலை மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல், ஸ்ரீநகர்-பாரமுல்லா-உரி நெடுஞ்சாலை விவசாயிகளுக்கும், சுற்றுலாவுக்கும் பயனளிக்கும். தில்லி அமிர்தசரஸ் கத்ரா விரைவுச் சாலை ஜம்மு மற்றும் தில்லி இடையே பயணத்தை எளிதாக்கும். 

"இன்று, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி குறித்து முழு உலகிலும் மிகுந்த உற்சாகம் உள்ளது" என்று பிரதமர் கூறினார், யூனியன் பிரதேசத்தில் முதலீடு செய்வது தொடர்பாக நேர்மறையான தன்மை உள்ள வளைகுடா நாடுகளுக்கு தனது சமீபத்திய பயணத்தை நினைவு கூர்ந்தார். ஜம்மு-காஷ்மீரில் ஏற்பாடு செய்யப்பட்ட பல ஜி 20 கூட்டங்களையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார், மேலும் முழு உலகமும் ஜம்மு-காஷ்மீரின் இயற்கை அழகால் மயக்கப்படுகிறது என்று கூறினார். ஜம்மு-காஷ்மீருக்கு கடந்த ஆண்டு 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும், அமர்நாத் மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆகிய குகைக் கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். விரைவான உள்கட்டமைப்பு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரங்களில் முதல் 5 இடங்களில் இந்தியா வந்திருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், பொருளாதாரம் மேம்படுவதால் நலத்திட்டங்களில் செலவிடும் அரசின் திறன் அதிகரித்து வருவதை ஒப்புக் கொண்டார். மேம்பட்ட பொருளாதாரம் காரணமாக இந்தியா இலவச ரேஷன், மருத்துவ சிகிச்சை, உறுதியான வீடுகள், எரிவாயு இணைப்புகள், கழிப்பறைகள் மற்றும் பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி ஆகியவற்றை வழங்க முடியும் என்று அவர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்ற வேண்டும். இது ஏழைகளின் நலன் மற்றும் உள்கட்டமைப்புக்கு செலவிடும் நாட்டின் திறனை பன்மடங்கு அதிகரிக்கும். இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும்" என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்தார்.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா, பிரதமர் அலுவலக  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

பின்னணி

கல்வித்துறைக்கு பெரும் ஊக்கம்

நாடு முழுவதும் கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சுமார் ரூ.13,375 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்து, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி, ஐஐடி ஜம்மு, ஐஐடிடிஎம் கர்னூல், கான்பூரில் உள்ள இந்திய திறன் நிறுவனம் (ஐஐஎஸ்), மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் இரண்டு நிரந்தர வளாகங்கள் - தேவ்பிரயாக் (உத்தராகண்ட்) மற்றும் அகர்தலாவில் (திரிபுரா). போன்ற பல முக்கிய கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் தொடங்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

ஐஐஎம் ஜம்மு மற்றும் ஐஐஎம் புத்த கயா, ஐஐஎம் விசாகப்பட்டினம் ஆகிய மூன்று ஐஐஎம் வளாகங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். இதுதவிர நாடு முழுவதும் கேந்திர வித்யாலயாவின் 20 புதிய  கட்டடங்களையும், 13 புதிய நவோதயா வித்யாலயா கட்டடங்களையும் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் 5 கேந்திர வித்யாலயா வளாகங்கள், ஒரு நவோதயா வித்யாலயா வளாகம் மற்றும் நவோதயா வித்யாலயாவுக்கான 5 பன்னோக்கு அறைகள் ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  நாடு முழுவதும் மாணவர்களுக்கான கல்வியின் தேவையைப் பூர்த்தி செய்வதில் புதிதாக கட்டப்படும் இந்த கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா கட்டடங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எய்ம்ஸ் ஜம்மு

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விரிவான, தரமான, முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் நடவடிக்கையாக, ஜம்முவின் விஜய்பூர் (சம்பா) பகுதியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைப் பிரதமர் திறந்து வைத்தார். 2019 பிப்ரவரியில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நிறுவனம், பிரதமரின் பின்தங்கிய மாநிலங்களில் மருத்துவ கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிறுவப்படுகிறது.

1660 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 227 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை 720 படுக்கைகள், 125 இருக்கைகளுடன் மருத்துவக் கல்லூரி, 60 இருக்கைகளுடன் செவிலியர் கல்லூரி, 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிரிவு, ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகள், இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கான விடுதி தங்குமிடம், இரவு தங்குமிட வசதி, விருந்தினர் இல்லம், அரங்கம், வணிக வளாகம் போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த அதிநவீன மருத்துவமனை, இதயம், இரைப்பை, குடலியல், சிறுநீரகவியல், நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, மருத்துவ புற்றுநோயியல், அறுவை சிகிச்சை புற்றுநோயியல், உட்சுரப்பியல், தீக்காயங்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட 17 உயர் சிறப்பு பிரிவுகளில் நோயாளிகள் பராமரிப்பு சேவைகளை வழங்கும்.  இந்த நிறுவனத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, 20 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், நோயறிதல் ஆய்வகங்கள், ரத்த வங்கி, மருந்தகம் போன்றவை இருக்கும். இந்தப் பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கும் டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பை இந்த மருத்துவமனை பயன்படுத்திக் கொள்ளும்.

புதிய முனையக் கட்டிடம், ஜம்மு விமான நிலையம்

ஜம்மு விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்தப் புதிய முனையக் கட்டிடம், கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் சுமார் 2000 பயணிகள் செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்.  புதிய முனையக் கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பிராந்தியத்தின் உள்ளூர் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும் கட்டப்படும். இது விமானப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தி, சுற்றுலா, வர்த்தகத்தை ஊக்குவித்து, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.

ரயில் திட்டங்கள்

பானிஹால் காரி சம்பர் சங்கல்தான் (48 கிலோமீட்டர்) மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாரமுல்லா சிருங்கர் பானிஹால் சங்கல்தான் பிரிவு (185.66 கிலோமீட்டர்) இடையேயான புதிய ரயில் பாதை உட்பட ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்வேறு ரயில் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பள்ளத்தாக்கில் முதலாவது மின்சார ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்கல்தான் ரயில் நிலையம், பாரமுல்லா ரயில் நிலையம் இடையேயான ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பனிஹால்-காரி-சம்பர்-சங்கல்தான் பிரிவின் இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். மேலும், இந்தியாவின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதை டி-50 (12.77 கிமீ) கரி-சம்பர் இடையேயான இந்தப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ரயில் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதுடன் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.

சாலைத் திட்டங்கள்

இந்த நிகழ்ச்சியின் போது, ஜம்முவையும், கத்ராவையும் இணைக்கும் தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் இரண்டு தொகுப்புகள் (44.22 கிலோமீட்டர்) உள்ளிட்ட முக்கியமான சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீநகர் வட்டச் சாலையின் நான்கு வழிச்சாலையின் இரண்டாம் கட்டம், தேசிய நெடுஞ்சாலை 1-ல் ஸ்ரீநகர் பாரமுல்லா உரி இடையேயான 161 கிலோமீட்டர் தூரத்தை மேம்படுத்த 5 தொகுப்புகள், தேசிய நெடுஞ்சாலை-444-ல் குல்காம் புறவழிச்சாலை, புல்வாமா புறவழிச்சாலை கட்டுமானம் ஆகியவை இதில் அடங்கும்.

தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் இரண்டு தொகுப்புகள் நிறைவடைந்தவுடன், மாதா வைஷ்ணோ தேவியின் புனித ஆலயத்திற்கு யாத்ரீகர்கள் வருகை தருவதற்கு வசதியாக அமையும். ஸ்ரீநகர் வட்டச் சாலையின் நான்கு வழிச்சாலையின் இரண்டாம் கட்டத்தில் தற்போதுள்ள சும்பல்-வயுல் தேசிய நெடுஞ்சாலை-1 ஐ மேம்படுத்துவது அடங்கும். 24.7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பிரவுன்ஃபீல்ட் திட்டம், ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இது மனஸ்பல் ஏரி, கீர் பவானி கோயில் போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதோடு, லடாக்கின் லேவுக்கான பயண நேரத்தையும் குறைக்கும். தேசிய நெடுஞ்சாலை 1-ல் ஸ்ரீநகர் பாரமுல்லா உரி இடையேயான 161 கிலோமீட்டர் நீளத்தை மேம்படுத்தும் திட்டம் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது பாரமுல்லா, உரியின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். குவாசிகுண்ட் குல்காம் ஷோபியான் புல்வாமா பத்காம் ஸ்ரீநகர் ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 444-ல் உள்ள குல்காம் புறவழிச்சாலை, புல்வாமா புறவழிச்சாலை இப்பகுதியில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.

பொதுப் பயன்பாட்டு பெட்ரோலிய கிடங்கு வசதி

ஜம்முவில் பொதுப் பயன்பாட்டு பெட்ரோலிய கிடங்கு வசதியை உருவாக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். சுமார் 677 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த அதிநவீன தானியங்கி கிடங்கு, மோட்டார் ஸ்பிரிட், அதிவேக டீசல், சுப்பீரியர் மண்ணெண்ணெய், விமான டர்பைன் எரிபொருள், எத்தனால், பயோ டீசல், குளிர்கால தர அதிவேக டீசல் ஆகியவற்றை சேமிப்பதற்காக சுமார் 100,000 கிலோ லிட்டர் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும்.

பிற திட்டங்கள்

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் குடிமை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், பொது வசதிகளை வழங்குவதற்கும் ரூ. 3150 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சாலை திட்டங்கள், பாலங்கள், கிரிட் கட்டமைப்பு நிலையங்கள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பல பட்டப்படிப்பு கல்லூரி கட்டிடங்கள், ஸ்ரீநகரில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, நவீன நர்வால் பழ மண்டி, கத்துவாவில் மருந்து சோதனை ஆய்வகம், மற்றும் போக்குவரத்து தங்குமிடம் – கந்தர்பால், குப்வாராவில் 224 குடியிருப்புகள் ஆகியவை அடங்கும். ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ஐந்து புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்குதல், ஜம்மு பொலிவுறு நகரத் திட்டத்தின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கான தரவு மையம் / பேரிடர் மீட்பு மையம், ஸ்ரீநகரின் பரிம்போராவில் போக்குவரத்து நகர் மேம்பாடு, அனந்த்நாக், குல்காம், குப்வாரா, ஷோபியான், புல்வாமா மாவட்டங்களில் ஒன்பது இடங்களில் 62 சாலை திட்டங்கள், 42 பாலங்கள்,   போக்குவரத்து தங்குமிடங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் - 2816 குடியிருப்புகள் ஆகியவையும் இடம் பெறுகிறது.

***

ANU/AD/BS/AG/KRS/DL



(Release ID: 2007447) Visitor Counter : 75