பிரதமர் அலுவலகம்

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை பயனாளிகளிடையே பிரதமர் உரையாற்றினார்


“மோடியின் உத்தரவாத வாகனம் இப்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைகிறது”

"நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையை நான் கொடியசைத்து தொடங்கி வைத்தாலும், இன்று நாட்டு மக்கள் பொறுப்பேற்று அதை வழிநடத்துகின்றனர் என்பதே உண்மை”

"நாட்டின் நூற்றுக்கணக்கான சிறிய நகரங்கள் வளர்ந்த இந்தியாவின் பிரமாண்டமான கட்டமைப்பை வலுப்படுத்தப் போகின்றன”

"நகர்ப்புற குடும்பங்களின் பணத்தை சேமிக்க அரசு உறுதிபூண்டுள்ளது"

"கடந்த 10 ஆண்டுகளில் நவீன பொது போக்குவரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் அளவிட முடியாதவை"

Posted On: 16 DEC 2023 6:14PM by PIB Chennai

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த யாத்திரையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில்  நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையை கொடியசைத்து துவக்கி வைக்கும் வாய்ப்பைப் பெற்றதற்காக மகிழ்ச்சி தெரிவித்ததோடு, 'மோடியின் உத்தரவாத' வாகனம் இப்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைவதாகவும் குறிப்பிட்டார். இந்த ஒரு மாதப் பயணத்தில், இந்த நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை ஆயிரக்கணக்கான கிராமங்களையும், சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களை ஒட்டிய 1500 பகுதிகளையும் அடைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். 5 மாநிலத் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அந்த மாநிலங்களில் இந்த யாத்திரையைத் தொடங்க முடியவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், ஐந்து மாநிலங்களின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தங்கள் மாநிலத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையை விரைவாக விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த யாத்திரையின் மக்கள் பங்கேற்பு அம்சத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையை தாம் கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தாலும், இன்று நாட்டு மக்கள் அதற்கு பொறுப்பேற்று வழிநடத்துகின்றனர் என்பதே உண்மை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். பயனாளிகளுடனான கலந்துரையாடலின் போது மோடியின் உத்தரவாத வாகனத்தை வரவேற்பதற்கான மக்களின் ஆர்வத்தை அவர் எடுத்துரைத்தார்.

 

இந்த யாத்திரையின் பயணத்துடன் தாம் இணைந்த நான்காவது சந்தர்ப்பம் இது என்று குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே கிராமப்புற மக்களுடன் உரையாடியதாகவும், பிரதமரின் விவசாயிகளுக்கான கெளரவ நிதி உதவித் திட்டம், இயற்கை விவசாயம், கிராமப்புற பொருளாதாரத்தின் அம்சங்கள் மற்றும் இந்தியாவின் கிராமங்களை மேம்படுத்துவது குறித்து அவர்களுடன் பேசியதாகவும் குறிப்பிட்டார். இன்றைய நிகழ்ச்சியில் நகர்ப்புறங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இன்றைய கவனம் நகர்ப்புற மேம்பாட்டில் உள்ளதாகக் கூறினார்.

வளர்ந்த இந்தியாவை தீர்மானிப்பதில் நமது நகரங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று அவர் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலமாக என்ன வளர்ச்சிப் பணிகள் நடந்தாலும், அதன் நோக்கம் நாட்டின் சில பெரிய நகரங்களுக்கு மட்டுமே கிடைத்தது என்று அவர் கூறினார். ஆனால் இன்று நாட்டின் இன்று இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். நாட்டின் நூற்றுக்கணக்கான சிறிய நகரங்கள் வளர்ந்த இந்தியாவின் பிரமாண்டமான கட்டமைப்பை வலுப்படுத்தப் போகின்றன என அவர் குறிப்பிட்டார்.  சிறு நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் அம்ருத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றவை குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்த மேம்பாடுகள் வாழ்க்கை வசதி, பயணத்தை எளிதாக்குதல் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கத்தினர், நடுத்தர வர்க்கத்தினர் அல்லது பணக்காரர்கள் அனைவரும் இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளின் பயனைப் பெறுகிறார்கள் என்று பிரதமர் கூறினார்.

ஒரு குடும்ப உறுப்பினர் என்ற முறையில் உங்கள் பிரச்சினைகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கொவிட் பாதிப்பின் போது வழங்கப்பசட்ட உதவிகளை எடுத்துரைத்த பிரதமர், 20 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலுத்தப்பட்டதையும், இலவச தடுப்பூசி, ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் மற்றும் சிறு வணிகர்களுக்கு பல லட்சம் கோடி மதிப்புள்ள உதவிகள் உறுதி செய்யப்பட்டதையும் குறிப்பிட்டார். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் இப்போது எளிதாக கடன்களைப் பெறக்கூடிய சாலையோர வியாபாரிகள் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வங்கியின் உதவியைப் பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த யாத்திரையின் மூலம் 1.25 லட்சம் பேர் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார். பிரதமரின் ஸ்வநிதி திட்டப் பயனாளிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அதில் சுமார் 45 சதவீத பெண் பயனாளிகள் அடங்குவர் என்றும் பிரதமர் கூறினார்.  வங்கிக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாதவர்களுக்கு மோடியின் உத்தரவாதம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நகர்ப்புற வாசிகளுக்கான சமூகப் பாதுகாப்பில் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். அடல் பென்ஷன் திட்டத்தில் 6 கோடி சந்தாதாரர்கள் 60 வயதிற்குப் பிறகு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்கிறார்கள் என அவர் கூறினார். பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் ஜீவன் ஜோதி யோஜனா ஆகியவை ரூ. 2 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டை வழங்குகின்றன என அவர் குறிப்பிட்டார். இந்த திட்டங்களின் கீழ் ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்பிலான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டங்களில் அனைவரும் பதிவு செய்து தங்கள் எதிர்காலப் பாதுகாப்பு அம்சத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

வருமான வரி விலக்கு அல்லது குறைந்த கட்டண சிகிச்சை என நகர்ப்புற குடும்பங்களுக்கான பணத்தை சேமிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து பேசிய பிரதமர், ஆயுஷ்மான் அட்டை மருத்துவ செலவுகளுக்காக ஏழைகளுக்கு பெரிதும் பயன் அளிக்கிறது என்றார்.  80 சதவீதம் வரை தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கும் மக்கள் மருந்தகங்கள் மூலம் நகரங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ரூ. 25,000 கோடிக்கு மேல் சேமிப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.  மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்துவதற்கான அரசின் முடிவு குறித்தும் பிரதமர் தெரிவித்தார். உஜாலா திட்டத்தின் கீழ் நாட்டில் எல்இடி பல்புகள் ஏற்படுத்தியுள்ள புரட்சியை பிரதமர் எடுத்துரைத்தார். இது நகர்ப்புற குடும்பங்களுக்கான மின் கட்டணத்தை கணிசமாகக் குறைத்துள்ளது என அவர் கூறினார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில், 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும், அதில் ஒரு பகுதி நகர்ப்புற ஏழை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நடுத்தரக் குடும்பங்களின் சொந்த வீடு கனவை நனவாக்க இந்த அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். கடன்களுடன் இணைந்த மானியத் திட்டம், சொந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு நியாயமான வாடகையை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு வளாகங்கள் ஆகியவற்றையும் பிரதமர் குறிப்பிட்டார்.

நகரங்களில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கான மற்றொரு முக்கிய வழியாக பொது போக்குவரத்து உள்ளது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் நவீன பொதுப் போக்குவரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் அளவிட முடியாதவை என அவர் தெரிவித்தார்.  கடந்த 10 ஆண்டுகளில் 15 புதிய நகரங்கள் மெட்ரோ சேவையைப் பெற்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். மெட்ரோ பணிகள் 27 நகரங்களில் நிறைவடைந்துள்ளன அல்லது நடந்து வருகின்றன என அவர் தெரிவித்தார். பிரதமரின் மின்சாரப் பேருந்துத் திட்டத்தின் கீழ் பல நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.  தில்லியில் புதிதாக 500 மின்சாரப் பேருந்துகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்து என்றும் இப்போது தில்லியில் மத்திய அரசால் இயக்கப்படும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை 1300-ஐ தாண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் அதிகாரமளிக்கும் சிறந்த மையங்கள் நகரங்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், மோடியின் உத்தரவாத வாகனம் இளைஞர் சக்தி மற்றும் பெண்கள் இருவருக்கும் அதிகாரமளிக்கிறது என்றார். நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையை நன்கு பயன்படுத்திக் கொண்டு, வளர்ந்த இந்தியாவுக்கான உறுதிப்பாட்டை அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி

அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான யாத்திரைப் பயனாளிகள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

*******


ANU/PLM/DL



(Release ID: 1987272) Visitor Counter : 166