பிரதமர் அலுவலகம்

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 12 OCT 2023 9:12PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

உத்தராகண்ட் மாநிலத்தின் பிரபலமான மற்றும் இளம் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அவர்களே, மத்திய அமைச்சர் திரு அஜய் பட் அவர்களே, முன்னாள் முதலமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களே, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் மகேந்திர பட் அவர்களே, உத்தராகண்ட்  அமைச்சர்கள், அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், பிற பிரமுகர்கள் மற்றும் தேவபூமியின் எனது அன்பான குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்று உத்தராகண்ட் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. இப்படி ஒரு காட்சியை இதற்கு முன் பார்க்கும் பாக்கியம் யாருக்கும் கிடைத்திருக்காது. காலையில் இருந்து நான் உத்தராகண்ட் முழுவதும் எங்கு சென்றாலும், எனக்கு அளவற்ற அன்பும் ஆசீர்வாதங்களும் குவிந்தன. ஆன்மிகமும், ஈடு இணையற்ற வீரமும் கொண்ட இந்த பூமிக்கு தலைவணங்குகிறேன். குறிப்பாக தைரியமான தாய்மார்களுக்கு தலைவணங்குகிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களே,

இங்கு வருவதற்கு முன்பு, பார்வதி குண்ட் மற்றும் ஜகேஷ்வர் தாம் ஆகிய இடங்களில் வழிபடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு நாட்டுமகனின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், வளர்ந்த இந்தியாவுக்கான உறுதியை வலுப்படுத்தவும், எனது உத்தராகண்ட் மாநிலத்தின் அனைத்து கனவுகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேறவும் நான் ஆசீர்வாதங்களைக் கோரியுள்ளேன். சிறிது நேரத்திற்கு முன்பு, நமது எல்லைக் காவலர்கள் மற்றும் நமது வீரர்களையும் சந்தித்தேன். உள்ளூர் கலை மற்றும் சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய அனைத்து சகோதரிகள் மற்றும் சகோதரர்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இந்த வழியில், எனது புதிய வகை பயணம் பாரதத்தின் கலாச்சாரம், பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் பாரதத்தின் செழிப்பு தொடர்பான இந்த மூன்று அம்சங்களுடன் இணைக்கப்பட்டது. இந்த ஒற்றைப் பயணத்தில் எல்லாவற்றையும் தரிசித்தேன். இன்று நான் ஆதி கைலாயம் சென்றேன். எனவே எனது நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

உத்தராகண்ட் வளர்ச்சியின் புதிய உயரங்களை அடைவதை உறுதி செய்வதற்கும், உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், நமது  அரசாங்கம் இன்று முழு நேர்மையுடனும், முழு அர்ப்பணிப்புடனும், ஒரே ஒரு குறிக்கோளை மனதில் கொண்டும் செயல்படுகிறது. தற்போது, 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. ஒரே திட்டத்தில் ரூ.4,000 கோடி! உத்தரகண்ட் மாநில சகோதர சகோதரிகளே உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இந்தத் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களே,

இந்தப் பாதைகள் எனக்கும் புதிதல்ல, உங்கள் அனைவருக்கும் புதிதல்ல. உத்தராகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற உணர்வு எனக்குள் எப்போதும் இருக்கும். நீங்களும் அதே உணர்வோடும் பாசத்தோடும் என்னுடன் இணைந்திருப்பதை நான் கண்டேன். உத்தராகண்ட் மாநிலத்தின் தொலைதூர கிராமங்களில் இருந்து கூட பல நண்பர்கள் எனக்கு கடிதங்கள் எழுதுகிறார்கள். அவர்கள் நல்ல மற்றும் கெட்ட நேரங்களில் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். குடும்பத்தில் புதிய உறுப்பினர் பிறந்தால், எனக்கு செய்தி அனுப்புவார்கள்; மகள் படிப்பில் சிறந்து விளங்கினால் கடிதம் எழுதுவார்கள் . அதாவது, உத்தராகண்ட்  குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதைப் போல என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நாடு பெரிதாக ஒன்றைச் சாதிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை நீங்களும் பகிர்ந்து கொள்கிறீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்பு ஏதேனும் தென்பட்டால், அதையும் என்னிடம் சொல்ல நீங்கள் ஒருபோதும் தயங்க மாட்டீர்கள். மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்குவதற்கான ஒரு முக்கிய வரலாற்று முடிவை நாடு சமீபத்தில் எடுத்துள்ளது. 30, 40 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணியை, என் தாய், சகோதரிகளின் ஆசியுடன், உங்கள் அண்ணன், மகன் செய்து முடித்துள்ளனர். அந்த நேரத்திலும் இங்குள்ள சகோதரிகள் எனக்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என் குடும்ப உறுப்பினர்களே,

உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன், இன்று இந்தியா வளர்ச்சியின் புதிய உயரங்களை நோக்கி நகர்கிறது. பாரதமும், இந்தியர்களும் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றனர். சுற்றிலும் விரக்தியான சூழல் நிலவிய காலம் ஒன்று இருந்தது. நாடே விரக்தியில் மூழ்கியது போல் இருந்தது. அந்த நேரத்தில், பாரதம் அதன் சவால்களில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என்று ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்தோம். ஒவ்வொரு இந்தியரும் நாட்டை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்களில் இருந்து விடுவிக்க விரும்பினர். பாரதம் புகழும் பெற வேண்டும் என்று அனைவரும் விரும்பினர்.

இன்று, இந்த உலகம் பல்வேறு சவால்களால் சூழப்பட்டுள்ளது. உலகத்தின் நிலையை உங்களால் பார்க்க முடிகிறது. ஆனால் சவால்களால் சூழப்பட்ட உலகில் பாரதத்தின் குரல் வலுப்பெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன்புதான் ஜி20 போன்ற பிரமாண்டமான நிகழ்வு இங்கு நடந்தது. அங்கும் இந்தியர்களாகிய எங்களின் பலத்தை உலகம் எப்படி அங்கீகரித்துள்ளது என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

இதையெல்லாம் செய்தது யார்? இதையெல்லாம் செய்தது யார்? இதை மோடி செய்யவில்லை. எல்லாவற்றையும் நீங்களும் எனது குடும்ப உறுப்பினர்களும் செய்தீர்கள். இதற்கான பெருமை பொதுமக்களாகிய உங்கள் அனைவரையும் சாரும். ஏனென்றால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லியில் ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் உங்களுக்கு சேவை செய்ய நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்தீர்கள். உங்கள் வாக்குகளில் அதிகாரம் உள்ளது. உலகெங்கிலும் உள்ள முக்கிய நபர்களுடன் நான் கைகுலுக்கும்போது, அவர்களுடன் கண் தொடர்பு கொள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் என்னைப் பார்க்கும்போது என்னைக் காண்பதில்லை; அவர்கள் 140 கோடி இந்தியர்களைப் பார்க்கிறார்கள்.

என் குடும்ப உறுப்பினர்களே,

தொலைதூர மலைகளிலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் மக்களைப் பற்றியும் நாங்கள் சிந்தித்தோம். எனவே, வெறும் 5 ஆண்டுகளில், நாட்டில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இவர்களில் பலர் உங்களைப் போலவே மலைகளிலும் தொலைதூரப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். பாரதம் தனது வறுமையை ஒழிக்க முடியும் என்பதற்கு இந்த 13.5 கோடி மக்களும் ஒரு உதாரணம்.

நண்பர்களே,

முன்னதாக வறுமையை ஒழிக்கச் சொன்னார்கள். ஆனால், நாம் அனைவரும் இணைந்து வறுமையை ஒழிப்போம் என்று மோடி கூறி வருகிறார். நாங்கள் பொறுப்பை ஏற்று எங்கள் அனைத்து முயற்சிகளையும் மிகவும் நேர்மையாக செய்கிறோம். இன்று நமது மூவண்ணக் கொடி ஒவ்வொரு துறையிலும் உயர்ந்து பறக்கிறது . உலகில் வேறு எந்த நாடும் அடைய முடியாத நிலையை நமது சந்திரயான் எட்டியுள்ளது. சந்திரயான் தொட்ட அந்த இடத்திற்கு பாரத் சிவ-சக்தி என்று பெயரிட்டுள்ளது. சிவன் மற்றும் சக்தியின் இந்த ஒருங்கிணைப்பு என்றால் என்ன என்பதை உத்தராகண்டில் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை. இது இங்கு ஒவ்வொரு படியிலும் தெளிவாகத் தெரிகிறது.

இன்று விண்வெளியில் மட்டுமல்ல, விளையாட்டிலும் பாரதத்தின் வலிமையை உலகம் கண்டு வருகிறது. சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன. முதல் முறையாக இந்திய வீரர்கள் சதம் அடித்து 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.  உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 மகன்கள், மகள்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள வெற்றியின் பெரும் உயரங்களைத் தொடுவதற்காக பாரத் வீரர்களுக்கு அரசாங்கம் முழு ஆதரவை வழங்குகிறது. வீரர்களின் உணவு முதல் நவீன பயிற்சி வரை, அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. இது உண்மைதான் ஆனால் அதற்கு நேர்மாறானதும் உண்மை. வீரர்களுக்காக அரசாங்கம் இதைச் செய்கிறது. வீரர்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அரசு பல்வேறு இடங்களில் விளையாட்டு மைதானங்களையும் கட்டி வருகிறது. இன்று ஹல்த்வானியில் ஹாக்கி மைதானம் மற்றும் ருத்ராபூரில் உள்ள வெலோட்ரோம் ஸ்டேடியம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. என் இளைஞர்களே, உங்களுக்காக வேலை நடக்கிறது. இதனால் எனது உத்தராகண்ட் மாநில இளைஞர்கள் பயனடைவார்கள்.

என் குடும்ப உறுப்பினர்களே,

பாரதத்தின் எல்லை முழுவதும் நவீன சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பாலங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். கடந்த 9 ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் மட்டும் 4200 கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லையில் சுமார் 250 பெரிய பாலங்கள் மற்றும் 22 சுரங்கப்பாதைகளையும் அமைத்துள்ளோம். இன்றளவும் இத்திட்டத்தில் பல புதிய பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்போது எல்லைப் பகுதிகளுக்கு ரயில்களைக் கொண்டு வரவும் தயாராகி வருகிறோம். இந்த மாற்றப்பட்ட மனநிலையின் பலனை இந்த  மாநிலமும் பெறப் போகிறது.

 

முன்பு எல்லைப் பகுதிகள், எல்லைக் கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்களாகக் கருதப்பட்டன. கடைசியாகக் கருதப்படும் ஒன்றுக்கு வளர்ச்சியிலும் மிகக் குறைந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவும் பழைய எண்ணம்தான். எல்லையோர கிராமங்களை கடைசி கிராமமாக அல்லாமல் நாட்டின் முதல் கிராமங்களாக உருவாக்கத் தொடங்கியுள்ளோம். துடிப்பான கிராமத் திட்டத்தின் கீழ், இதேபோன்ற எல்லைக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வருவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி. இந்த கிராமங்களில் சுற்றுலாவை விரிவுபடுத்தவும், யாத்திரையை விரிவுபடுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்.

நண்பர்களே,

சிறு தானியங்கள் அல்லது 'ஸ்ரீ அன்னா' கூட பல தலைமுறைகளாக இங்கு வளர்க்கப்படுகின்றன. நான் இங்கு வாழ்ந்த போது உங்களுடன் நிறைய நேரம் செலவிட்டேன். அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சிறுதானியங்கள் ஏராளமாக உட்கொள்ளப்பட்டன. இப்போது மத்திய அரசு இந்த  தானியத்தை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல விரும்புகிறது. இதற்காக நாடு முழுவதும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறு விவசாயிகளும் நிறைய பயனடைவார்கள்.

தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஒவ்வொரு சவாலையும் ஒவ்வொரு அசௌகரியத்தையும் அகற்ற எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அதனால்தான் ஏழை சகோதரிகளுக்கு எங்கள் அரசு கான்கிரீட் வீடுகளை வழங்கியது. எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு கழிவறைகள் கட்டிக் கொடுத்தோம், அவர்களுக்கு எரிவாயு இணைப்புகள், வங்கிக் கணக்குகள் கொடுத்தோம், இலவச சிகிச்சை அளித்தோம். இன்றும், ஏழைகளுக்கு சமையல் நின்றுவிடக் கூடாது என்பதற்காக, இலவச ரேஷன் திட்டம் தொடர்கிறது.

ஹர் கர் ஜல் திட்டத்தின் கீழ், உத்தராகண்டில் உள்ள 11 லட்சம் குடும்பங்களின் சகோதரிகளுக்கு குழாய் வழி குடிநீர் வசதிகள் கிடைக்கின்றன. இப்போது சகோதரிகளுக்கு இன்னொரு வேலை நடக்கிறது. இந்த ஆண்டு, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள்  வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். பூச்சிக்கொல்லிகள், உரங்கள், விதைகள் மற்றும் பலவற்றை ட்ரோன்களின் உதவியுடன் வயல்களில் பயன்படுத்தலாம். இப்போது இதுபோன்ற ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை அருகிலுள்ள காய்கறி சந்தைக்கு கொண்டு செல்ல முடியும். மலைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் மருந்துகளை விரைவாக வழங்க முடியும். அதாவது, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் இந்த ட்ரோன்கள்  மாநிலத்தை நவீனத்தின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும்.

என் குடும்ப உறுப்பினர்களே,

உத்தராகண்டில்  சுற்றுலா மற்றும் புனித யாத்திரை மேம்பாடு தொடர்பான இரட்டை இயந்திர அரசாங்கத்தின் முயற்சிகள் இப்போது பலனளித்து வருகின்றன. இந்த ஆண்டுசார்தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாக அதிகரித்துள்ளது. அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.

எனது அனுபவத்தின்படி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத்திற்கு வரும் மக்கள் எதிர்காலத்தில் இந்தப் பகுதிக்கு கண்டிப்பாக வருவார்கள். அவர்களுக்கு இந்தப் பகுதி பற்றி தெரியாது. இன்று, மோடி இந்த இடத்திற்கு வருகை தரும் வீடியோவை மக்கள் டிவியில் பார்க்கும் போது, 'இந்த இடத்தில் ஏதாவது விசேஷம் இருக்க வேண்டும்' என்று நினைப்பார்கள், நீங்கள் தயாராக இருக்க வேண்டும், பார்வையாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். மானஸ்கண்டில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

உத்தராகண்ட் கடந்த காலங்களில் இயற்கை பேரழிவுகளால் சூழப்பட்ட விதத்தை நான் நன்கு அறிவேன். எங்கள் அன்புக்குரியவர்களில் பலரை நாம் இழந்துவிட்டோம். இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்வதற்கான நமது தயார்நிலையை நாம் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும், அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். இதற்காக அடுத்த 4-5 ஆண்டுகளில் உத்தராகண்டில் ரூ.4000 கோடி செலவிடப்படும். இதுபோன்ற வசதிகள் உருவாக்கப்படும், இதனால் பேரழிவு ஏற்பட்டால், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவாக செய்ய முடியும்.

இது பாரதத்தின் 'அமிர்த காலம்'. இந்தக் காலத்தில், ஒவ்வொரு பிராந்தியத்தையும் நாட்டின் ஒவ்வொரு பிரிவையும் வசதிகள், கௌரவம் மற்றும் செழிப்புடன் இணைக்கும் காலமாகும். பாபா கேதார் மற்றும் பத்ரி விஷால் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன், ஆதி கைலாயத்தின் ஆசீர்வாதத்துடன், எங்கள் தீர்மானங்களை விரைவாக நிறைவேற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துகள்!

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

மிகவும் நன்றி!

பொறுப்பு துறப்பு : இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

***

ANU/AD/PKV/DL



(Release ID: 1967735) Visitor Counter : 73