பிரதமர் அலுவலகம்

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர், ஜக்தல்பூரில் சுமார் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


நாகர்னாரில் என்.எம்.டி.சி எஃகு நிறுனத்தின் எஃகு ஆலையை அர்ப்பணித்தார்

ஜக்தல்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த அடிக்கல் நாட்டினார்

சத்தீஸ்கரில் பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

தரோகி - ராய்ப்பூர் இடையே மின்சார ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே வளர்ச்சியடைந்த பாரதம் கனவு நனவாகும்.

"வளர்ச்சியடைந்த பாரதம் நேரடி, சமூக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்"

"சத்தீஸ்கர் ஒரு பெரிய எஃகு உற்பத்தி மாநிலமாக இருப்பதன் நன்மைகளை அறுவடை செய்கிறது"

பஸ்தாரில் தயாரிக்கப்படும் எஃகு நமது ராணுவத்தை வலுப்படுத்தும், மேலும் பாதுகாப்பு ஏற்றுமதியிலும் இந்தியா வலுவான இருப்பைக் கொண்டிருக்கும்

"அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரின் 30-க்கும் மேற்பட்ட நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன"

சத்தீஸ்கர் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற

Posted On: 03 OCT 2023 12:49PM by PIB Chennai

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார், ஜக்தல்பூரில் சுமார் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பஸ்தார் மாவட்டத்தில் உள்ள நாகர்னாரில் ரூ.23,800 கோடிக்கு மேல் மதிப்புடைய என்.எம்.டி.சி எஃகு நிறுவனத்தின் எஃகு ஆலையை  அர்ப்பணிப்பதும், பல ரயில்வே மற்றும் சாலை திட்டங்களும் இதில் அடங்கும். தரோகி - ராய்ப்பூர் மின்சார ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சியடைந்தால் மட்டுமே வளர்ச்சியடைந்த பாரதம் கனவு நனவாகும் என்று குறிப்பிட்டார். இத்தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக சுமார் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான இன்றைய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர், வளர்ச்சித் திட்டங்களுக்காக சத்தீஸ்கர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரதம் நேரடி, சமூக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று கூறினார். உள்கட்டமைப்பிற்கான இந்த ஆண்டு ஒதுக்கீடு 10 லட்சம் கோடி என்றும்,  இது ஆறு மடங்கு அதிகரிப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

ரயில், சாலை, விமான நிலையம், மின் திட்டங்கள், போக்குவரத்து, ஏழைகளுக்கான வீடுகள் மற்றும் கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள் ஆகிய திட்டங்களில் எஃகின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டை எஃகு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று குறிப்பிட்டார். நாகர்னாரில் மிகவும் நவீன எஃகு ஆலைகளில் ஒன்றைத் திறந்து வைத்து பேசிய பிரதமர், "சத்தீஸ்கர் ஒரு பெரிய எஃகு உற்பத்தி மாநிலமாக இருப்பதன் நன்மைகளை அறுவடை செய்து வருகிறது" என்று கூறினார். இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் எஃகு நாட்டின் வாகன உற்பத்தி, பொறியியல் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறைகளுக்கு புதிய ஆற்றலை வழங்கும் என்று அவர் கூறினார். "பஸ்தாரில் உற்பத்தி செய்யப்படும் எஃகு, ராணுவத்தை வலுப்படுத்துவதோடு, பாதுகாப்பு ஏற்றுமதியையும் அதிகரிக்கும்" என்று திரு மோடி கூறினார். எஃகு ஆலை, பஸ்தார் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார். "புதிய எஃகு ஆலை மத்திய அரசால் பஸ்தர் போன்ற முன்னோடி மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

போக்குவரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துவதைக் குறிப்பிட்ட பிரதமர், சத்தீஸ்கரில் பொருளாதார வழித்தடம் மற்றும் நவீன நெடுஞ்சாலைகள் குறித்து குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சத்தீஸ்கரின் ரயில்வே பட்ஜெட் சுமார் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ரயில் பாதையின் பரிசை தரரோகி நகரம் பெறுவதாக அவர் கூறினார். ஒரு புதிய மின்சார ரயில் நாட்டின் ரயில்வே வரைபடத்தில் தரோகியை இணைத்துள்ளது என்றும், இது தலைநகர் ராய்ப்பூருக்கு பயணம் செய்வதை எளிதாக்குவதாகவும். ஜக்தல்பூர் மற்றும் தண்டேவாடா இடையே ரயில் பாதை இரட்டிப்பு திட்டம் தளவாட செலவுகளைக் குறைத்து  பயணத்தை எளிதாக்கும் என்றும்  அவர் தெரிவித்தார்.

ரயில் பாதைகளை 100% மின்மயமாக்கும் பணியை சத்தீஸ்கர் முடித்துள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலும் மாநிலத்தில் இயக்கப்பட்டு வருகிறது. அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரின் 30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் 7 நிலையங்களை புனரமைக்க ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிலாஸ்பூர், ராய்ப்பூர் மற்றும் துர்க் நிலையங்களுடன், இன்று ஜக்தல்பூர் நிலையமும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் கூறினார். "வரும் நாட்களில், ஜக்தல்பூர் நிலையம் நகரின் முக்கிய மையமாக மாறும். மேலும் இங்குள்ள பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாநிலத்தில் 120 க்கும் மேற்பட்ட நிலையங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"சத்தீஸ்கர் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது" என்று குறிப்பிட்ட திரு. மோடி, இன்றைய திட்டங்கள் வளர்ச்சியின் வேகத்தை அதிகரித்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார். மாநிலத்தில் புதிய தொழில்களை ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார். தனது உரையின் நிறைவாகப் பேசிய பிரதமர், சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்திற்கு அரசு தனது ஆதரவைத் தொடரும் என்றும், நாட்டின் சூழலை மாற்றுவதில் மாநிலம் தனது பங்கை வகிக்கும் என்றும் உறுதியளித்தார். இந்த நிகழ்வில் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காகவும், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து சிந்தித்ததற்காகவும் சத்தீஸ்கர் ஆளுநர் திரு பிஸ்வபூஷன் ஹரிசந்தனுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநில ஆளுநர் திரு பிஸ்வபூஷன் ஹரிச்சந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் மாண்டவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, பஸ்தர் மாவட்டத்தில் உள்ள நாகர்னாரில் உள்ள என்.எம்.டி.சி எஃகு நிறுவனத்தின் எஃகு ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.23,800 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ள இந்த எஃகு ஆலை உயர்தர எஃகு உற்பத்தி செய்யும் பசுமைத் திட்டமாகும். நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி எஃகு நிறுவனத்தின் எஃகு ஆலை துணை மற்றும் அடிப்படைத் தொழில்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். இது பஸ்தாரை உலகின் எஃகு வரைபடத்தில் இடம்பெறச் செய்து, பிராந்தியத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.

நாடு முழுவதும் ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பல ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிப்பு ஆகியவை இந்த நிகழ்ச்சியின் போது செய்யப்பட்டன. அந்தகர் மற்றும் தாரோகி இடையே ஒரு புதிய ரயில் பாதை மற்றும் ஜக்தல்பூர் மற்றும் தண்டேவாடா இடையே ரயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். போரிதந்த் - சூரஜ்பூர் ரயில் பாதை இரட்டிப்பு திட்டம் மற்றும் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ஜக்தல்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தரோகி - ராய்ப்பூர் மின்சார ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திட்டங்கள் மாநிலத்தின் பழங்குடி பகுதிகளில் இணைப்பை மேம்படுத்தும். மேம்பட்ட ரயில் உள்கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் சேவை உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கும் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

தேசிய நெடுஞ்சாலை - 43 இன் 'குன்குரி முதல் சத்தீஸ்கர் - ஜார்க்கண்ட் எல்லைப் பிரிவு வரை' சாலை மேம்பாட்டுத் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிய சாலையால், சாலை வசதி மேம்பட்டு, இப்பகுதி மக்கள் பயன்பெறுவர்.

 

 


AD/ANU/IR/RS/KPG

***

 



(Release ID: 1963633) Visitor Counter : 97