பிரதமர் அலுவலகம்

மாநிலங்களவையில் அரசியலமைப்பு (நூற்றி இருபத்தெட்டாவது திருத்தம்) மசோதா 2023 ஐ ஆதரிக்குமாறு அனைத்து உறுப்பினர்கள், கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

Posted On: 21 SEP 2023 10:49PM by PIB Chennai

மாநிலங்களவையில் அரசியலமைப்பு (நூற்று இருபத்தெட்டாவது திருத்தம்) மசோதா 2023 மீதான விவாதங்களை நிறைவு செய்ய எழுந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த இரண்டு நாட்களாக இரு அவைகளிலும் பயனுள்ள விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், இதில் சுமார் 132 உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். "இந்த விவாதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் மற்றும் அர்த்தம் உள்ளது" என்று கூறிய பிரதமர், இந்த அர்த்தமுள்ள விவாதங்கள் நாட்டின் வரவிருக்கும் நாடாளுமன்ற பயணத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த மசோதாவுக்கு அவை உறுப்பினர்களின் ஆதரவை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், "இந்த உணர்வு, நாட்டு மக்களிடையே ஒரு புதிய தன்னம்பிக்கையை மீண்டும் உருவாக்கும், மேலும் அனைத்து உறுப்பினர்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளன" என்று கூறினார். இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் பெண் சக்திக்கு சிறப்பு மரியாதை கிடைப்பதுடன், அனைத்து அரசியல் கட்சிகளின் நேர்மறையான சிந்தனையின் மூலம் நமது நாட்டின் பெண் சக்திக்கு ஒரு புதிய ஆற்றலை இது புகுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். தலைமைத்துவத்துடன் முன்னேறி, புதிய நம்பிக்கையுடன் தேசத்தைக் கட்டமைப்பதில் பங்களிக்கும்  என்பதால், இந்த மசோதா, இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதமாக மாறும், என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உரையை நிறைவு செய்த பிரதமர், விவாதங்கள் முழுவதும் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, மசோதாவிற்கு  ஆதரவாக ஒருமனதாக வாக்களித்து அதை நிறைவேற்றுமாறு மேலவையை வலியுறுத்தினார்.

----

ANU/AD/BR/KPG



(Release ID: 1959615) Visitor Counter : 98