மத்திய அமைச்சரவை

புதுதில்லி ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றி குறித்த அமைச்சரவை தீர்மானம்

2023 செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெற்ற புது தில்லி ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றியைப் பாராட்டி இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Posted On: 13 SEP 2023 8:53PM by PIB Chennai

'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளின் பல்வேறு அம்சங்களை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அமைச்சரவை பாராட்டியது. பிரதமரின் மக்கள்  பங்கேற்பு அணுகுமுறை ஜி 20 திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் நமது சமூகத்தின் பரந்த பிரிவுகளை ஈடுபடுத்தியது. 60 நகரங்களில் நடைபெற்ற 200-க்கும் அதிகமான கூட்டங்கள் ஜி 20 நிகழ்வுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தடம் பதித்தன. இதன் விளைவாக, இந்தியா ஜி 20 தலைவர் பதவி உண்மையிலேயே மக்களை மையமாகக் கொண்டதாகவும்  ஒரு தேசிய முயற்சியாகவும் உருவெடுத்தது.

 

உச்சிமாநாட்டின் விளைவுகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், வரவிருக்கும் தசாப்தங்களில் உலகளாவிய ஒழுங்கை மறுவடிவமைக்க பங்களிக்கும் என்றும் அமைச்சரவை கருதியது. குறிப்பாக, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதிலும், சர்வதேச நிதி நிறுவனங்களை சீர்திருத்துவதிலும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை நிறுவுவதிலும், பசுமை மேம்பாட்டு ஒப்பந்தத்தை ஊக்குவிப்பதிலும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

கிழக்கு-மேற்கு துருவ  ஒருங்கிணைப்பு  வலுவாகவும், வடக்கு-தெற்கு பிளவு ஆழமாகவும் இருந்த நேரத்தில், பிரதமரின் முயற்சிகள் இன்றைய மிக முக்கியமான பிரச்சினைகளில்  முக்கியமான ஒருமித்த கருத்தை உருவாக்கியதை  அமைச்சரவை சுட்டிக்காட்டியது.

 

'உலகளாவிய தெற்கின் குரலாக' உச்சிமாநாட்டை நடத்தியது இந்தியாவின் தலைமைப் பதவியின் ஒரு தனித்துவ அம்சமாகும். இந்தியாவின் முன்முயற்சியால் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

புது தில்லி உச்சிமாநாடு இந்தியாவின் சமகால தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நமது மரபு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது. இதை ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் வெகுவாகப்  பாராட்டினர்.

 

சர்வதேசப்  பொருளாதாரத்தின் ஆற்றல், வளர்ச்சிக்கு அதிக வளங்கள் கிடைப்பது, சுற்றுலா விரிவாக்கம், உலகளாவிய பணியிட வாய்ப்புகள், சிறுதானிய உற்பத்தி மற்றும் நுகர்வு மூலம் வலுவான உணவுப் பாதுகாப்பு, உயிரி எரிபொருட்கள் மீது ஆழமான அர்ப்பணிப்பு ஆகியவை ஜி 20 உச்சிமாநாட்டின் மூலம் முழு நாட்டிற்கும் பயனளிக்கும் முக்கிய விளைவுகளில் அடங்கும்.

 

உச்சி மாநாட்டின் போது இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட ஒப்பந்தம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஆகியவற்றின் முடிவும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றங்களாகும்.

 

ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றியில் ஈடுபட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்பை மத்திய அமைச்சரவை பாராட்டியது. இந்திய மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் அதன் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்ததை அது அங்கீகரித்தது. உலகில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய ஜி 20 தலைமைக்கு ஒரு வலுவான திசையை வழங்குவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை அது அங்கீகரித்தது.

 

********

(Release ID: 1957163)

SM/SMB/KRS



(Release ID: 1957185) Visitor Counter : 179