பிரதமர் அலுவலகம்

2023, ஆகஸ்ட் 22-25, தென்னாப்பிரிக்கா, கிரீஸ் ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் பயணம்

Posted On: 19 AUG 2023 11:30AM by PIB Chennai

தென்னாப்பிரிக்க அதிபர்  மேதகு மதமேலா சிரில் ரமபோசா, அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 ஆகஸ்ட் 22 முதல் 24 வரை தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் நகருக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

2019-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு இதுவாகும். இந்தக்  குழுவால் தொடங்கப்பட்ட முன்முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், எதிர்கால செயல்பாட்டுப்  பகுதிகளை அடையாளம் காண்பதற்கும்  இந்த உச்சிமாநாடு, ஒரு வாய்ப்பை வழங்கும்.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு  மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்" என்ற சிறப்பு நிகழ்விலும் பிரதமர் பங்கேற்கிறார், இதில் தென்னாப்பிரிக்காவால் அழைக்கப்படும் பிற நாடுகளும் அடங்கும்.

இந்தப் பயணத்தின்போது, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சில தலைவர்களுடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தென்னாபிரிக்கா பயணத்தைத் தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் மேதகு கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பின் பேரில் 2023 ஆகஸ்ட் 25 அன்று பிரதமர் கிரேக்கத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப்  பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்வது இதுவே முதல் முறையாகும்.

கடல்சார் போக்குவரத்து, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள், மக்களுக்கு இடையிலான உறவுகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு மூலம் சமீபத்திய ஆண்டுகளில் வலுவடைந்துள்ள நாகரிக உறவுகளை இந்தியாவும் கிரேக்கமும் கொண்டுள்ளன. இந்த உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் மிட்சோடாகிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு நாட்டு வர்த்தக தலைவர்களுடனும், கிரீஸில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுவார்.

******



(Release ID: 1950771) Visitor Counter : 105