மத்திய அமைச்சரவை

மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் இந்தியா - சுரினாம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 AUG 2023 4:26PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் சுரினாம் குடியரசின் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே மருந்து தயாரிப்பு ஒழுங்குமுறைத் துறையில் ஒத்துழைப்பு குறித்து 2023 ஜூன் 4-ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தெரிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் சுரினாம் பயணத்தின் போது இது கையெழுத்தானது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்ட வழிவகுக்கும். இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய ஒரு முயற்சியாக இருக்கும்.

ஒழுங்குமுறை நடைமுறைகளை ஒருங்கிணைப்பது இந்தியாவில் இருந்து மருந்துகளின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும். இதன் விளைவாக மருந்துத் துறையில் படித்த நிபுணர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.

இரு நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், மருந்து பயன்பாட்டிற்கான மூலப்பொருட்கள், உயிரியல் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் ஒப்பனை பொருட்கள் உள்ளிட்ட மருந்துகள் தொடர்பான மருத்துவ தயாரிப்புகளின் ஒழுங்குமுறையை நன்கு புரிந்து கொள்ள உதவும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மருந்து  தயாரிப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களில் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1949417

***

AD/ANU/IR/RS/GK



(Release ID: 1949592) Visitor Counter : 127