பிரதமர் அலுவலகம்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் & முதல் கட்ட அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரை

Posted On: 30 SEP 2022 5:24PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே !

பாரத் மாதா கி ஜே!

இன்றைய தினம் நகர்ப்புற போக்குவரத்து தொடர்புக்கும் தற்சார்பு இந்தியாவுக்கும்  21 ஆம் நூற்றாண்டில் முக்கியமான தினமாகும். சற்று நேரத்திற்கு முன் காந்திநகர்- மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரசின் அதிவேகப்  பயணத்தை நான் அனுபவித்தேன்.  இந்தப் பயணம் ஒரு சில நிமிடங்களே நீடித்தாலும் அது எனக்குப் பெருமிதம் கொள்ளும் தருணமாக இருந்தது.  இது நாட்டின் மூன்றாவது,  குஜராத்தின் முதலாவது வந்தே பாரத் ரயிலாகும்.  இந்த ரயிலின் வேகம் மிகவும் அதிகமானது. திட்டமிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்னதாகவே நான் தால்தேஜ்  வந்துவிட்டேன். தற்போது வந்தே பாரத் ரயில்  வண்டிகள் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன.  இந்த ரயிலை தயாரிக்கும் பொறியாளர்கள், வயர்மேன், எலக்ட்ரீசியன் ஆகியோரை நான் சந்தித்தேன்.  இந்த ரயில் பற்றி அவர்களிடம் விசாரித்தறிந்தேன். தங்களுக்குக் கூடுதலாக ஆர்டர்கள் தருமாறும் அதிவேக மற்றும் சிறப்பான வந்தே பாரத் ரயில்களைக் குறைந்த கால அவகாசத்தில் செய்து கொடுப்போம் என்று என்னிடம் அவர்கள் கூறினர். நமது நாடு  அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது என்ற பொறியாளர்கள், தொழில்நுட்பாளர்களின் இந்த நம்பிக்கை எனக்கு ஊக்கமளித்தது. 

 

 நண்பர்களே

மின்சார பேருந்துகள் தயாரிப்பு மற்றும்  இயக்கத்திற்காக ஃபேம்  திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நமது ஏழை எளிய மக்களும் நடுத்தர வகுப்பு குடும்பங்களும் பேருந்துகள் வெளியிடும் புகையிலிருந்து விடுதலை பெறுவார்கள்.  இந்த வகையில் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். சப்தம் மற்றும் புகையிலிருந்து மக்கள் விடுதலை பெறுவார்கள். மேலும் இந்தப் பேருந்துகளின் வேகம் மிக அதிகமாகும். இதுவரை, இந்த திட்டத்தின்கீழ்,  நாட்டில் 7000க்கும் அதிகமான மின்சாரப் பேருந்துகள் தயாரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்காக மத்திய அரசு ரூ. 3,500 கோடி செலவு செய்துள்ளது. இதுவரை, குஜராத்திற்கு 8,500 மின்சாரப் பேருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இதுபோன்ற பல பேருந்துகள் இன்று இங்குள்ள சாலைகளில் ஓடுகின்றன. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் கொண்ட வந்தே பாரத் ரயில் வண்டிகள் மூலம் இந்திய ரயில்வேயின் நிலைமை மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குகின்ற இலக்குடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

 

நண்பர்களே

குஜராத் மக்களிடம் நான் இன்னொரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன் பூமிக்கு அடியில் இந்த ரயில் நிலையங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகள் நகர்ப்புற அமைச்சகம் மற்றும் மெட்ரோ நிர்வாகத்திடம் நமது பள்ளி மற்றும் பொறியியல் மாணவர்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.  இதன் விலை எவ்வளவு?  இந்தப்  பணம் யாருடையது?  இது நாட்டு மக்களின் பணம்.  இது எவ்வாறு அமலாக்கப்படுகிறது?   இந்த திட்டத்தை அமலாக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது? இதற்கு என்ன வகையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது?   என்பது பற்றி மாணவர்களுக்கு நாம் எடுத்துரைத்தால்  வளர்ச்சிக்கு பெருமளவு உதவும். நாட்டின் இளைய தலைமுறையான இளைஞர்களிடம் இது தங்களுடையது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினால் ஏதாவது ஒரு போராட்டத்தில் இது போன்ற பொது சொத்துக்களை  அழிக்கக்கூடாது என்ற முக்கியத்துவத்தை உணர்வார்கள்.  தங்களின் சொந்த சொத்து அழிக்கப்படும் போது ஏற்படும் அதே போன்ற வலியை அவர்கள் உணர்வார்கள். இளம் தலைமுறைக்கு போதிக்க வேண்டியதும் அவர்களின் மனசாட்சியை எழுப்புவதும் நமது கூட்டுப் பொறுப்பாகும்

 

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

 

மிக்க நன்றி!

 

****



(Release ID: 1864486) Visitor Counter : 138