பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 29 SEP 2022 9:58PM by PIB Chennai

பாரத் மாதா கி  -ஜே!

பாரத் மாதா கி  -ஜே!

இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்  குஜராத் மாநில ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத் அவர்களே, முதலமைச்சர் திரு புபேந்திர பட்டேல் அவர்களே,  மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி. ஆர். பாட்டில் அவர்களே, குஜராத் உள்துறை அமைச்சர் திரு ஹார்ஸ் சங்வி அவர்களே, அகமதாபாத் மேயர் திரு கிரித் பர்மர் அவர்களே, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய சகோதர, சகோதரிகளே வணக்கம்!

உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில் காணப்படும் உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. முன் எப்போதும் இல்லாத வகையில் 7000-க்கும் அதிகமான தடகள வீரர்கள், சுமார் 15,000 பங்கேற்பாளர்கள், 35,000  கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள், இவற்றைத் தவிர்த்து ஏறத்தாழ 50 லட்சம் மாணவர்கள் நேரடியாக இணைந்துள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகள் பிரமிக்க வைப்பதாக உள்ளது.  வீரர்களின் முகங்களில் காணப்படும் நம்பிக்கை ஒளி, வரவிருக்கும் இந்திய விளையாட்டின் பொற்காலத்தின் முன்னோட்டமாக அமைந்துள்ளது.

நண்பர்களே,

 அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான ட்ரோன் விழா அற்புதமானது.  இது போன்ற கண்கவர் நிகழ்வைக் கண்டு அனைவரும் பெருமிதமும், ஆச்சரியமும் அடைந்தோம். இதுபோன்ற தொழில்நுட்பத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு, குஜராத் மாநிலத்தையும், இந்தியாவையும் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும்.

நண்பர்களே, இதர வளாகங்கள் ஒரு சில விளையாட்டுகளுக்கான வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும் வேளையில், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச் சண்டை, லான் டென்னிஸ் உள்ளிட்ட ஏராளமான போட்டிகளை நடத்துவதற்கான வசதியை சர்தார் பட்டேல் விளையாட்டு வளாகம் பெற்றிருக்கிறது.

 தேசிய அளவில் விளையாட்டுக்கள் முக்கியத்துவம்  பெற்றுள்ளன. ஆடுகளத்தில் வீரர்களின் வெற்றி, அவர்களது வலிமையான செயல்திறன் முதலியவை இதர துறைகளில் நாடு சாதனை புரிவதற்கும் வழிவகை செய்கிறது. விளையாட்டின் மென்மையான ஆற்றல் நாட்டின் அடையாளத்தையும், கண்ணோட்டத்தையும் பெரும் மடங்கு அதிகரிக்கிறது. ஒரு செயலிலிருந்து வெற்றி துவங்குகிறது என்று விளையாட்டு சம்பந்தமான எனது நண்பர்களிடம் நான் அடிக்கடி கூறுவேன். அதாவது ஒரு செயலை நீங்கள் தொடங்கும் போது அந்த நொடியே வெற்றியும் ஆரம்பிக்கிறது. முன்னேறும் முயற்சியை நீங்கள் கைவிடாமல் இருந்தால் வெற்றியும் உங்களைப் பின் தொடர்ந்து வரும்.

 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருந்தது.  அதற்கு மாறாக தற்போது 300-க்கும் அதிகமான விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வீரர்கள் 20- 25 விளையாட்டுகளில் பங்கேற்பார்கள். தற்போது அவர்கள் சுமார் 40 வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். பதக்கங்களின் எண்ணிக்கையும் இந்தியாவின் பெருமையும் இன்று உயர்ந்துள்ளது.

நண்பர்களே, நான் கடைசியாக உங்களுக்கு மேலும் ஒரு மந்திரத்தை அளிக்க விரும்புகிறேன். போட்டியில் வெல்ல நீங்கள் விரும்பினால், உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இந்த விளையாட்டு உணர்வு உங்களது வாழ்க்கையின் பகுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான், கனவுகளை நனவாக்க முடியும். இந்தியா போன்ற இளம் நாடுகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் இருப்பதை உணர வேண்டும். வேகம் இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கிடைக்கும் வெற்றி, அதனைக் கொண்டாடும் வாய்ப்பை நிச்சயம் நாட்டுக்கு வழங்கும். வருங்காலத்தில் அது புதிய நம்பிக்கையையும் அளிக்கும். இந்த நம்பிக்கையுடன், நான் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறேன். 

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது

***************



(Release ID: 1864415) Visitor Counter : 116