பிரதமர் அலுவலகம்

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள பாரவுங்க் கிராமத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

Posted On: 03 JUN 2022 9:39PM by PIB Chennai

வணக்கம்!

 

பாரவுங்க் கிராம மண்ணில் பிறந்த மேதகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களே, மேதகு திருமதி சவிதா கோவிந்த் அவர்களே, உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், உத்தரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, சக அமைச்சர்களே, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்களே, சகோதர, சகோதரிகளே!

 

குடியரசு தலைவர் அழைப்பு விடுத்ததால், இங்கு வரவும் உங்களை காணவும் மிகுந்த ஆவலோடு இருந்தேன். இங்கு வருவதற்கு முன்னால் இந்த கிராமத்தில் தமது நினைவுகளை குடியரசுத் தலைவர் பகிர்ந்திருந்தார்.

 

சகோதர, சகோதரிகளே,

 

பத்ரி மாதாவின் ஆசிகளை பெறும் வாய்ப்பை நான் பெற்றேன். இந்த கிராமம் மற்றும் பகுதியின் ஆன்மீக உணர்வு மட்டுமல்லாமல், ஒரே பாரதம், உன்னத பாரதத்தின் சின்னமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. பக்தியும், நாட்டுப்பற்றும் இந்த ஆலயத்தில் நிரம்பியுள்ளது.

 

விடுதலையின் அமிர்த மகோத்சவத்தை நாடு கொண்டாடி வரும் வேளையில், ஊரக இந்தியா மற்றும் நமது கிராமங்களுக்கான நம் கனவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியாவின் விடுதலைக்கான இணைப்பாக கிராமங்களை மகாத்மா காந்தி கண்டார்.

ஆன்மீகம், லட்சியங்கள், பாரம்பரியங்கள் மற்றும் முன்னேற்றம் உள்ள இந்திய கிராமம். கலாச்சாரம், ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் அன்பு ஆகியவையும் அடங்கிய இந்திய கிராமம்!

 

விடுதலையின் ‘அமிர்த காலத்தில்' இதுபோன்ற கிராமங்களை சீரமைத்து, புனரமைப்பது நமது கடமை. இந்த உறுதிப்பாட்டுடன் கிராமங்கள், ஏழைகள், வேளாண்மை, விவசாயிகள் மற்றும் பஞ்சாயத்து அளவில் ஜனநாயகத்திற்கு புதிய பரிமாணங்களை அளிக்க அரசு பணியாற்றி வருகிறது. வளர்ச்சியின் ஒவ்வொரு பாதையிலும் நகரங்களுக்கு இணையாக நமது கிராமங்களும் முன்னேற வேண்டும் என்பதே புதிய இந்தியாவின் சிந்தனை மற்றும் உறுதிப்பாடு.

 

விவசாயிகளே,

 

அபரிமிதமாக திறன், பணியாளர்கள் மற்றும் அர்ப்பணிப்பை நமது கிராமங்கள் கொண்டுள்ளன. எனவே தான், இந்திய கிராமங்களுக்கு அதிகாரமளிப்பது, நமது அரசின் முதன்மை முன்னுரிமைகளுள் ஒன்று. ஒவ்வொரு திட்டத்தின் பலனையும் 100% பயனாளிகளுக்கு வழங்குவதை உறுதி செய்வதுதான் நமது இலக்கு. பாகுபாடு இல்லாமல், வேறுபாடு இல்லாமல் இருப்பதுதான் சமூக நீதி. பாபா சாஹேப் அவர்களின் அந்தக் கனவு தற்போது நிறைவேறுகிறது.

 

நண்பர்களே,

ஜனநாயகத்தின் சக்தி பற்றி நாம் விவாதிக்கும்போது, உறவினர் சார்பு போன்ற சவால்களிலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். உறவினர் சார்பு என்பது அரசியலில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகளை முன்னேற விடாமல் தடுக்கிறது. நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும், ஜனநாயகத்திற்கு அர்ப்பணிப்புள்ள அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்‌ உறவினர் சார்பில் சிக்கியுள்ள கட்சிகள், அந்த நோயிலிருந்து தங்களை விடுவித்து, குணப்படுத்திக் கொண்டால் மட்டுமே இந்திய ஜனநாயகம் வலுவடையும். அரசியல் சேர்வதற்கு நம் நாட்டு இளைஞர்களுக்கு அதிகபட்ச வாய்ப்பு உருவாகும்.

 

அமிர்த நீர்நிலைகளை கட்டமைப்பதற்கு நீங்கள் எனக்கு உதவ வேண்டும். இந்த கிராமத்தில் நான் நேரம் செலவிட்டதன் வாயிலாக எனது குழந்தைப் பருவம் புதுப்பிக்கப்பட்டது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

 

மிக்க நன்றி!

 

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***************



(Release ID: 1831266) Visitor Counter : 113