பிரதமர் அலுவலகம்

குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் துவக்க உரை

Posted On: 24 MAY 2022 8:57AM by PIB Chennai

பிரதமர் திரு கிஷிடா, பிரதமர் திரு அந்தோணி அல்பனீஸ் மற்றும் அதிபர் திரு பைடன் ஆகிய பெருமக்களே.

உங்களது தலைசிறந்த விருந்தோம்பலுக்கு பிரதமர் திரு கிஷிடா அவர்களுக்கு மிக்க நன்றி. டோக்கியோவில் இன்று நண்பர்கள் மத்தியில் கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

முதலாவதாக, தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் அந்தோணி அல்பனீசுக்கு நல்வாழ்த்துகள். பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் இன்று எங்களுடன் நீங்கள் இருப்பது, குவாட் நட்புறவின் வலிமையையும், அதில் உங்களது உறுதிப்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.

பெருமக்களே,
மிக குறுகிய நேரத்தில் உலக அரங்கில் முக்கிய இடத்தை குவாட் பிடித்துள்ளது.

இன்று குவாடின் நோக்கம் விரிவடைந்திருப்பதுடன், அதன் வடிவமும் பயனுள்ளதாக உள்ளது.

நமது பரஸ்பர நம்பிக்கை, உறுதித் தன்மை முதலியவை, ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் வழங்கிவருகின்றன.

நம் அனைவரின் பொதுவான இலக்கான தடையற்ற, உள்ளடக்கிய இந்தோ- பசிபிக் பகுதிக்கு, குவாட் அளவில் நமது பரஸ்பர ஒத்துழைப்பு ஊக்கமளிக்கிறது.

கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட தீவிர பாதிப்புகளுக்கு இடையேயும் தடுப்பூசி விநியோகம், பருவநிலை செயல்பாடு, நெகிழ்திறன் விநியோக சங்கிலி, பேரிடர் மீட்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைப்பை நாம் அதிகரித்துள்ளோம். இந்தோ- பசிபிக் பகுதியில் அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மையை இது உறுதி செய்கிறது.

‘நன்மைக்கான சக்தியாக’ குவாடின் பிம்பத்தை இது மேலும் வலுப்படுத்தும்.

மிக்க நன்றி.

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.



(Release ID: 1827897) Visitor Counter : 141