நிதி அமைச்சகம்

பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ன் முக்கிய அம்சங்கள்

Posted On: 31 JAN 2022 3:14PM by PIB Chennai

2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது

2022-23-ல் 8.0 - 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது

பெருந்தொற்று: அரசின் விநியோக சீர்திருத்தங்கள் நீடித்த, நீண்டகால விரிவாக்கத்திற்குப் பொருளாதாரத்தைத் தயார் செய்துள்ளது

2021 ஏப்ரல் – நவம்பர் காலத்தில் (சென்ற ஆண்டை விட) மூலதனச் செலவுகள் 13.5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும்

2021 டிசம்பர் 31 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு 633.6 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது

2022 -23-ன் சவால்களை எதிர்கொள்ள பருண்மைப் பொருளாதார நிலைத்தன்மைக் குறியீடுகள் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன

வருவாய் வரவுகளில் பெருமளவு வளர்ச்சி

சமூகத் துறை: சமூக சேவைகள் மீதான செலவு 2014-15-ல் 6.2 சதவீதம் என்பதோடு ஒப்பிடுகையில், 2021-22-ல் ஜிடிபி விகிதத்திற்கேற்ப 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது

பொருளாதாரம் மீட்சியடைந்ததையடுத்து 2020-21-ன் கடைசி காலாண்டில் வேலைவாய்ப்புக் குறியீடுகள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் வந்துள்ளன

வணிகம் சார்ந்த ஏற்றுமதிகளும். இறக்குமதிகளும் வலுவுடன் மீட்சியடைந்து கொவிடுக்கு முந்தைய நிலைகளைக் கடந்துள்ளன

2021 டிசம்பர் 31 நிலவரப்படி வங்கிக்கடன் 9.2 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது

ஐபிஓ-க்கள் (மக்களிடமிருந்து நிறுவனங்கள் மூலதனத்தை திரட்ட அனுமதிப்பது) மூலம் ரூ.89,066 கோடி திரட்டப்பட்டுள்ளது; கடந்த 10 ஆண்டில் எந்த ஆண்டையும் விட இது உயர் அளவாகும்

2021 – 22 -ல் (ஏப்ரல் – டிசம்பர்) ஒருங்கிணைந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் பணவீக்கம் 5.2 சதவீதமாக உள்ளது

2021  - 22 -ல் (ஏப்ரல் – டிசம்பர்)  சராசரி உணவுப் பணவீக்கம் 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது

தீவிரமான விநியோக நிர்வாகம் காரணமாக மிகவும் அத்தியாவசியமானப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில் உள்ளன

வேளாண்மை: 2021 – 22-ல் ஒட்டுமொத்த மதிப்புக் கூடுதல் 3.9 சதவீத வளர்ச்சி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது

ரயில்வே: 2020-21-ல் மூலதனச் செலவினம் கணிசமாக ரூ.155,181 கோடிக்கு அதிகரிக்கப்பட்டது; 2021-22-ல் இது ரூ.215,058 கோடி அளவுக்கு மேலும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2014-வுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகமாகும்

2020 -21-ல் நாளொன்றுக்கு சாலை அமைத்தல் 36.5 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது – முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 30.4 சதவீதம் அதிகமாகும்

நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) : 2020-21-ல் நித்தி ஆயோகின் தரவுப் பலகையில் ஒட்டு மொத்த ஸ்கோர்
66-க்கு முன்னேறி உள்ளது

மத்திய நிதி மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் 2021-22 –க்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பொருளாதார நிலை:

  • 2020-21-ல் 7.3 சதவீதம் என்பதற்கு மாறாக 2021-22-ல் (முதலாவது மதிப்பீட்டின்படி) உறுதியான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022 -23-ல் உறுதியான நிலையில் 8-8.5 சதவீத அளவிற்கு ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது.
  • பொருளாதார மீட்சிக்கு உதவி செய்ய நிதிமுறை நல்ல நிலையில் இருப்பதால் வரும் ஆண்டில் தனியார் துறை முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2022 – 23 ஆம் ஆண்டுக்கு ஜிடிபி வளர்ச்சி முறையே உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் 8.7 சதவீதம், 7.5 சதவீதம் என்ற சமீபத்திய மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டவையாகும்.
  • சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) சமீபத்திய உலகப் பொருளாதார கண்ணோட்ட மதிப்பீடுகளின்படி இந்தியாவின் ஜிடிபி 2021 – 22, 2022 – 23-ல் 9 சதவீத வளர்ச்சி, 2023 – 2024-ல் 7.1 சதவீத வளர்ச்சி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து 3 ஆண்டுகளிலும் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும்.
  • 2021-22-ல் வேளாண்மை மற்றும் துணை தொழில்களில் 3.9 சதவீதமும் தொழில் துறையில் 11.8 சதவீதமும், சேவைகள் துறையில் 8.2 சதவீதமும் வளர்ச்சி  எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேவையைப் பொறுத்தவரை 2021-22-ல் நுகர்பொருள்கள் 7.0 சதவீத வளர்ச்சியும், ஒட்டுமொத்த மூலதன உருவாக்கம் 15 சதவீதமும், ஏற்றுமதி 16.5 சதவீதமும், இறக்குமதி 29.4 சதவீதமும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2022-23-ன் சவால்களை எதிர்கொள்ள இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதை பருண்மைப் பொருளாதார நிலைத்தன்மைக் குறியீடுகள் காட்டுகின்றன.
  • அதிகபட்ச அந்நியச் செலாவணி கையிருப்பு, தொடரும் வெளிநாட்டு நேரடி முதலீடு, ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு ஆகியவை இணைந்து 2022-23-ல் உலகளவில் கடன் பெறுவதற்கு மாறாக போதிய அளவு நிதி இருக்கும்.
  • 2020-21-ல் முழு ஊரடங்கு காலத்தின் போது சுகாதாரத் தாக்கம் மிகக் கடுமையாக இருந்த போதும் பொருளாதார “இரண்டாவது அலை’’-யின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது.
  • சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவினர் மற்றும் வர்த்தக துறையினர் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்கான பாதுகாப்பு அம்சங்கள், வளர்ச்சியை அதிகரிக்க மூலதனச் செலவில் கணிசமான அதிகரிப்பு, நீடித்த, நீண்டகால விரிவாக்கத்திற்கான விநியோக சீர்திருத்தங்கள் ஆகியவை  இந்திய அரசின் தனித்துவமான திட்டங்களாகும்.
  • மிகவும் நிச்சயமற்ற சூழலில் பின்னூட்ட தகவல்கள் பயன்பாடு, உயர்நிலை தரவுக் குறியீடுகள் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அரசின் நீக்குப்போக்கான மற்றும் பல அடுக்குத் திட்டங்களால் விறுவிறுப்பான கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

நிதி சார்ந்த வளர்ச்சிகள்

மத்திய அரசின் வருவாய் இன வரவுகள் நடப்பு 2021-22-ம் ஆண்டின் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட வளர்ச்சி விகிதம் 9.6 சதவீதத்தை காட்டிலும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 67.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மொத்த வரி வருவாய் 2021-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் கொரோனோ தொற்றுப் பரவலுக்கு முந்தைய 2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வலுவான நிலையில் உள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் முதலீட்டுச் செலவினங்கள் 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு துறையின் அதீத வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

நீடித்த வருவாய் இன வசூல் மற்றும்  செலவின  இலக்குகளுக்கான கொள்கைகள் மூலம்  கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் நிதி பற்றாக்குறையை 46.2 சதவீதமாக கட்டுப்படுத்த உதவியது.

கோவிட் 19 தொற்று பரவலால் கடன் வசதிகள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து மத்திய அரசின் கடன் தொகை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடந்த 2019-20ம் ஆண்டில் 49.1 சதவீதத்திலிருந்து 2020-21-ம் ஆண்டு 59.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது  பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியுறவுத்துறைகள்

  1. நாட்டின் வர்த்தக ரீதியிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முந்தைய நிலையை காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வலுவான நிலையை அடைந்துள்ளது.
  2. சுற்றுலாத்துறையின் வருவாய் வலுவிழந்த நிலையிலும், சேவைத் துறையின் வருவாய் மற்றும் செலவினங்கள் பெருந்தொற்றுக்கு முந்தைய  நிலையை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
  3. நிகர முதலீட்டு நடவடிக்கைகள் நடப்பு 2021-22-ம் ஆண்டின் முதல் அரையிறுதியில் 65.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.  அந்நிய முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள், வெளிநாடுகளிலிருந்து பெறப்படும்  வர்த்தக ரீதியிலான நிகர கடன்களுக்கான  மறு மலர்ச்சி நடவடிக்கைகள் வங்கித்துறையில் அதிக முதலீடுகள் மற்றும் கூடுதல் சிறப்பு கடன் உரிமைக்கான ஒதுக்கீடுகள் ஆகியவற்றின் காரணமாக இது சாத்தியமானது.
  4. இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலகட்டத்தில்   593.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் நாட்டில் வெளிநாட்டுக்கடன் 556.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதற்கு சர்வதேச நிதியத்திடமிருந்து பெறப்பட்ட கூடுதல் சிறப்பு கடனுதவிகள் அதிகளவிலான வர்த்தக கடன்கள் ஆகியவை காரணமாகும்.
  5. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021-22-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 600 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2021 டிசம்பர் 31-ந் தேதி 633.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உயர்ந்துள்ளது.
  6. 2021-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் உலகளவில் அதிக அந்நிய செலாவணி கையிருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து நாடுகளை அடுத்து இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது.  

நிதி மேலாண்மை மற்றும் நிதிசார் உள்ளீடுகள்

  1. நாட்டின் பணப்புழக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதற்கு கடந்த நிதியாண்டில் வங்கிகளில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக பராமரிக்கப்பட்டதும், அரசின் கொள்முதல் சார்ந்த நடவடிக்கைகள் சிறப்பு நீண்டகால ரெப்போ நடவடிக்கை களுக்கான பணப்புழக்க விகிதத்தில் ரிசர்வ் வங்கிகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளே காரணம்.
  2. கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர  வர்த்தக வங்கி சார் நடைமுறைகள் மூலம் சாத்தியமாகியுள்ளது.

அ) 2021-ம் ஆண்டில் வங்கிக் கடன் வளர்ச்சி 5.3 சதவீதத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி  9.2 சதவீதமாக படிப்படியான வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஆ) 2017-18-ம் நிதியாண்டில் வர்த்தக வங்கிகளில் 11.2 சதவீதமாக இருந்த மொத்த வராக்கடன் விகிதம் 2021 செப்டம்பர் மாத இறுதியில் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது.

இ) வங்கிகளின் நிகர வாராக்கடன் விகிதம் 6 சதவிகிதத்தில் இருந்து 2.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஈ) 2013-14-ம் நிதியாண்டில் 13 சதவீதமாக இருந்த வர்த்தக வங்கிகளின் முதலீடுகளுக்கான சொத்து விகிதம் 2021- செப்டம்பர் இறுதியில் 16.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உ) பொதுத்துறை வங்கிகளின் சொத்து மீதான வருவாய் மற்றும் முதலீடுகள் மீதான வருவாய் தொடர்ந்து சாதகமான நிலையில் இருந்து வருகிறது.

ஊ) முதலீட்டு சந்தைக்கான ஆண்டு

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் 75 பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் மூலம் 89,066 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இது கடந்த சதாப்தத்தை காட்டிலும் அதிகபட்ச அளவு ஆகும்.

எ) முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 18 ம் தேதி சென்செக்ஸ் 61,766 புள்ளிகளுடனும், நிப்டி 18,477 புள்ளிகளுடனும் உச்சத்தை தொட்டது.

ஏ) கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்திய சந்தைகளின் செயல்பாடுகள் உலக சந்தைப் பொருளாதாரத்தை காட்டிலும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி கண்டுள்ளது.

விலைவாசி மற்றும் பணவீக்கம்:

  • 2020-21-ன் இதே காலக்கட்டத்தில் 6.6 சதவீதமாக இருந்த சராசரி தலைப்பு நுகர்வோர் குறியீட்டு அட்டவணை-ஒருங்கிணைந்த பணவீக்கம், 2021-22-ல் (ஏப்ரல்-டிசம்பர்) 5.2 சதவீதமாக குறைந்துள்ளது. 
  • உணவு பணவீக்கம் தளர்த்தப்பட்டதன் காரணமாக சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளது.
  • கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 9.1 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 2021-22-ல் மிகவும் குறைந்து 2.9 சதவீதமாக இருந்தது.
  • வலுவான விநியோகச் சங்கிலி மேலாண்மை, பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களின் விலையை இந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
  • பருப்பு மற்றும்  சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • மத்திய கலால் வரி குறைப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களால் மேற்கொள்ளப்பட்ட மதிப்புக் கூட்டு வரி குறைப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைக்க உதவியுள்ளன. 
  • மொத்த விற்பனை விலைக்குறியீடு அடிப்படையிலான, மொத்த விற்பனை பணவீக்கம் 2021-22-ல் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை)  12.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
  • இதற்கு காரணம்:
  • முந்தைய ஆண்டில் காணப்பட்ட குறைவான அடிப்படை,
  • பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்தது,
  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் உயர்ந்தது மற்றும் பிற இடுபொருட்கள இறக்குமதி மற்றும்
  • அதிக சரக்கு கட்டணம்
  • நுகர்வோர் விலைக் குறியீடு-ஒருங்கிணைந்த மற்றும் மொத்த விற்பனை பணவீக்கம் இடையிலான வேறுபாடு:
  • இந்த வேறுபாடு மே 2020-ல் 9.6 சதவீத புள்ளிகளாக உயர்ந்தது
  • எனினும், இந்த ஆண்டு இந்த வேறுபாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு பணவீக்கம், 2021 டிசம்பரில் மொத்த விற்பனை பணவீக்கத்திற்கும் குறைவாக 8.0 சதவீத புள்ளிகளாக குறைந்தது
  • இந்த வேறுபாட்டிற்கான காரணங்கள் கீழ்கண்ட காரணிகளால் விளக்கப்படுகிறது:
  • அடிப்படை விளைவால் ஏற்பட்ட மாறுபாடு,
  • எதிர்பார்ப்பு மற்றும் பின்பற்றிய 2 குறியீடுகளுக்கு இடையிலான வித்தியாசம்
  • விலை சேகரிப்புகள்,
  • பட்டியலிடப்பட்ட பொருட்கள்,
  • பொருட்களின் எடையில் காணப்படும் வித்தியாசம், மற்றும்
  • இறக்குமதி செய்யப்பட்ட இடுபொருட்களால் ஏற்பட்ட பணவீக்கம், மொத்த விலைக் குறியீட்டில் பிரதிபலிப்பு
  • மொத்த விலைக் குறியீட்டில் அடிப்படை விளைவு படிப்படியாக குறைந்து, நுகர்வோர் குறியீட்டு அட்டவணை-ஒருங்கிணைந்த பணவீக்கம் மற்றும் மொத்த விலை குறியீடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம்:

நித்தி ஆயோகின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் இந்தியக் குறியீடு மற்றும் தகவல் பலகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்கோர் 2018-19-ல் 57 ஆகவும், 2019-20-ல் 60 ஆகவும் இருந்த நிலையில் 2020-21-ல் 66 ஆக உயர்ந்துள்ளது.

 • முன்னணி செயல்பாட்டாளர்களின் எண்ணிக்கை (65-99 ஸ்கோர்) 2019-20-ல் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களாக இருந்த நிலையில் 2020-21ல் 22 ஆக அதிகரித்தது.

வடகிழக்கு இந்தியாவில், நித்தி ஆயோகின் வடகிழக்கு பிராந்திய மாவட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீடு 2021-22-ல் முன்னணி செயல்பாடு உள்ளவையாக 64 மாவட்டங்களும், செயல்திறன் மிக்கவையாக 39 மாவட்டங்களும் இருந்தன.

உலகில் பத்தாவது பெரிய வனப்பகுதியை இந்தியா கொண்டுள்ளது.

• 2020-ல், 2010 முதல் 2020 வரை காடுகளின் பரப்பை அதிகரிப்பதில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

• 2020-ல், இந்தியாவின் மொத்த புவிப் பரப்பில் 24% காடுகளாக  இருந்தன, இது உலகின் மொத்த காடுகள் பரப்பில் 2% ஆகும்.

ஆகஸ்ட் 2021-ல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள், 2021 அறிவிக்கப்பட்டது. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை 2022-ம் ஆண்டிற்குள் ஒழிப்பதை நோக்கமாகக்  கொண்டது.

பிளாஸ்டிக் பேக்கேஜிங் என்பதற்கான விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு குறித்த வரைவு ஒழுங்குமுறை அறிவிக்கப்பட்டது.

கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் அமைந்துள்ள மொத்த மாசுபடுத்தும் தொழில்களில் 2017-ல் 39% ஆக இருந்த இணக்க நிலை 2020-ல் 81% ஆக மேம்பட்டுள்ளது.

• 2017-ல் நாளொன்றுக்கு 349.13 மில்லியன் லிட்டராக  (எம்எல்டி) இருந்த கழிவுகள் வெளியேற்றம் 2020-ல் 280.20 எம்எல்டி -ஆக குறைந்துள்ளது.

நவம்பர் 2021-ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற பங்கேற்பாளர்களின் 26-வது மாநாட்டில் (சிஓபி - 26) வெளியிடப்பட்ட தேசிய அறிக்கையின் ஒரு பகுதியாக, 2030-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை மேலும் குறைக்கும் இலக்கிற்கான லட்சியத்தைப் பிரதமர் அறிவித்தார்.

பொறுப்பற்ற மற்றும் அழிவை ஏற்படுத்தும் நுகர்வுக்கு பதிலாக கவனத்துடன் மற்றும் தேவைக்கேற்ப பயன்படுத்துவதை வலியுறுத்தும் ஒரு வார்த்தை இயக்கமானலைஃப்’ (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) தொடங்க வேண்டியதன் அவசியம் கோடிட்டுக் காட்டப்பட்டது.

விவசாயம் மற்றும் உணவு மேலாண்மை:

விவசாயத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியைக் கண்டு, நாட்டின் மொத்த மதிப்புக் கூடுதளில் (ஜிவிஏ) 2021-22-ல் 18.8% பங்களிக்கிறது, 2020-21-ல் 3.6% மற்றும் 2021-22-ல் 3.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பல வகையான பயிர்களை ஊக்குவிக்க குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கை பயன்படுத்தப்படுகிறது.

• 2014 ஆம் ஆண்டின் சூழ்நிலை மதிப்பீட்டு ஆய்வறிக்கையுடன் ஒப்பிடுகையில், பயிர் உற்பத்தியின் நிகர வரவுகள் சமீபத்திய சூழ்நிலை மதிப்பீட்டு ஆய்வில் 22.6% அதிகரித்துள்ளது.

கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மீன்வளம் உள்ளிட்ட விவசாயம் தொடர்புடைய துறைகள் உயர் வளர்ச்சித் துறைகளாகவும், விவசாயத் துறையில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாகவும் சீராக வளர்ந்து வருகின்றன.

• 2019-20 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் கால்நடைத் துறை கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) 8.15% வளர்ச்சியடைந்துள்ளது. விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானத்தில் சுமார் 15% வரை இது பங்காற்றி நிலையான வருமான ஆதாரமாக இருந்து வருகிறது.

உள்கட்டமைப்பு மேம்பாடு, மானிய விலையில் போக்குவரத்து மற்றும் குறு உணவு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உணவு பதப்படுத்துதலை அரசு எளிதாக்குகிறது.

உலகின் மிகப்பெரிய உணவு மேலாண்மை திட்டங்களில் ஒன்றாக இந்தியா இயங்குகிறது.

பிரதமரின் வறியோர் நலத் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் உணவு பாதுகாப்பு விகிதத்தை அரசு மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

தொழில் மற்றும் உள்கட்டமைப்பு:

ஏப்ரல்-நவம்பர் 2020-ல் (-)15.3 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2021 ஏப்ரல்-நவம்பர் காலத்தில் தொழில்துறை உற்பத்தி குறியீடு 17.4 சதவீதமாக வளர்ந்தது.

இந்திய ரயில்வேக்கான மூலதனச் செலவு 2020-21-ல் ரூ 155,181 கோடி ஆக உயரந்தது. 2009-14 காலத்தில்  சராசரி ஆண்டு செலவு ரூ.45,980 கோடியாக இருந்தது. மேலும், 2021-22-ல் ரூ 215,058 கோடியாக இது அதிகரிக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இது ஐந்து மடங்கு அதிகமாகும்.

• 2019-20ல் நாளொன்றுக்கு 28 கிலோமீட்டராக இருந்த சாலை கட்டுமானத்தின் அளவு 2020-21ல் நாளொன்றுக்கு 36.5 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது - இது 30.4 சதவீதம் உயர்வு ஆகும்.

பெரிய நிறுவனங்களின் நிகர லாபம் மற்றும் விற்பனை விகிதம் 2021-22 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10.6 சதவீதத்தை அடைந்தது.

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் அறிமுகம், உள்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் மாபெரும் நேரடி மற்றும் டிஜிட்டல் ஊக்கம் ஆகியவை, பரிவர்த்தனை செலவுகளைக் குறைத்தல் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளுடன், மீட்சி வேகத்தை ஆதரிக்கும்.

சேவைகள்:

• 2021-22-ம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சேவைகளின் மொத்த மதிப்புக் கூட்டு பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைத் தாண்டியது; இருப்பினும், வர்த்தகம், போக்குவரத்து போன்ற தீவிர தொடர்பு தேவைப்படும் துறைகளின் மொத்த மதிப்புக் கூடுதல்  பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்குக் கீழே இன்னும் உள்ளது.

ஒட்டுமொத்த சேவைத் துறை மொத்த மதிப்புக் கூடுதல் 2021-22-ல் 8.2 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல்-டிசம்பர் 2021-ல், ரயில் சரக்குகளின் அளவு பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைத் தாண்டியது, அதே காலகட்டத்தில் விமான சரக்குகள் மற்றும் துறைமுக போக்குவரத்து பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைகளை எட்டின. உள்நாட்டு விமான மற்றும் ரயில் பயணிகள் போக்குவரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையின் தாக்கம் முதல் அலையை விட பெரிதும் குறைவு என்பதை இது காட்டுகிறது.

• 2021-22-ம் ஆண்டின் முதல் பாதியில், 16.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிக அந்நிய நேரடி முதலீட்டை சேவைத் துறை ஈர்த்தது - இந்தியாவிற்குள் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடுகளில் இது கிட்டத்தட்ட 54 சதவிகிதம் ஆகும்.

ஐடி-பிபிஎம் சேவைகளின் வருவாய் 2020-21-ல் 194 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, அதே காலகட்டத்தில் 1.38 லட்சம் பணியாளர்களை இத்துறை சேர்த்தது.

ஐடி-பிபிஓ துறையில் தொலைத்தொடர்பு விதிமுறைகளை நீக்குதல் மற்றும் விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடுதல் ஆகியவை அரசின் முக்கிய சீர்திருத்தங்களில் அடங்கும்.

மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதியின் சர்வதேச தேவை அதிகரித்ததால் 2020-21 ஜனவரி-மார்ச் காலாண்டில் சேவைகள் ஏற்றுமதி பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைத் தாண்டியது, 2021-22-ன் முதல் பாதியில் 21.6 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, உலகின் 3-வது பெரிய புதிய தொழில்கள் தொடங்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. 2016-17-ல் 733 ஆக இருந்த புதிய அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில்களின் எண்ணிக்கை 2021-22-ல் 14000 ஆக அதிகரித்துள்ளது.

• 44 இந்திய புதிய தொழில்கள் 2021-ம் ஆண்டில் யூனிகார்ன் (1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு உள்ள) அந்தஸ்தைப் பெற்றுள்ளன. ஒட்டுமொத்த யூனிகார்ன்களின் எண்ணிக்கை 83 அதிகரித்துள்ளது, அவற்றில் பெரும்பாலானவை சேவைத் துறையில் உள்ளன.

சமூக உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு:

• 16 ஜனவரி 2022-ன் படி 157.94 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன; இதில் 91.39 கோடி முதல் டோஸ் மற்றும் 66.05 கோடி இரண்டாவது டோஸ் ஆகும்.

பொருளாதார மீட்சியின் காரணமாக, 2020-21-ன் கடைசி காலாண்டில் வேலைவாய்ப்பு குறியீடுகள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பின.

மார்ச் 2021 வரையிலான காலாண்டு கால தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளின்படி, பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நகர்ப்புறத் துறையின் வேலைவாய்ப்பு ஏறத்தாழ பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டுள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தரவுகளின்படி, வேலைகளை முறைப்படுத்துதல் இரண்டாவது கொவிட் அலையின் போது தொடர்ந்தது; வேலைகளை முறைப்படுத்துவதில் கொவிட்டின் பாதிப்பு முதல் அலையின் போது இருந்ததை விட மிகக் குறைவு.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் சமூக சேவைகளுக்கான (சுகாதாரம், கல்வி மற்றும் பிற) செலவினம் 2014-15-ல் 6.2 % என்பதிலிருந்து 2021-22-ல் 8.6% ஆக அதிகரித்துள்ளது (பட்ஜெட் மதிப்பீடுகள்)

 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5-ன் படி:

* 2015-16-ல் 2.2 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் 2019-21ல் 2 ஆகக் குறைந்துள்ளது.

* 2015-16 ஆண்டை விட 2019-21-ல் குழந்தை இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் மருத்துவமனையில் மகப்பேறுகள் மேம்பட்டுள்ளன.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், 83 மாவட்டங்கள் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்புகள் கொண்ட மாவட்டங்களாக மாறியுள்ளன.

பெருந்தொதொற்றின் போது கிராமப்புறங்களில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.



(Release ID: 1793914) Visitor Counter : 11082