பிரதமர் அலுவலகம்

பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை தொடக்க விழாவில் பிரதமர் உரையாற்றினார்


“இசை நமது உலகளாவிய கடமைகளை தெரிந்து கொள்ள வைக்கும் ஊடகமாகவும், உலகப் பற்றுகளை கடக்க உதவுகிறது”

“யோகா தினத்தின் அனுபவம் இந்திய பாரம்பரியத்திலிருந்து உலகம் பயனடைந்ததை உணர்த்துகிறது, இந்திய இசையும், மனித மனத்தின் ஆழம் வரை சென்றடையும் திறனைக் கொண்டுள்ளது”

“உலகின் ஒவ்வொரு மனிதரும் இந்திய இசையைப் பற்றி தெரிந்து கொள்ளவும், கற்கவும் அதன் பலன்களைப் பெறவும் உரிமையுடையவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டியது நமது பொறுப்பாகும்”

“அனைத்து இடங்களிலும் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய யுகத்தில் இசைத் துறையிலும், தொழில்நுட்ப, ஐடி புரட்சி அவசியமாகும்”

“இன்று காசியைப் போல நாம் நமது கலை மற்றும் கலாச்சார மையங்களை மறுஉருவாக்கம் செய்து வருகிறோம்”

Posted On: 28 JAN 2022 4:36PM by PIB Chennai

இந்திய சாஸ்திரிய சங்கீதத்தின் நிபுணரான பண்டிட் ஜஸ்ராஜ் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். பண்டிட் ஜஸ்ராஜின் நித்தியமான இசை ஆளுமை பற்றி குறிப்பிட்ட பிரதமர், அவரது பெருமைமிகு பாரம்பரியத்தை பண்டிட் சாரங் தேவ் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக தெரிவித்தார். பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை தொடக்க விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்.

இந்திய இசை பாரம்பரிய வல்லுனர்கள் வெளியிட்ட விசாலமான ஞானம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். இசையின் மகத்துவத்தை உணரும் ஆற்றல் குறித்து குறிப்பிட்ட திரு.மோடி, இந்த வகையில் இந்தியாவின் சாஸ்திரிய இசை பாரம்பரியம் மிகச் சிறப்பானது என்று கூறினார். “இசை நமது உலகளாவிய கடமைகளை தெரிந்து கொள்ள வைக்கும் ஊடகமாகவும், உலகப் பற்றுகளை கடக்க உதவுகிறதுஎன்று பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் மிக வளமான கலை, கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதை பண்டிட் ஜஸ்ராஜ் அறக்கட்டளை லட்சியமாக கொண்டுள்ளது என்று பிரதமர் பாராட்டினார். இந்த தொழில்நுட்ப யுகத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் குறித்து அறக்கட்டளை கவனம் செலுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். முதலாவதாக இந்திய இசை உலகமயமாக்கல் சூழலில் அதன் அடையாளத்தை உருவாக்க வேண்டும். யோகா தினத்தின் அனுபவம் இந்திய பாரம்பரியத்திலிருந்து உலகம் பயனடைந்ததை உணர்த்துகிறது, இந்திய இசையும், மனித மனத்தின் ஆழம் வரை சென்றடையும் திறனைக் கொண்டுள்ளது. ““உலகின் ஒவ்வொரு மனிதரும் இந்திய இசையைப் பற்றி தெரிந்து கொள்ளவும், கற்கவும் அதன் பலன்களைப் பெறவும் உரிமையுடையவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டியது நமது பொறுப்பாகும்என்று அவர் கூறினார்.

இரண்டாவதாக அனைத்து இடங்களிலும் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய யுகத்தில் இசை துறையிலும், தொழில்நுட்ப, தகவல் தொழில்நுட்பப் புரட்சி அவசியமாகும் என்று பிரதமர் கூறினார். இசைக்காக தங்களை அர்ப்பணித்துள்ள ஸ்டாட் அப்-கள் இந்திய இசைக்கருவிகள் மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாக கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காசியை போல கலை, கலாச்சார மையங்களை மறுஉருவாக்கம் செய்யும் முயற்சிகள் குறித்து அவர் விளக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கையை நேசிக்கும் தன்மையில் இந்தியா வைத்துள்ள நம்பிக்கையை உலகிற்கு உணர்த்தியுள்ளதாக பிரதமர் கூறினார். “பாரம்பரியத்துடன் கூடிய இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அனைவருக்குமான முயற்சிகள் சேர்க்கப்பட வேண்டுமென்று கூறி அவர் உரையை நிறைவு செய்தார்.

********



(Release ID: 1793304) Visitor Counter : 158